கவிதை சிறுகதை - பிரிவாற்றாமை - நர்மதா சுப்ரமணியம்
தனிமை சிறை வாசத்தில் அவள்...
மனம் எங்கிலும்
அவன் வாசமே அவளுக்கு...
அவனின் வாசம்
தன் வசம் இழக்கச் செய்ய
கண்களில் கண்ணீர் கோடுகள்...
இரண்டு மாத மண வாழ்வில்
அவனின்றி அவள் தனிமையில்
கழிக்கும் இரவிது...
எண்ணங்கள் யாவிலும் திண்ணமாய் அவளவனே....
ஓரிரவே தீரா நாளாய் பயணிக்கையில்
எங்ஙனம் தாங்குவாள் பெண்ணவள்
வருடக்கணக்கான பிரிவை....
அவனை கண்ட நொடி..
இனிக்க இனிக்க பேசிப்பழகி
தேன் மிட்டாயாய்
அவளுள் காதலாய்
அவன் ஊடுருவிய நாட்கள்
விரிகிறது மனத்திரையில்....
வரமாய் தோன்றிய நாட்கள்
நினைவுகளாய் மனதின் இடுக்குகளில்...
அந்நினைவே மனதை
கொல்லும் ரணமாய்
விடியா இரவும் முடியா இரவானது..
இனி நிமிடமும் நகருமே நரகமாய்
அவனின்றி...
அவளை பிடித்தமில்லை எனக்கூறி
விலகவில்லை அவன்..
வார்த்தை சண்டையில்
சச்சரவாகி் பிரியவுமில்லை அவன்..
தலைகண யுத்தமும் நிகழவில்லை
அவர்களுக்கிடையில்..
உன் புன்னகை போதும் பெண்ணே
பொன் நகை வேண்டாமென
மணந்தவனாதலால்
வரதட்சனை பிரிவுமில்லை இது...
தம்பதிகள் தனித்து வாழும்
ஆடி மாத பிரிவுமில்லை இது...
மேலான துயரத்தில்
உழன்றிருந்தான்
அவளனவனும்
அவளின் நினைவில் தூரதேசத்தில்...
நன்மையிலும் தீமை இதுதானோ??
சுகத்தில் மறைந்திருக்கும் சோகமும் இதுதானோ??
லட்சங்கள் மேல் கொண்ட லட்சியத்திற்காய்..
குடும்ப பொறுப்பையேற்ற
கணவனாய்..
கிடைத்த வாய்ப்பை
பயன்படுத்துபவனாய்
அதில் பயன்பெறுபவனாய்...
சென்றுவிட்டான் அந்நியதேசத்திற்கு
பணிநிமித்தமாய்.....
அணுவிலும் அவளவன் நினைவாய்
திசுக்களிலும் அவன் நினைவை
சுவாசமாக்கி
காத்திருக்கிறாள் காரிகையும்
நுழைவிசைவிற்காய்
அவனுடன் பயணிக்க.....
{kunena_discuss:785}