தாயும் மகனுமாய் கூட்டிணைந்த
பெரும்பான்மையாலும்...
தனிமைவாதியாய்
தன் எண்ணம்
வலிமையற்று போனதை
உணர்ந்த தந்தையும்
சம்மதித்தார் அத்திருமணத்திற்கு....
பகைமை அறுத்து
ஆணிவேராய்
தன் சொந்தத்துடன் இணைய
கிடைத்த வாய்ப்பை
பற்றிக்கொண்டார்
அவனின் அத்தையும்....
இனிதே திருமணம் நிறைவுபெற...
மீண்டும் வேலை தேடி
அங்கேயே பிழைப்பு தேடுவதாய்
கூறி பறந்தார் மாப்பிள்ளையும்
தன் மனையாளுடன்
அயல்நாட்டிற்கு....
அங்ஙணம் தங்களின் வீட்டிற்கு
வந்தடைந்த நிலையில்...
தன்னவளை கையில்
அள்ளிக்கொண்டு
தம்பதியராய் இல்லத்தில்
முதலடியை வைத்தான் அவனும்....
அவனின் கழுத்தில்
அவள் கைகள் மாலையாய்
கோர்த்திருக்க
அவள் காதில் உரைத்தான் அக்கள்வன்..
"நம் காதலில் ஜெயித்து விட்டோம்..
வாழ்நாள் முழுவதும் என் இதய சிறையில் அரசியாய் நீ வீற்றிருக்க
கவர்ந்து வந்துவிட்டேன் உன்னை
என் மனைவியாய் பத்திரம் எழுதி"
அவனின் காதலில்
முகம் விகசிக்க
இதழ் விரிய சிரித்தாள்
பெண்ணவளும்
தன்னை மணப்பதற்காய்
தன் வேலை பறிபோனதாய்
கூறி நாடகமாடிய
அவளவனை எண்ணி...
அவளின் தாய்மாமன்
கௌரவத்திற்காய்
இவள் குடும்பத்திடம்
பகைமை பாராட்ட...
ஊரறியா தங்கள் காதலை..
தான் உரைத்த பொய்யால்
காதல் மணமாய் அல்லாது
பெரியவர்கள் பார்த்து
செய்வித்த திருமணமாய்
மாற்றினான் அக்கள்வன்...
அவளின் மனதை மட்டுமே
கொள்ளையிட்ட
அவளின் கள்வன்....
{kunena_discuss:785}