சிறுகதை - ஆணியின் விலை 150 ரூபாய்! - ரவை
சென்னையில் ஒரு திருமணத்துக்குப் போய்விட்டு பெங்களூர் திரும்பிக்கொண்டிருந்தோம், காரில்!
அந்தப் பயணத்தின்போதுதான், எனக்கு ஒரு ஆணியின் விலை ரூபாய் 150 என்று புரிந்தது!
காலை ஏழுமணிக்கு சென்னையிலிருந்து கிளம்பினால், நெடுஞ்சாலையில் 325 கிலோமீட்டரில் உள்ள பெங்களூர் சேர, இடையில் சிற்றுண்டிக்கான நேரம் அரைமணி நேரம் சேர்த்து, ஏழு மணி நேரமாகும்.
டிரைவர் சீட் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் தூங்கக்கூடாது, ஏனெனில் அந்த தூக்கம் டிரைவரையும் பாதிக்கும். அதனால் இருவரும் பேசிக்கொண்டே வருவது நல்லது.
அப்படித்தான், இந்த முறை என் மகன் காரை ஓட்ட, நான் அவன் அருகில் அமர்ந்து வழி நெடுக பேசிக்கொண்டே வந்தோம்.
சென்னையிலும் சரி, பெங்களூரிலும் சரி, சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையை அடைவதுவரை, நகரத்துக்குள் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அந்த தூரத்தை கடக்க, ஒரு மணிக்குமேல் ஆகும். மாலை நேரத்தில், இரண்டு மணி நேரம்கூட ஆகும்.
அதனால், கிளம்பும் நேரம் காலை ஏழு மணிக்குள்ளாகவோ, அல்லது இரவு பத்து மணிக்கு மேலோ, இருந்தால், விரைவாக, நெடுஞ்சாலையை அடைந்துவிடலாம்.
நெடுஞ்சாலையில் வேறுவிதமான தொந்தரவு!
ஏழெட்டு டோல் கேட் தடுப்புகள் இடையில் வரும். ஒவ்வொரு டோல் கேட்டிலும், வாகனங்கள் கியூ வரிசை நீளமாயிருக்கும். பொறுமையாக காத்திருந்து, சரியான தொகையை கையில் வைத்துக்கொண்டு காத்திருக்கவேண்டும். ஒவ்வொரு வாகனமாக நகர, நாமும் முன்னேறுவோம்.
அந்த நேரத்தில்தான், நமது வாகனத்தின் அருகே வந்து நின்றுகொண்டு பிச்சைக்காரன், கொசு தடுப்பு சாதனம் விற்போர், பழங்கள் விற்போர், முதலியோர் நம்மை நச்சரித்து தேவையில்லாவிட்டாலும், நச்சரிப்பு தாங்கமுடியாமல், பொருட்களை வாங்கவைத்துவிடுவார்கள்.
டோல் கேட் செலவுக்காக மட்டும் அறுநூறு ரூபாய் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது, மனிதர்களின் மனப்பாங்கு நன்றாகவே புரியும்.
பெரிய ராட்சஸ லாரி, பெரிய லாரி, மீடியம் லாரி, வேன்கள்!
அதேபோல, கார்களிலும் டெம்போ டிராவலர், இனோவா போன்ற பெரிய கார்கள், மீடியம் கார், சின்ன கார்!