(Reading time: 5 - 9 minutes)

சிறுகதை - பேய்க்கதை - ஜான்சி

night Forest

து ஒரு அமாவாசை இரவு. நிலவு லீவில் இருக்க இருள் கானகம் முழுவதும் படர்ந்து பரவி இருந்தது.

மற்ற நாளிலாவது அந்த காட்டுப்பாதையில் ஓரிரு நபர்கள் போவதும் வருவதுமாக இருப்பார்கள். ஆனால், அன்று அங்கே யாரும் காணப்படவில்லை.

காட்டில் பூச்சிகள் மட்டுமே அந்நேரம் ரீங்கரித்துக் கொண்டிருந்தது.இரவு 2 மணி....டிங் டிங் என இருமுறை எங்கோ அமானுஷ்ய ஒலி கேட்டது

அந்த நேரத்தில் தான் அந்த காட்டு வழியின் ஓரத்தில் அந்த கார் க்ரீச்சிட்டு நின்றது.

ஸாரிடா , எல்லோரையும் ஒவ்வொருத்தரா விட்டுட்டு வர , வர லேட்டாகிடுச்சு, நீ இந்த குறுகலான பாதையை கடந்தால்தான் அந்த பக்கம் இருக்கிற உன் வீட்டுக்கு போக முடியும்.

ஆனா என்ன செய்ய கார் போகிற அளவுக்கு வழி அகலமா இல்லையே?

பாத்துப் போடா...பயங்கர இருட்டா இருக்கு, நிலாவெளிச்சம் கூட இல்லையே?! சொன்னவன் முகத்தில் நிச்சயமாய் வருத்தம் இருந்தது.

பரவால்லடா, 

"ஆப்டர் லாங்க் டைம் வீ ஹேட் அ குட் டைம் "

சொல்லி விடைப் பெற்றான் அவன்.

அதுவரை மாலில் , தியேட்டரில் பையில் இருப்பதையெல்லாம் விட்டெரிந்து ஜாலியாக நேரம் கடத்தி காரில் வந்து இறஙகியவனுக்கு கார் கடந்துச் சென்றதும் வெளிச்சம் மறைந்து விட கும்மிருட்டில் கிலி பிடித்துக் கொண்டது.

ஒற்றைக் கட்டையான தன்னோடு ஊரிலிருந்து வந்து சில மாதங்களாக தங்கியிருக்கும் மாமா

" இந்த காட்டில ஒரு பேய் இருக்கிறதா சொல்லிக்கிறாங்கடா, நானும்தான் ராத்திரி ஜன்னல்ல நின்னு தேடிப் பார்க்கிறேன், எங்கே பார்க்க கிடைச்சா தானே" ஒரு முறை சலித்துக் கொண்ட போது " ஹா ஹா , கிழவனுக்கு லொல்லப் பாரு, இப்படி ஆசையா பார்க்க அதென்ன ஹீரோயினான்னு" சிரித்தது எல்லாம் இப்போது பயப்பந்தாக வயிற்றுக்குள் உருண்டது.

காடு.....

பேய்....

அம்மாடியோ அங்கே நடுவழியில நின்னுகிட்டு இருக்கிறது யாரு?

உடலின் ரோமம் எல்லாம் பயத்தில் சிலிர்க்க, உச்சி முடி விரைத்து நின்றதாக தோன்றியது.

என்ன வேண்டிக்கலாம்....

எந்த கடவுளை வேண்டிக்கலாம்....

வேலா, சூலாயுதமா, இல்ல சிலுவையா...நாம அன்னிக்கு பார்த்த படத்தில எதைப் பார்த்து பேய் பயப்பட்டுச்சு...மூளையை கசக்கி யோசிக்க ஒன்றும் ஞாபகம் வரவில்லையே...

என்னிக்காவது கோயில், கீயில் போயிருந்தா தானே பக்கி...மனம் உள்ளுக்குள் அர்ச்சித்துக் கொண்டு இருக்க கால்களோ தானாக விரைந்துக் கொண்டிருந்தது..

கண்ணெதிரில் ஒரு தாத்தா பேய்...அடப்பாவிகளா பார்த்தது தான் பார்த்தேன் கொஞ்சம் யூத்தா பார்த்திருக்க கூடாதா?

இந்த பேய பார்க்கத்தான் என் மாமா இவ்வளவு ஆசைப்படுறாரா? அந்த நேரத்திலும் நொந்துக் கொண்டான்.

இப்போது மனதில் ஒரு திட்டம் உருவாகி இருந்தது.

கண்ணை மூடிக் கொண்டு பேய் நிற்கும் நடு வழியை பார்க்காமல் ஓர வழியாக விரைந்து ஒரே ஓட்டமாக ஓடி வீட்டை அடைந்து விட வேண்டும்.

துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை...ஏதேது சம்பந்தம் இல்லாம என்னென்னவோ தோணுது....

படாரென ஓரமாய் ஓடி அந்த பேயை தாண்டி காலெடுத்து வைக்கும் போதுதான் அந்த கர்ப கொடூர குரல் கேட்டது,

நில்லுடா..

சர்வாங்கமும் ஆட நின்றான். கிடு கிடுவென உடலின் ஒவ்வொரு பகுதியும் நடுங்கியது.

புக்கு வாங்குரியா....கேள்வி கேட்ட பேய்க்கு இவன் தலை இவனுடைய சம்மதம் கேளாமலே மேலும் கீழும் ஆடி சம்மதித்தது.

எடு 500 ரூவாய...

என்னடா இது, இந்தியாவே டிஜிடல்க்கு மாறிப் போச்சு , இன்னும் பேய் கேஷ் லயே நிக்குதே..

..க்ரெடிட் கார்ட் செல்லுமா பேய் சார் எனக் கேட்க எண்ணியவன் தன்னை அடக்கிக் கொண்டான்.

எண்ணி எண்ணி சில்லறை எல்லாம் சேர்த்தே மொத்தம் 267 ரூபாய் தான் தேறியது...

அடக்கடவுளே , அப்படினா நான் இன்னிக்கு அவ்வளவுதானா....தந்தியடிக்க...

தொண்டையை சரிப்படுத்திக் கொண்டு பேசினாலும் காற்றுதான் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.