சிறுகதை - இப்படியும் நடக்குது! - ரவை
முத்தம்மாவுக்கும் அவள் புருஷனுக்கும் இடையே நல்ல புரிதல், ஒற்றுமை, நெருக்கம்!
ஆம், மாலை ஆறு மணிக்கு இருவரும் சாராயம் குடிக்க ஆரம்பித்தால், இருவரும் வயிறு காய, இரண்டு மகன்களும் ஆறுவயது மகளும் பசியில் வாட, மயங்கி விழுகிறவரையில், குடிப்பார்கள்!
முத்தம்மா, தினமும் காலையில் வீட்டுவேலை செய்யப்போனால், மதியம் மூன்று மணிக்குத்தான் திரும்புவாள். அதற்குப்பிறகுதான் சமைத்து மகளுக்கு தந்தபிறகு தானும் உண்பாள்.
அவள் புருஷன், மூட்டை தூக்கி பிழைப்பவன்! அவனும் காலையில் கிளம்பினால், கையில் சாராய புட்டியுடன் மாலை ஆறு மணிக்குத்தான் திரும்புவான்.
முத்தம்மாவின் தாய்மாமன்தான் அவன். அவளுக்கு கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறியபோது, வயது பதிமூன்று! மாமன் வயதோ, அதைப்போல் இருமடங்கு!
அக்கா மகள் ருது ஆவதற்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்ததால், அவனுக்கு வயது கூடிவிட்டது!
கிராமத்திலிருந்து வேலை தேடி இருவரும் சென்னை வந்து குப்பத்தில் இடம் பிடித்து, பதினைந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன.
முத்தம்மாவின் மூத்த மகனுக்கு பதினான்கு வயது, அவனைவிட அடுத்தவன் இரண்டு வயது இளையவன். அவன் பிறந்து ஆண்டுகள் கழிந்தபின்தான் மகள் பிறந்தாள்.
இரண்டு மகன்களும் பள்ளியில் மதிய உணவு உண்டு ஒரு வேளை பசியை தீர்த்துக்கொண்டார்கள். அடுத்த வேளைக்கு, முத்தம்மா மதியம் சமைத்ததில் மிச்சம் மீதி இருந்தால்தான்! இல்லையேல், பட்டினிதான்!
எத்தனை நாட்கள் இந்த கொடுமையை தாங்கிக்கொள்ள முடியும்?
இருவருமே ஒரு உணவு விடுதியில், டேபிள் க்ளீனராக வேலை பார்த்து வயிற்றை கழுவினார்கள். இரவு படுக்க, வீட்டுக்கு வரும்போது, பெற்றோரின் நிலைகண்டு தலையில் அடித்துக்கொண்டு, தங்கைக்கு கைவசம் உள்ள பணத்தில் பழமோ, பன்னோ வாங்கித் தருவார்கள்.
ஐவரும் தங்கள் நிலைபற்றி எந்தவித குறையுமின்றி, நாட்களை தள்ளினர்.
இறைவனுக்கு அதுகூட பொறுக்கவில்லை!
என்ன காரணத்தினாலோ, திடீரென முத்தம்மாவின் வாயிலிருந்து குமட்டுகிற அளவுக்கு, துர்நாற்றம் வரத் துவங்கியது!
அருகில் நெருங்கினாலே, வாந்தி வரும்!