சிறுகதை - ஒண்ணுமே புரியலே, உலகத்திலே! - ரவை
நாடு முழுவதும் கொண்டாட்டம்! வாண வேடிக்கைகள்! இனிப்பு வினியோகம்! 'வாழ்க!' கோஷங்கள்!
இளைஞன் இனியனுக்கு எரிச்சலாக இருந்தது!
மக்களாட்சியில், பெருவாரியான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரோ, கட்சியோ ஆட்சிக்கு வருகிறது, என்கிறார்கள்!
அது உண்மையா?
" அப்பா! நம்ம தொகுதியிலே வெற்றி பெற்றவருக்கு ஆதரவாக எத்தனை சதவிகித மக்கள் ஓட்டு போட்டார்கள்?"
" முப்பத்துமூணு சதவிகிதம்!"
" அப்படின்னா, அவரை ஆதரிக்காமல், வேற யாருக்கோ ஆதரவாக ஓட்டு போட்டவங்க, அறுபத்தேழு சதவிகிதம், இல்லையா?"
"ஆமாம்!"
" மக்களாட்சியிலே, பெருவாரியான மக்கள் ஆதரிக்கிறவர்தானே, வெற்றி பெறவேண்டும், மூன்றில் ஒரு பங்கு மக்களால் ஆதரிக்கப்பட்டவர், எப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார்கள்?"
" நீ சொல்வது, இரண்டே நபரோ, அல்லது கட்சியோ போட்டி போட்டால் அதில் பெருவாரியான மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது சாத்தியம், இங்கேதான் அறுபத்துமூன்று பேரோ, பதினைந்து கட்சிகளோ போட்டி போடுகிறார்களே, எப்படி நீ சொல்கிறபடி தேர்ந்தெடுக்கமுடியும்?"
" அப்ப, இந்த நாட்டிலே நடக்கிறது மக்களாட்சியல்லன்னு ஒப்புக்கொள்கிறீர்களா? இந்த முப்பத்திமூணு சதவிகித மக்கள் நினைக்கிறதுதான் சட்டமாகிறது, உதாரணமா, இவங்க இந்த நாட்டை 'இந்துஸ்தான்'னு பெயர் மாற்றணும்னு சட்டம் கொண்டுவருவாங்க, அதை அறுபத்தேழு சதவிகித மக்களின்மீது திணிக்கிறதை மக்களாட்சியா எப்படி கூறமுடியும்?"
" போடா, புறம்போக்கு! உலகமே நம்ம நாட்டை தலைசிறந்த மக்களாட்சி நாடா புகழ்கிறது, உன் பார்வையை, புரிந்துகொள்ளுதலை, திருத்திக்கொள்!"
" இப்படித்தான், பல விஷயங்களில், காலம் காலமா தவறை சரியானதென்றும், சரியானதை தவறென்றும், அடித்துப் பேசி ஏமாற்றுகிறோம், ஏமாந்து போகிறோம்!"
" ஏய்! அதிபுத்திசாலி! உட்கார்! வேறெதிலே தப்பா சொல்கிறோம்?"
" காலடியில் இருக்கிற பூமியை, அசையாத, நகராத, நிலைமாறாத ஒன்று என்கிறோம், அது தப்பில்லையா?"