" போட்டி போடற பொம்பளை நடத்தை கெட்டவளாம், அவளை போட்டி போடவைச்சதே அவளை வைப்பாட்டியாக வைச்சிருக்கிற எதிர்க் கட்சிக்காரனாம்! ஆளுங்கட்சி வாக்குகளை குறைக்க, அவளை நிற்கவைத்து பெண்கள் ஓட்டை பிரிக்க செய்திருக்கிற சதித்திட்டமாம்! அதனாலே, நான் அந்தப் பெண்ணுக்கு போடற ஓட்டுனாலே அந்தப்பெண்ணும் ஜெயிக்கப்போறதில்லே, எதிர்க்கட்சிக்குத்தான் உதவப்போகுது, அதனாலே, நரி, வலம் போனாலென்ன, இடம் போனாலென்ன, மேலே விழுந்து புடுங்காம இருந்தா சரின்னு, வீட்டிலேயே முடங்கிக் கிடப்போம்னு சொல்றாரு..........அப்பா! இந்த பிரச்னைக்கு நீங்க ஒரு முடிவு சொல்லுங்க!"
" என் பிள்ளை சொல்வதுபோல, எல்லா அரசியல் கட்சிகளுமே தீயவர்களின் பிடியில் சிக்கிய கொள்ளிக்கட்டை ஆயிடிச்சி! நாம ஓட்டுப்போட போகாம வீட்டிலே இருந்தா, அந்த ஓட்டையும் அந்த களவாணிப் பசங்க கள்ள ஓட்டுப் போட்டு ஜெயிச்சிடுவாங்க! பெண்களுக்கு நீதி கிடைக்கலை என்பதையும் எப்படியாவது பதிவு பண்ணியாகணும், இல்லையா?"
" ஆமாம்ப்பா!"
"ஒண்ணு பண்ணுவோம்! வாக்குச்சாவடிக்குப் போவோம், ஆனா, ஒரு வேட்பாளனுக்கும் ஆதரவா ஓட்டு போடமாட்டோம்.........."
" அதெப்படிப்பா?"
" அதுக்குத்தானே, 'நோடா'னு ஒண்ணு வைச்சிருக்காங்க! அதாவது போட்டியிடுகிற எவருமே லாயக்கில்லைனு சொல்றதுக்கு யார் விரும்பினாலும், அவங்க அந்த 'நோடா' விலே போடலாம். முடிவு வெளியிடும்போது, 'நோடா'விலே விழுகிற ஓட்டுக்களின் எண்ணிக்கை பொதுமக்களின் அபிப்பிராயத்தை வெளிச்சம் போட்டு காட்டும். இப்பல்லாம், இந்த 'நோடா'வுக்கு விழுகிற ஓட்டு எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது, அதனாலே சில கட்சிக்காரங்க தோற்றும் போயிருக்காங்க! இந்த 'நோடா'விலே விழுகிற ஓட்டு எண்ணிக்கையைவிட குறைவாக வாங்குகிற வேட்பாளர்களும் இருக்காங்க..........."
" அப்பா! இதை உங்க பிள்ளையிடம் சொல்லுங்க! நம்ம வீட்டிலே உள்ள நாலு வாக்குகளும் 'நோடா'வுக்கே!