மறுநாளும் அதுவே தொடர்ந்தது. இரண்டுநாள் பொறுத்துப் பார்த்துவிட்டு மூன்றாம்நாள் லன்ச் சமயத்தில் அவள் தனியாக இருக்கும்போது ஆரம்பித்தான் "அக்கா ..நா ஏதாவது தப்பு பண்ணிட்டனா .." என்றான்.
"இல்லையே ஏன் கேக்கறே ? "
"நா மூணுநாளா குட்மார்னிங் சொல்றேன். நீங்க பதிலே சொல்றதில்லை. இதனால எனக்கு எவ்வளோ அப்செட் ஆவுது தெரியுமா? அன்னிக்கி நாள் பூரா எதோ உற்சாகமில்லாமலே இருக்கு. நானும் எதேச்சையா நீங்க சொல்லலையோன்னு நெனச்சேன் ஆனா நீங்க எல்லோருக்கும் சொல்றீங்க ..எனக்கு மட்டும்தான் அவாய்ட் பண்றீங்க ..ஏன் " என்றான் தவிப்புடன்.
அவள் உடனே பதில் சொல்லவில்லை .சற்றுநேரம் ஜன்னலை வெறித்துவிட்டு அவனை நோக்கி திரும்பினாள். "நீ உனக்கு விஷ் பண்றவங்க எல்லோருக்கும் பதில் விஷ் பண்றியா?" என்றாள்
"எஸ்.. பண்றனே...என்னோட கொலீக் எல்லோருக்குமே நா பண்றேன் ..நீங்க கூட கவனிச்சியிருப்பீங்க இல்ல" என்றான் பதட்டத்துடன்.
"இல்லை...நீ ஒருத்தருக்கு பதில் விஷ் பண்றதேயில்லை. ஏன் திரும்பிக்கூட பாக்கறதேயில்லை. " என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.
"யாரை சொல்றீங்க ...எனக்கு ஒண்ணுமே புரியலையே ..."என்றான்.
“நம்ம ஆபீஸ் செக்யூரிட்டியைத்தான் சொல்றேன். அவர் தினமும் உனக்கு விஷ் பண்ரார். நீ அவருக்கு பதில் விஷ் பண்றதே இல்லை. அட்லீஸ்ட் நீ தலையை ஆட்டி அதை ஏத்துக்கிட்டா கூட போதுமே ...ஆனா நீ அதை கண்டுக்கறதே இல்லை. நானும் மூணு நாளா கவனிச்சு கிட்டுதான் இருந்தேன். அவருக்கு எப்படியும் நம்ம தாத்தா வயசு இருக்கும். நம்ம பதவிக்கு மதிப்பு கொடுத்து அவர் நமக்கு விஷ் பண்ரார். நாம அவர் வயசுக்கு மதிப்பு குடுக்கணுமா இல்லையா? நா உனக்கு பதில் சொல்லாததால் உன்னோட நாள் முழுக்க நீ பீல் பண்ணாமாதிரி அவரும் பீல் பண்ணித்தானே இருப்பார், நீ ஏன் அப்படி செய்தே ? ஒருவேளை நீ பணக்காரப் பையன் , அவர் ஏழைன்றதாலயா ? " என்றாள்.
அவன் சற்றுநேரம் யோசனை செய்தான். அவன் வேண்டுமென்றே செய்யவில்லை. அவருக்கு பதில் சொல்ல வேண்டும் என்று ஏனோ அவனுக்கு தோன்றவில்லை. அவ்வளவே. ஒருவேளை அவன் வளர்ந்த சூழ்நிலை கூட அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் தான் செய்தது அவரை நிச்சயம் பாதித்து இருக்கும் என்றே அவனுக்கு தோன்றியது.
“சாரிக்கா , இதை நீங்க என்கிட்டே நேரடியாவே சொல்லியிருக்கலாமே?” என்றான்
"நீ சொல்றது கரெக்ட்..நா இதை சொல்லியிருந்தாலே நீ திருத்திக்கிட்டு இருப்பே. ஆனா இந்த அளவுக்கு பீல் பண்ணி திருந்தி இருக்கமாட்டே . அதனால தான் நா உனக்கு விஷ் பண்ணலே." என்றாள் தர்ஷனா.
"அக்கா நா கொஞ்சம் திமிரா நடந்துக்கிட்ட மாதிரிதான் தெரியுது. நா வேணா அவர்கிட்டே மன்னிப்பு கேட்டுடவா .." என்றான்.
“ஓ..நோ... நா அப்படி சொல்லலை ..நாளைலேர்ந்து அவர் விஷ் பண்ணா பதிலுக்கு விஷ் பண்ணு..அல்லது தலையாட்டி அக்செப்ட் பண்ணிக்கோ ...அதுபோதும் ... ஒரு தம்பியா நீ எனக்கு அணிகலன்கள் வாங்கி கொடுக்கறே. அதை நானும் ஏத்துக்கறேன், அது என் தோற்றத்துக்கு அழகு செய்யுது. , அதே போல நா சொல்ற இந்த நடவடிக்கைகள் அதாவது எளியவர்களை மதிப்பது உன் குணத்துக்கு அழகு செய்யும் அணிகலன் தான். ஒரு அக்காவா நா உனக்கு இதை சொல்றேன் " என்றாள்.
மறுநாள் காலை ஆபீஸ் வந்தவன் செக்யூரிட்டியை கவனித்தான். அவருக்கு எப்படியும் அறுபது வயதிருக்கும். அவன் தாத்தாவுக்கும் அந்த வயதுதான்.
அவனைப் பார்த்ததும் ஒரு தயக்கம் அவர் முகத்தில் தெரிந்தது. அவன் பதில் சொல்வானா என்ற சந்தேகத்துடன் மெதுவாக தயங்கியபடி “குட்மார்னிங் சார்” ..சொன்னவரை நோக்கி தலையாட்டி பதிலுக்கு “குட்மார்னிங் “ என்று புன்னகைத்தான்
வாயெல்லாம் பல்லாக அவர் ஆச்சர்யத்துடன் நோக்குவதை சந்தோஷத்துடன் கவனித்தபடி உள்ளே சென்றான்.
மாடியிலிருந்து இதை கவனித்துக் கொண்டிருந்த சுதர்ஷனா பணிவு என்னும் அணிகலனை அணிந்ததால் ஏற்கனவே அழகனான ஆஷிக் மேலும் அழகாக தோன்றுவதை மகிழ்ச்சியுடன் நோக்கினாள்.
{kunena_discuss:785}