" சூ! சத்தம் போடாதே! பழசையெல்லாம் மறந்துடு! நான் இப்ப இந்த ஊர் போலீஸ் அதிகாரி. நீ இந்த ஊரிலே இருக்கிறதே, காலையிலே தான் தெரியும். அது உனக்கு நல்லதாப் போச்சு!..........."
" எனக்கு நல்லதா, கெட்டதான்னு நான்தான் முடிவு செய்யணும்! வந்த விஷயத்தை சொல்லு!"
"நல்லதுக்கு காலமில்லை, சரி, நான் என் கடமையை செய்யறேன்! கவனமா கேள்!
எனக்கு ரகசிய தகவல் வந்திருக்கு, இன்னிக்கி சில ரௌடிகள், உன் மகள் பூமாவை பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பறபோது, கடத்திண்டு போகப்போறாங்களாம்......"
"ஐயையோ! நான் இப்ப என்ன செய்வேன்? என் மகளை காப்பாற்ற யாரிருக்கா?"
" நான் அதுக்குத் தானே வந்திருக்கேன், கேள்! நான் இப்பவே அந்த ரௌடிகளை கைது பண்ணி உள்ளே தள்ளிடறேன், அது ஒண்ணும் பெரிய காரியமில்லே! அதுக்கு முன்பு, அந்த ரௌடிங்க உன் பெண்ணை ஏன் கடத்தப் போறாங்களாம், தெரியுமா?"
" இதிலே என்ன புதிர் இருக்கு, என் மகளை சீரழிக்கத்தான்........."
" அதுதான் இல்லே, அவளை ஒண்ணும் செய்யமாட்டாங்க, ஆனா அவளை விடுவிக்க ஒரு விலை கேட்பாங்க, அதுக்கு நீ ஒத்துக்கிட்டா, அவளை விட்டுவிடுவாங்க!"
" விலையா? நானே ஒரு ஓட்டாண்டி!"
" விலைன்னா, பணமில்லே! நீ! புரியலே? இந்த ஊரிலே உள்ள ஒரு பெரிய அரசியல்வாதிக்கு உன்மேல ஒரு கண்ணு! உன்னை மடக்கத்தான், இந்த நாடகம்!"
" ஒருத்தன்கூட இந்த உலகத்திலே யோக்கியனில்லையா? நீ போலீஸிலே உள்ள அயோக்கியன். என் கணவனை கொன்றவங்களை, காசு வாங்கிகிட்டு, தப்பிக்கவிட்டவன்! என்னை அடைய திட்டம் போடறவன், அரசியலில் உள்ள அயோக்கியன்! இப்படி எல்லா துறையிலும் அயோக்கியனாகவே நிறைஞ்சிருந்தா, நல்லவங்க வாழவே முடியாதா?"
" காஞ்சனா! நீயேன் மற்றவங்களைப் பற்றி கவலைப்படறே? நான் உன்னையும் உன் மகளையும் வாழ்க்கை முழுதும் காப்பாத்தறேன், உன் மகளை என் மகனுக்கே கட்டிவைக்கிறேன்! நீயும் நானும் ஜாலியா இருப்போம். சரியா?"
காஞ்சனாவின் கைபேசி ஒலித்தது. " ஓ! ஸ்கூலிலிருந்தா....! ஒரு நிமிஷம் பேசிட்டு வரேன்....."
போலீஸ் அதிகாரி, நிச்சயம் தன் வலையில் சிக்கிவிடுவாள் என்று குஷியாய் விசிலடித்துக்கொண்டு நின்றான்.
காஞ்சனா, பேசி முடித்துவிட்டு, வந்தாள்.
" காஞ்சனா! நீ இப்ப, உன் வேலையைப் பாரு! நான் போய் அந்த ரௌடிகளை கைது செய்யறேன், இரவு உன் வீட்டுக்கு வரேன்! ஓ.கே.?"
" அந்த ரௌடிகளை என் மகளே கவனிச்சுக்குவா! நீ உன் வேலையை பார்!"
காஞ்சனாவின் குரலில் இருந்த துணிவும், முகத்தில் தெரிந்த தெளிவும், அந்த அயோக்கியனை சிந்திக்கவைத்தது.
ஒருவேளை தான் சொன்னது அனைத்தும் பொய் என்பது காஞ்சனாவுக்கு தெரிந்திருக்குமோ?
சரி, இந்த முறை தப்பித்துவிட்டாள். அடுத்த முறை கிடுக்கிப்பிடியாய் போடுவோம், என முடிவெடுத்து,
" காஞ்சனா! எப்போது உதவி தேவைன்னாலும், சொல்லு! நான் செய்கிறேன்" என்று கூறியவாறே நகர்ந்தான்.
காஞ்சனா, காலேஜுக்கு லீவு சொல்லிவிட்டு, ஆஸ்பத்திரிக்கு ஓடினாள். அங்கே பூமா, இடது காலில் பெரிய கட்டுடன் படுத்திருந்தாள்.
" அம்மா! பயந்துட்டியா? ஒண்ணுமில்லே,வழுக்கி விழுந்ததிலே, கால் எலும்பிலே ஒரு சின்ன விரிசல்! கட்டு போட்டுண்டு, நாலுநாள் இப்படியே படுத்திருந்தா, விரிசல் சேர்ந்துடுமாம், என்ன, நாலுநாள் நான் இங்கேயே படுத்திருக்கணும், அவ்வளவுதான். எங்க டீச்சர் கொஞ்சங்கூட பதட்டப்படாமல், டாக்ஸியிலே என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தாள். உனக்கும் கைபேசியிலே தகவல் தெரிவித்தாள். ..........அம்மா! நங்கநல்லூர் வெங்கட்ராமன் ராசிபலன் கரெக்டாதான் சொல்லியிருக்கிறார்" என்று சொல்லி சிரித்தாள்.
கடவுள் தன்னை எப்படி சரியான நேரத்தில் துணிந்து முடிவெடுத்து, அந்த அயோக்கியனை விரட்ட, கைபேசி ஒலியின்மூலம் உதவி அனுப்பினார், என நினைந்து காஞ்சனா வியந்தாள்.
" பூமா! நாம், சில சமயங்களிலே, நமக்கு கெடுதல் ஏற்பட்டா, கடவுளை தப்பு சொல்றோம், பிறகுதான் தெரியறது, அதைவிடப் பெரிய தீமையிலிருந்து நம்மை காப்பதற்குத் தான், அப்படி செய்தார் என்பது புரிகிறது, இப்ப உனக்கு காலிலே கட்டுப்போட்டு படுக்கவைச்சது எதற்கு? இந்த நாலு நாளைக்குப் பிறகு நீ எழுந்து, நடக்கவும் ஓடவும் முடியறதுக்குத் தான்!
................பூமா! காலையிலே, நீ ஒரு வார்த்தை சொன்னியே, ஞாபகமிருக்கா, 'இதுவும் கடந்து போகும்'னு, அது நூற்றிலே ஒரு சொல்!"