சிறுகதை - சிரித்து வாழவேண்டும்! - ரவை
அலைபேசியில், அப்பா கோபாலன் யாருடனோ கோபமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.
அம்மா, விஜயா, சமையலறையில், சோகமாக, சமைத்துக்கொண்டிருந்தாள்!
அக்கா லட்சுமி கையில் புத்தகம் இருக்க, ஆழ்ந்த சிந்தனையில் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள்.
வேலைக்காரி பாத்திரம் கழுவியவாறே, தன் குடிகாரக் கணவனை சபித்துக்கொண்டிருந்தாள்!
அவள் பெற்ற ஒரு வயதுக் குழந்தை, கையை, காலை உதைத்துக்கொண்டு, கூரையைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது!
இவைகளை கவனித்த தம்பி தனபாலுக்கு ஒரு கேள்வி மனதில் எழுந்தது:
அந்த ஒருவயது குழந்தையைப் போல, ஏன் மற்றவர்களால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை?
அலைபேசியில் பேசி முடித்த அப்பா, சமையலறைக்கு சென்று, அம்மாவிடம் பேசினார்:
" விஜி! கேட்டியா, உன் அண்ணன் சொல்கிற கதையை! அவன் மகள் திருமணத்துக்கு 'ஆன்லைனிலே அழைப்பிதழ் அனுப்பறேன், நேரே வந்து கூப்பிட நேரமில்லை, கல்யாணவேலை நிறைய இருக்கு,'ன்னு சொல்றான், நாம எல்லாரும் கட்டாயமா கல்யாணத்துக்கு முதல்நாளே வரணுமாம், எப்படி இருக்கு நியாயம்?......."
" சரி விடுங்க! கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாதமிருக்கு! போகப் போக என்ன நடக்குதுன்னு பார்ப்போம்!"
" உங்க அண்ணன் செய்கிற அநியாயத்தை, அவமரியாதையை, பணக்காரத் திமிரை, நீ ஒரு வார்த்தை அவனை தட்டிக் கேட்கமாட்டியா? நான் மட்டுமே அவனிடம் சண்டை போட்டு கெட்ட பெயர் வாங்கிக்கணுமா?"
" சரி, சரி, நானும் அண்ணனிடம் பேசறேன், நீங்க குளித்துவிட்டு கடைக்கு போகிற வழியை பாருங்க! இன்னிக்கி சீக்கிரமா போகணும்னு ராத்திரி சொன்னீங்களே........"
" ஆமாமாம், நல்லவேளை ஞாபகப்படுத்தினியே, இதோ கிளம்பிடறேன்......"
அப்பா நகர்ந்ததும், அக்கா அங்கே வந்து அம்மாவிடம் குழைந்தாள்.
" என்னடீ திடீர்னு குழையல்? என்ன வேணும்?"
" அம்மான்னா அம்மாதான்! டக்குனு புரிஞ்சிண்டு கேட்கிற பார்! அம்மா! நாம கட்டாயமா, மாமா வீட்டு கல்யாணத்துக்கு போகணும்மா!"
" ஏன்டீ! இந்த வீட்டிலே இளிச்சவாயன் நான் ஒருத்திதான் கிடைச்சேனா? இப்பத்தான், அப்பா வந்து, மாமா நேரிலே வந்து நம்மை அழைக்காத காரணத்தினாலே, போகவேண்டாம்னு சத்தம் போட்டுட்டு போறாரு, இப்ப நீ வந்து, கட்டாயமா போகணுங்கறே, சரி, எதுக்காக போகணுங்கறே?"
" இதென்னம்மா கேள்வி? ஒரு கல்யாணம்னா, ஜாலியா இருக்கும், நாலுபேரை பார்க்கலாம், பேசலாம், அதுக்குத்தான்!"
" இன்னும் ஒரு மாசமிருக்கு, பார்ப்போம்! நீ போய் காலேஜ் கிளம்பு, நேரமாகுது!"
அக்கா நகர்ந்ததும், வேலைக்காரி சுத்தம் செய்த பாத்திரங்களை எடுத்துவந்து வைத்தாள்.
" அம்மா! உன் முகத்துக்காகத்தாம்மா, இன்னிக்கி நான் வேலைக்கு வந்தேன், பாவம்! நீ கஷ்டப்படுவியேன்னு! இல்லேன்னா, என் உடம்புவலிக்கு மூணுநாள் லீவு போட்டிருப்பேன், புருஷன் ராத்திரி குடிச்சிட்டு அடி அடின்னு அடிச்சு, மிதி மிதின்னு மிதிச்சு உடம்பே நொறுங்கிப் போயிருக்கும்மா!"
" ஐயோ பாவமே! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க, சமையலை முடிச்சிட்டு வந்து காயத்துக்கு மருந்து தரேன்..........."
" அம்மான்னா அம்மாதான்! நிஜம்மா சொல்றேம்மா! உங்களைப்போல, எல்லாரிடமும் அன்பா பழகறவங்க யாரும் இல்லேம்மா!"
" ஏன்டீ, உன் குழந்தைக்கு பால் கொடுத்தியா?"
" மறந்தே போய்ட்டேம்மா! இதோ, போய் கொடுக்கறேம்மா!"
" நில்லுடீ, குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆயிடுத்தே, தாய்ப்பால் சுரக்குதா? இல்லேன்னா, பசும்பால் தரேன், கொடு!"
" ஏதோ கொஞ்சம் வருதும்மா! பால் கிடைக்குதோ இல்லையோ, குழந்தைக்கு என் மார்பிலே முட்டி சப்பணும், ..........."
வேலைக்காரி நகர்ந்ததும், அம்மா டைனிங் டேபிளில் சுடச்சுட சமைத்த உணவை கொண்டுவந்து வைத்தாள்.
கணவனுக்கும் மகளுக்கும் சாப்பிடும் தட்டை வைத்தாள். குடிக்க தண்ணீர் வைத்தாள்.
இருவரும் கடைக்கும் காலேஜுக்கும் போகிற அவசரத்தில் சாப்பிட்டுவிட்டு கிளம்பினர்.
" தனபாலு! என்னடா பண்றே? உனக்கு ஸ்கூல் கிடையாதா? கிளம்பலையா?"
" இன்னிக்கு பள்ளிக்கூடம் லீவு! நேற்று ஆண்டுவிழா நடந்தது இல்லே, மறுநாள் லீவு விடறது பழக்கம்!"
" சரி, குளித்துவிட்டு சாப்பிட வா! ரெண்டுபேரும் சேர்ந்து சாப்பிடுவோம்............."