சிறுகதை - அவசரப்பட்டுவிட்டேனோ! - ரவை
ச்சே! சிறுபிள்ளைத்தனமா, அவசரப்பட்டு, மிகப் பெரிய தவறு செய்துவிட்டேன்! செய்த தவறை திருத்திக்கொள்ளவும் வழியில்லை!
பொறியில் மாட்டிக்கொண்ட எலியாகிவிட்டேன்!
என் வாழ்வே, துவக்கத்திலேயே முடிந்துவிட்ட கதையாகிவிட்டதே!
என் கழிவிரக்கத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் வழியில்லை!
உறவு, நட்பு, சுற்றம் எல்லோரையும் பகைத்துக்கொண்டு எடுத்த முடிவல்லவா!
என்னால் முடியும் என்னும் அகம்பாவத்தினால், என் வாழ்வை அமைத்துக்கொள்ள எனக்கு உரிமை கிடையாதா என்கிற போராட்டத்தினால், மற்றவர்கள் அனவரும் சுத்த பத்தாம் பசலிகள், பிற்போக்கானவர்கள், நான் மட்டுமே மனித நேயத்துடன், பரந்த நோக்கத்துடன், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எனும் நம்பிக்கையுடனும் செயல்படுகிற பகுத்தறிவுவாதி எனும் திமிருடனும் உலகையே எதிர்த்து நின்று வெற்றி பெற்றுவிட்டதாக கர்வப்பட்டதெல்லாம் இடிந்து தரைமட்டமாகி நான் இப்போது பாதாளத்திலிருந்து உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.
"பை" என்ற குரல் கேட்கிறது, என் கலப்புத் திருமணக் கணவன் தன் அலுவலகத்துக்கு கிளம்பிச் சென்றுவிட்டான்! நேரம் இப்போது இரவு ஏழரை மணி! அவனுக்கு நைட் டியூடி! நாளை காலை வீட்டுக்கு எட்டுமணிக்குத்தான் திரும்புவான்!
உலகத்திலேயே இல்லாத அதிசயமாக, இவனுக்கு மட்டும் மாதம் முப்பது நாளும் நைட் டியூடி! கேட்டால், அமெரிக்காவில் வாழ்கிற வாடிக்கையாளர்களுக்கு இது பகல் நேரமாம்! அவர்கள் சௌகரியத்துக்கு வேலை செய்தால்தான், டாலரில் பணம் கிடைத்து, விரைவில் நாம் செல்வந்தர்களாகி நம்மை எதிர்த்த கூட்டத்தின் முன்னே, தலை நிமிர்ந்து, பெருமையுடன் வாழமுடியும் என்கிறான்.
ஒருவித்த்தில் பார்த்தால், அவன் கூற்றில் யதார்த்தமும் நியாயமும் இருப்பதை என்னால் உணரமுடிகிறது.
ஆனால், தற்சமயம், என் இளமைப் பருவத்தில், எனக்கு கிட்டாத இன்ப வாழ்க்கை, பின்னர் முதியவளானபின், கிடைத்து என்ன பயன்? அது மட்டுமா? குழந்தைகள் பிறந்து குடும்பம் விரிவடைந்தபிறகு, காதல் என்பதெல்லாம் கத்திரிக்காயாகிவிடாதா?
நீங்களே நியாயத்தை சொல்லுங்கள்! நான் காலை ஒன்பது மணிக்கு என் அலுவலகத்துக்கு கிளம்பியாகவேண்டும். மாலையில் வீடு திரும்ப, ஏழு மணியாகிவிடும்!
நான் வீட்டுக்குள் நுழையும்போது, அவன் அலுவலகம் கிளம்பிக்கொண்டிருப்பான். அதுபோல, காலையில், அவன் வீடு திரும்பும்போது, நான் அலுவலகம் கிளம்பிக்கொண்டிருப்பேன்.
வெட்கக்கேடு! இருவரும் ஒருநாள்கூட சேர்ந்து சாப்பிட்டதில்லை!
எனக்காவது, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை! அவனுக்கு வாரத்தில் ஏழுநாளும் வேலை! ஞாயிறன்று வேலை செய்தால், இருமடங்கு சம்பளம் தருவார்கள். கொள்ளை பணம்! அதை இழக்க அவனுக்கு மனமில்லை!
அவனுடைய வெறித்தனமான ஒரே குறிக்கோள்: " நம்மை ஒதுக்கிவைத்து ஏளனப்படுத்திய இந்த சமுதாயத்தில், விரைவிலேயே பெரிய செல்வந்தனாக, பெரிய தொழிலதிபராக, என்கீழே நூறுபேர் வேலைபார்க்கும் கம்பெனி முதலாளியாக வாழ்ந்து காட்டுகிறேன், அப்போது பார்! எல்லோரும், இல்லாத உறவெல்லாம் கொண்டாடி, நம்மிடம் வருவார்கள். அதுதான் நம் இருவரின் இன்றைய கஷ்டங்களுக்கு அருமருந்து!"
அதெல்லாம் கேட்க இனிமையாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்கு நான் இன்றைக்கு தருகிற விலை, இனிமையான வாழ்நாட்கள் அல்லவா!
எதையெல்லாம் கனவுகண்டு, அவனை என் துணைவனாக தேர்ந்தெடுத்தேனோ, அதை உங்களுக்கு சொன்னால்தானே, என் இன்றைய ஆதங்கம், ஏமாற்றம், கழிவிரக்கம் உங்களுக்கு புரியும்!
முதன்முதலில் நான் அவனை சந்தித்தது, ஒரு பாட்டுப் போட்டியில்!
மெல்லிசை, திரையிசை போட்டி!
அவன் பாடிய பாட்டு, 'கொஞ்சநேரம் கொஞ்சலாமா?'. இனிமையான குரல்! பி.பி.ஶ்ரீனிவாஸ் குரல்!
அரங்கம் எழுந்து நின்று அவன் பாட்டுக்கு கரவொலி செய்தது!
என் தன்னம்பிக்கை, துணிவு எல்லாம் அந்த கரவொலியில் கரைந்து போனது.
துரதிர்ஷ்டவசமாக, அவனுக்கு அடுத்த போட்டியாளராக நான் அழைக்கப்பட்டேன். என் டென்ஷன் இன்னும் கூடுதலாயிற்று. உடலில் வியர்த்துக் கொட்டியது, முகத்தில் வியர்வை வழிந்தது!
தடுமாறிக்கொண்டே, மேடையேறியபோது, கீழே விழவிருந்த என்னை, சமயத்தில், கைகொடுத்து உதவியவன் அவன். என் காதருகில் 'தைரியமா பாடு! யூ வில் வின்!' என்று கூறி உற்சாகப்படுத்தினான்.
அவன் சொற்கள் என் உடலில் மின்சாரத்தை பாய்ச்சியதுபோல் இருந்தது!
அவனை நிமிர்ந்து பார்த்தேன். அவன் தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டி வாழ்த்தினான்.