சிறுகதை - அதிசயம் - சிவரஞ்சனி
அது ஒரு பௌர்ணமி தினம் !
சில சினிமாக்களில் வரும் பௌர்ணமி தினங்களில் பல அமானுஷ்யங்கள் நிகழும் .இன்று மித்ராவின் வாழ்வில் என்னென்ன நிகழப்போகிறதோ, காண்போம் வாருங்கள்.
மித்ராவும் அவளுடைய குடும்பத்தினரும் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
மித்ராவிற்கு புகைப்படங்கள் எடுப்பதில் மிகுந்த ஆர்வம்.தன்னை பி.சி.ஸ்ரீராம் போல் எண்ணிக்கொண்டு,எங்கு சென்றாலும்,எதைப் பார்த்தாலும் புகைப்படம் எடுப்பாள்.
அத்தகையவள் இத்தகு எழில்மிகு இயற்கைச் சூழல் கிடைத்தால் விடுவாளா என்ன?
தன்னையும் இயற்கையையும் சேர்த்து நிறைய புகைப்படங்கள் எடுத்தாள்.அவளது திறமையால்,இயற்கையே சற்று எழில் கூடித்தான் தெரிந்தது புகைப்படங்களில்.பாவம் இதனால் விளையப்போகும் பின்விளைவுகளை அவள் அறியாள்.
கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவி மிகவும் பிரசித்தி பெற்றது.வருடம் முழுவதும் இந்த அருவியில் நீர் வற்றாது என்றும்,பார்ப்பதற்கு ஆகாயத்திலிருந்தே கொட்டுவது போன்று தோற்றம் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.மேலும் இது மூலிகை நீர் என்றும்,சில வியாதிகளை குணப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.
மித்ராவின் குடும்பத்தினர் இவ்வருவியில் குளிக்கச் சென்றனர்.அவளையும் அழைத்தனர்.எழில் கொஞ்சும் அருவியைப் புகைப்படம் எடுக்கும் ஆவலில் மித்ரா, அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டாள்.பாவம் அவர்களுடன் சென்றிருந்தால் கூட பிரச்சினையில் சிக்கியிருக்க மாட்டாள்.
அருவியைப் புதுப்புது கோணங்களிலும்,அழகாவும் புகைப்படம் எடுக்க இடமும் வலமும்,முன்னும் பின்னும் நகர்ந்து,ஏறி இறங்கி,அமர்ந்து ,என அதில் மூழ்கிப்போனாள்.
அவ்வாறு பின்னால் நகரும்போது எதிலேயோ இடித்துக்கொண்டாள்.திரும்பி பார்த்தால்,அங்கே மிக அழகிய சிற்பம் ஒன்று இருந்தது.ஒரு கம்பீரமான ராணியின் சிலை.
இது எவ்வாறு இங்கே தனியே வந்தது என்று நினைத்துக்கொண்டே,அதையும் புகைப்படம் எடுத்தாள்.மிகவும் நேர்த்தியாக வடிக்கப்பட்டிருந்த அச்சிலையையும் எல்லாக் கோணங்களிலும் படம் எடுத்தாள்.
அவ்வாறு எடுக்கும் பொழுது அதனை உற்று நோக்கினால்,அது அவளது சாயலில் இருந்தது.இதனைக் காட்டி தன் தோழியரிடம் பெருமை பீற்றிக்கொள்ளலாம் என்று திட்டமிட்டாள்.ஆனால் இறைவனின் திட்டம் வேறு என்பதை அவள் அறியாள்.
எடுத்த படங்களை அழகு பார்க்க எண்ணி,கைபேசியைப் பார்த்தாள்.அதில் தெரிந்ததைப் பார்த்து அதிர்ந்தே போனாள்.கண்ணைத் தேய்த்துவிட்டுத் திரும்ப பார்த்தாலும் அவ்வாறே தெரிந்தது.பதறி,பயந்து திரும்பினாள்.அங்கே அருவி இல்லை.அச்சத்தின் உச்சியில் சுற்றும் முற்றும் பார்த்தாள்,அங்கே இருந்த சிலையும் அங்கே இல்லை இப்போது.மயக்கத்தில் நழுவிச் சரிந்தாள்.
மீணடும் அவளுக்கு விழிப்பு வந்து பார்க்கும் பொழுது நன்றாக இருட்டி விட்டிருந்தது.பயத்தில் அவள் உடல் நடுங்கி வியர்த்துக் கொட்டியது.ஏனோ இந்த முறை,பயந்தாலும் மயங்கவில்லை அவள்.
சற்று நேரத்தில் சுதாரித்துக்துொண்டு அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கத் துவங்கினாள்.சுற்றும் முற்றும் பார்த்தாள்.எங்கு நோக்கினும் வனமே தெரிந்தது.பௌர்ணமி நிலவு வழக்கத்தை விடவும் பிரகாசமாக வெள்ளி போன்று ஜொலித்துக் கொண்டிருந்தது.
அது ஆறுதல் அளித்தாலும்,இனம் புரியாத ஒரு அமானுஷ்ய உணர்வையும் தூண்டி கிலி கிளப்பியது.
அவள் கைபேசி அவள் கையிலேயே தான் இருந்தது.ஆர்வத்துடன் அதை நோக்கினாள்.ஆனால் அது அணைந்து கிடந்தது.
அப்பொழுதான் அவளுக்கு ஒரு பொறிதட்டியது.கேரளாவிலும்,கொடைக்கானலிலும் உள்ள மதிகெட்டான் சோலையைப் பற்றி இவள் கேள்வியுற்றிருக்கிறாள்.ஒரு வேளை அதே போன்றதொரு மதிகெட்டான் சோலை இங்கும் இருக்குமாய் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தாள்.
அந்த சோலைக்குள் சென்றால்,அங்கே உள்ள ஒரு பூவின் நறுமணத்தை முகரும்பொழுது,மதி மயங்கி,வந்த வழியும் மறந்து,தன்னையும் மறந்து சுற்றித் திரிவர் என்றும் கேள்வியுற்றிருக்கிறாள்.
அதனால் தான் ஏதேதோ தோன்றி மயக்கமும் வந்தள்ளது என்று நம்பினாள் நிகழப்போவதை அறியாமல்.
எப்படியேனும் இந்த சோலைப் பகுதியைத் தாண்டிவிட்டால் போதும்,யாரிடமாவது உதவி கேட்டு இல்லம் திரும்பிவிடலாம் என்று எண்ணினாள்.
ஏதேனும் ஒரு திசையில் தொடர்ந்து நேர்கோட்டில் நடந்து சென்றால் சோலையை விட்டு வெளியில் சென்று விடலாம் என்று யோசித்தாள்.சுற்றி சுற்றி ஒரே இடத்திற்கு வராமல் இருக்க தூரத்தில் தெரியும் ஏதேனும் ஒரு மரத்தை அடையாளம் வைத்து வைத்து நடப்பது என்று முடிவு செய்தாள்.
இப்பொழுது ஏன் மயக்கம் வரவில்லை ,எவ்வாறு குழப்பம் இல்லாமல் மதி வேலை செய்கிறது என்று சிந்திக்கவில்லை அவள்.