சிறுகதை - இறைவனின் பதினோராவது அவதாரம் - ரவை
ஒருவனுக்கு தெரியாத பல விஷயங்களுக்காக, அவனோ அவளோ வெட்கப்படவேண்டாம், வேதனைப்படவேண்டாம், தலைகுனிய வேண்டாம்...........
ஆனால், ....................?
ஒருமுறை, பிரபல ஆன்மீக சிந்தனையாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி, அணுகுண்டுவை கண்டுபிடித்த உலகப்புகழ் விஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை சந்தித்தபோது, அவரிடம் கேட்டார்:
" நீங்கள் நிறைய ஆராய்ச்சி செய்துள்ளீர்கள், அவைகளிலிருந்து நீங்கள் தெரிந்துகொண்டது என்ன?"
ஒரு வினாடிகூட தாமதிக்காமல், விஞானி கூறினார்:
" எனக்கு என்ன தெரியாது என்பதுகூட எனக்கு தெரியாது என்பதை தெரிந்துகொண்டேன்" என்றார்.
அதனால், நமக்கும் விஷயங்கள் தெரியாது என்பதில் அவமானம் ஏதுமில்லை, ஆனால்...........
மகான் புத்தரை ஒருமுறை ஒரு வழிப்போக்கன், தான் செல்லவேண்டிய ஊரின் பெயரை சொல்லி, அதை அடைய வழி கேட்டான். புத்தருக்கு அது தெரியாத காரணத்தால், விழித்தார். அந்த வழிப்போக்கன், துடுக்காக, " உனக்கு எல்லாம் தெரியும்னு எல்லாரும் சொல்லிக்கிறாங்க, இதுகூட உனக்கு தெரியலியே?" என்றான்.
" ஐயா! எனக்கு ஒன்றும் தெரியாமல், தெரிந்துகொள்ளத்தான் அலைந்துகொண்டிருக்கிறேன் எனும் உண்மையை நீ அவர்களிடம் சொல்லிவிடு" என்றார் புத்தர்!
ஆனால்,...............?
ஒருவன் தனது சொந்த ஊர் தெரியாமலிருக்கலாம், உற்றார், உறவினர் பெயர் தெரியாமலிருக்கலாம், தனது சொத்துக்களின் மதிப்பு தெரியாமலிருக்கலாம், ஆனால்.......?
ஆனால், பெற்ற தகப்பன் யார் என்று தெரியாமல் உலகத்தார்முன்னே, கூனிக் குறுகி அவமானப்பட்டு, நிற்கிறேனே, அந்த நிலை யாருக்குமே வரக்கூடாது!
என்னைவிட அதிக அவமானமும் தலைகுனிவும் என்னைப் பெற்ற தாய்க்குத்தான்!
அவளுக்குத் தெரிந்ததெல்லாம், அவளுக்கு பதினைந்து வயதில், பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, அவளை முன்பின் தெரியாத ஐந்துபேர் காரில் கடத்திக்கொண்டு போய் ஒரு மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில், மாற்றி மாற்றி, சீரழித்துவிட்டு, அவளை மயங்கிய நிலையில் அங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் என்பதுதான்!
காவல்துறையினர் வழக்கம்போல், தேடுவதாக நாடகமாடி நாட்களை கடத்திவிட்டு, வேறொரு கற்பழிப்பு நிகழ்ச்சியில் இதை மறக்கடிக்கச் செய்துவிட்டு ஓய்ந்தனர்.
ஏனெனில், சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் தலைவர்களின் உறவினர்கள் என்பதால்!
அது மட்டுமல்ல, என் தாயின் பெற்றோர், எழுதப் படிக்கத் தெரியாத ஏழைகள்! தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள்! அவர்களுக்காக பரிந்துபேச, இந்தக் காலத்திலேயே இல்லை, இருபது ஆண்டுகளுக்கு முன்பா இருந்திருக்க முடியும்?
காவல்துறையினர் தாமதப்படுத்தலாம், ஆனால் என் தாயின் கருவில் வளர்ந்த நான் சில மாதங்களில் என் தாயை காட்டிக் கொடுத்துவிட்டேன்!
அப்போது என் தாத்தா ஒரு முனிசிபல் குப்பை அள்ளும் தொழிலாளி! பாட்டியும், வீடுகளில் பாத்திரம் துலக்கி, வீடு பெருக்கி, துணி துவைத்துப் போடும் வேலைக்காரி!
அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. யாரோ சொன்னார்கள் என்று, என் தாயை பொது மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று, கருவை கலைக்க, ஏற்பாடு செய்தனர்.
நல்லவேளை, அந்த நேரத்தில், அன்னை தெரசாவைப் போல ஒரு சமூக சேவகி, என் தாயை ஒரு கிறித்துவ மடத்தில் சேர்த்து, என் தாயின் படிப்பும் தொடரவும் வழி செய்தாள்.
என் தாய், மடத்தின் தயவால், நன்கு படித்து எம்.ஏ. பட்டம் பெற்று பள்ளி ஆசிரியையாகி என்னை கௌரவமாக வளர்த்து வருகிறாள்.
ஆனால், என்கூடப் படிக்கும் மாணவர்களுக்கு, சில விஷமிகள் சொல்லிக்கொடுத்து, அவர்கள் என்னை சீண்டுகிறார்கள்.
நான் ஆரம்ப பள்ளி வகுப்புகளில் படித்துக்கொண்டிருந்தபோது, கூடப் படித்தவர்களும் சிறுவர்கள்! அதனால், என்னை வித்தியாசமாக, தாழ்வாக, ஏளனமாக யாரும் நடத்தவில்லை.
ஆனால் எட்டாம் வகுப்பில் தொடங்கிய சீண்டல், தற்போது பத்தாம் வகுப்பு வரை, தொடர்கிறது.
" உங்க அம்மா பேரு திரௌபதியா?" என்கிறான் ஒருவன்!
" இல்லடா, பாஞ்சாலி!" என்கிறான் இன்னொரு மாணவன்.
எல்லோரும் 'கொல்'என சிரிக்கிறார்கள், எனக்கு அவமானமாக இருக்கிறது!
அது மட்டுமா?
" ஏன்டா! உங்கப்பா பேரு என்னடா?" என்று கேட்கிறான், ஒருவன்.
" டேய்! நமக்கெல்லாம் ஒரு அப்பா, சுலபமா அவர் பேரை ஞாபகம் வைச்சுக்கிறோம், பாவம்டா பீடர்! அவனுக்கு அஞ்சு அப்பாக்கள்டா! எப்படிடா அவனுக்கு ஞாபகம் இருக்கும்?" என்று இன்னொருவன் அவனை திருத்துவதுபோல், என்னை குற்றுயிராக கொல்கிறான்!
எனக்கு அவர்களை அடித்து நொறுக்கவேண்டும் போல, ஆத்திரம் வருகிறது, அடிக்க முடியுமா? அவர்கள் கேட்பதில் தவறு இல்லையே!
வேறு யார்மீது தவறு? எனக்கு தெரியாத நிலையில், தாயிடம் நடந்ததை சொல்லி, அழுதேன்!