சிறுகதை - நாணமோ??? - சிவரஞ்சனி
நவீன் மற்றும் நவீனா ஐ டி துறையில் வேலை பார்க்கும் நவீன யுவன் யுவதி. இருவருக்கும் சில வேறுபாடுகள் இருந்தாலும் ஒத்த உள்மனம் காரணமாக,அவர்களிடையே இருந்த நட்பு காதலாய் மலர்ந்தது.
வீட்டில் பேசி சம்மதமும் வாங்கி விட்டனர். இன்னும் மூன்று மாதங்களில் திருமணம்.
காதல் வந்த கணத்திலிருந்து நவீனாவிற்கு ஒரு புதிய பிரச்சினை. அதுவரையில் வெட்கம்னா என்ன? புது பிஸ்சா நேமா? ரேஞ்சில் இருந்தவளுக்கு இப்போது அடிக்கடி அவளவனைப் பார்க்கும் பொழுதிலெல்லாம் நாணம் எட்டிப் பார்க்கிறது.
அதற்கும் முன் அவள் பந்தாவாக அடிக்கடி சொல்வது "எனக்கெல்லாம் அந்த வெட்கம்லாம் வராது. என்னை பார்த்து பயந்து ஓடிரும். நான் இருக்கும் திசைப்பக்கம் கூட தலை வச்சு படுக்காது"
ஆனால் இப்போதோ அது வந்து இம்சிக்கிறது. அது அவளுக்கு இதமாகவே இருந்தாலும், அவன் கண்ணில் பட்டுவிட்டால் ஓட்டித் தள்ளிவிடுவான் என்று,அதை வெளிக்காட்டாமல் பாதுகாத்தாள்.
இருந்தும் ஒரு நாள் அது அவளுக்கு அழகாக ஆப்பு அடித்தது. அவன் இவளைப் பார்த்து,
" இந்த டிரஸ்ல நீ ரொம்ப அழகா க்யூட்டா இருக்க "
என்று கண்ணில் காதல் மின்ன பரவசத்துடன் கூறவே, இவளை ஆட்கொண்டது அழகிய நாணம்.
இதற்கும் முன் கூட இதே போன்று கூறியுள்ளான்தான். ஆனால் அப்போதெல்லாம் வெறும் விமர்சனமாகவே எதிர்கொண்டதால் எந்த தயக்கமும் இன்றி தேங்க்ஸ் சொல்லிவிட்டு சென்று விடுவாள்.
ஆனால் இன்றோ அந்த விமர்சனத்துடன் புதிதாக சேர்ந்த க்யூட் என்ற வார்த்தையும் , அவன் உணர்வும் கலந்து நிகழ்த்திய வினையின் விளைவில் இவளுக்குள் பல வேதியியல் மாற்றங்கள். அதனால் சில தடுமாற்றங்கள்.
இந்த திடீர் வேதி மாற்றத் தாக்குதலில், மொட்டவிழ்ந்த நாணப் புன்னகையை மறைக்க , அனிச்சையாய், ஆனால் அலுங்காமல் குலுங்காமல் அவள் நெற்றியில் கை வைத்துத் திரும்பி 'தேங்க்ஸ்' என்றாள்.
ஆனால் இந்தக் கள்ளத்தனம் கண்டுகொண்டான் அவள் உள்ளம் களவாடிய கள்வன்.
கண்மணியே!
உன் கைகள் மீது
கடும் கோபம் எனக்கு!
இந்த மண்ணின் மீது
மாளாத பொறாமை எனக்கு!
உன் வெட்கத்தின்
உரிமையாளன் நான்!
நான் கண்டு,
கொள்ளைபோக வேண்டிய
உன் வெட்கத்தை,
இடையில் புகுந்து
இவை கொள்ளை
அடித்துச் செல்கிறதே !!!
இவ்வாறு அவள் நாணத்தை வரி்களில் வடித்தான் தமிழார்வம் கொண்ட நவீன தலைவன். இது மேலும் அவள் நாணத்தை ஏற்றியது. இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு விறைப்பாக ,
" உன் கவிதை நல்லாத்தான் இருக்கு. பட் அதுல இருக்குற அந்த நாணம்லாம் இங்க இல்ல, எப்போவும் எதிர்பார்த்திராத " என்றாள்.
அவன் விடுவதாக இல்லை. 'பொய் சொல்லக் கூடாது காதலி 'என்று பாடிவிட்டு,
" இனிமேல் நீ அடிக்கடி வெட்கப்படுவ. அப்போல்லாம் நான் இப்டி கவிதை எழுதுவேன். ஒரு புக்கே போடற அளவுக்கு கன்டென்ட் குடுப்ப பாரு "
" NPK. ( நினைப்புதான் பொழப்பை கெடுக்குது ) சான்ஸே இல்ல."
" பெட் வச்சுக்கலாமா ?"
" தாராளமா "
" என்ன பெட்? "
" தோத்தவங்க ஜெயிச்சவங்களை உடனே கல்யாணம் செஞ்சுக்கணும் "
என்று கூறவே இருவரும் ஒருசேர சிரித்தனர் .
அடுத்த நாள் இருவரும் மதிய உணவிற்கு வெளியில் செல்வதாகத் திட்டமிட்டனர்.
அவள் அந்த உணவகத்தை அடைந்தபொழுது அங்கு அவன் அவளுக்காகக் காத்திருந்தான்.
வரும் வழியில் அவள் மைண்ட் வாய்ஸ்: " இந்த ஃப்ராடு நல்லா பிளான் பண்ணி தான் பெட் கட்டிருக்கான். ஏதோ ஒரு கதைல வருமே, குரங்கை நினைக்க கூடாதுனு சொல்லி அனுப்பினா குரங்கைத் தவிர ஒன்னும் மனசுல வராது.