அதன் உடனடி விளைவு, முத்தம்மாவின் சம்பாத்தியம் சூன்யமாகியது. அவள் வேலை பறிபோய்விட்டது. எந்த வீட்டில் அவள் துர்நாற்றத்தை தாங்கிக்கொள்வார்கள்?
அவர்களை விடுங்கள், தொட்டுத் தாலி கட்டிய புருஷனாலும், பெத்த பிள்ளைகளாலுமே தாங்கிக்கொள்ள முடியாமல், சொல்லிக் கொள்ளாமலேயே பிரிந்தனர்!
ஆறு வயது மகளைப்பற்றிய நினைவு அவர்களுக்கு இல்லையோ அல்லது தங்களால் அவளை காப்பாற்ற முடியாதென நினைத்தார்களோ, இறைவனுக்கே வெளிச்சம்!
குடிசையில் வயிறு காய, தாயும் மகளும் எத்தனை நாட்கள் வாழமுடியும்?
முத்தம்மா படுத்த நிலையிலே மயங்கிக் கிடந்தாள்!
குடிசையின் சொந்தக்காரன் தாமதமின்றி இருவரையும் குடிசையிலிருந்து வெளியேற்றினான். இருவரும் தங்கள் வாசத்தை பிளாட்பாரத்தில் அமைத்துக்கொண்டனர்.
அங்கேயும் நிம்மதியில்லை, போலீஸ் விரட்டும், வேறு இடம் நாடுவார்கள்.
ஆறு வயது சிறுமிக்கு வயிறு கிள்ளியதோடு, தன் தாயைப் பற்றியும் கவலை கொண்டாள்.
அவளுக்கு தெரிந்த ஒரே விஷயம், பிச்சை எடுப்பதே!
ஆனால், உண்மையைச் சொல்லி பிச்சை கேட்டதால், பரிதாப்ப்பட்டு நல்ல மனிதர்கள் காசு தந்தனர். அதில் கிடைத்ததை தனக்கும் தாய்க்கும் உணவு வாங்கிக்கொண்டு மயங்கிக்கிடக்கும் தாய்க்கு ஊட்டுவாள்.
இந்த இழிநிலை இறைவனுக்கே பொறுக்காமல், ஒரு சமூக சேவகரை அனுப்பிவைத்தான்.
அவர் குடிசைக்கு வந்து, தாயையும் மகளையும் ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டார்.
அங்கேயும் இரண்டாம் நாளே விரட்டிவிட்டார்கள்! ஏன் தெரியுமா? முத்தம்மாவின் வாயிலிருந்து வந்த துர்நாற்றத்தை அவர்களாலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை!
மீண்டும், மகள் பிச்சை எடுத்து தாய்க்கு பசியாற்றினாள்.
மறுபடியும் சிறுமி தெருவில் பிச்சையெடுப்பதைப் பார்த்த சமூக சேவகர், விஷயம் தெரிந்து, முத்தம்மாவை அரசு மருத்துவ மனையில் சேர்த்தார்.
அங்கேயும் இரண்டாம் நாளே, வேறேதோ காரணம் காட்டி முத்தம்மாவை விரட்டிவிட்டார்கள்.
மறுபடியும் தெருவில் ஆறுவயது சிறுமி பிச்சையெடுக்க, தாய் சுயநிலை இழந்து படுத்திருக்க, உலகம் இயங்குகிறது!
உயிரின் மதிப்பு பூஜ்யம்!
நம்மால் வேறென்ன செய்யமுடியும்?
அந்த சிறுமியை எங்காவது சந்தித்தால், உங்களால் முடிந்த தர்மம் செய்யுங்கள்!
( இது உண்மையில் நடந்த செய்தியின் அடிப்படையில் புனையப்பட்டது)