சிறுகதை - பெண் மனசு - K.சௌந்தர்
பிரவீனுக்கு தூக்கமே வரவில்லை. கடிகாரம் மணி இரண்டு அடித்து ஓய்ந்தது. எழுந்து உட்கார்த்துக்கொண்டு சுற்றிலும் பார்த்தான். பக்கத்தில் இரண்டு வயது மகள் மீனு உறங்குவது விடி விளக்கின் ஒளியில் தெரிந்தது. அதற்கு அடுத்து மகன் மிதுனும் மனைவி நந்தினியும் தூங்கிக் கொண்டிருந்தனர். எல்லோரும் நிம்மதியாகத் தான் தூங்கிக் கொண்டிருந்தனர். தனக்கு மட்டும் என்னவாயிற்று. ஏன் இந்த தேவையில்லாத குழப்பம்? அக்கா ஊர்மிளாவைப் பற்றி கேள்விப் பட்டத்திலிருந்து அவனுக்கு நிம்மதி இல்லை.
மதியம் அம்மாதான் போன் பண்ணி சொன்னாள். “பிரவீன், நம்ம ஊர்மிளாவுக்கு காலைல அபார்ஷன் ஆயிடிச்சு. வி.வி நர்சிங் ஹோம்ல சேத்துருக்காங்க. நீ கொஞ்சம் பழசையெல்லாம் மறந்துட்டு ஒரு எட்டு போயி பாத்துட்டு வந்துடுப்பா " என்றாள்.
சும்மா என்றாள் பிரவீன் பதறிக் கொண்டு ஓடியிருப்பான். இப்போதும் நெஞ்சு பதறத் தான் செய்தது. ஆனால் உடனடியாக, வேலைகளை விட்டு விட்டு அவனால் கிளம்ப முடியவில்லை. மாலையில் வீட்டுக்கு போகும் போது சென்று பார்த்தான்.
ஆஸ்பத்திரி கட்டிலில் முடங்கிக் கிடந்த அக்காவின் சோர்வும் நிராசையுமான உருவம் அவனை பெரிதும் பாதித்து விட்டது. வெறும் அபார்ஷன் என்றால் கூட பரவாயில்லை. அடிவயிற்றில் பலமான அடிபட்டதால் கருப்பையையே எடுத்துவிடவேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிடவே உள்ளூர உடைந்து போயிருந்தாள் அக்கா. மிகுந்த வருத்ததுடன் அவளுக்கு தேறுதல் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
நந்தினியிடம் விஷயத்தை சொல்ல அவள் ஆத்திரப் பட்டாள். "உங்களை யாரு அவுங்களைப் போயி பாக்கச் சொன்னது? நமக்கும் அவுங்களுக்கும் தான் ஒட்டும் இல்ல உறவும் இல்லன்னு நம்ம புள்ளையை கொண்டு வந்து தள்ளிட்டு போயிட்டாங்களே, அப்புறம் கூடவா உங்களுக்கு பாசம் போகலே?. இத்தனைக்கும் நாம அவுங்களுக்கு நல்லது தானே பண்ணோம், கருவேப்பிலையை தூக்கி வீசரா மாதிரி நம்ம குழந்தை மீனுவை திருப்பி கொண்டுவந்து விட்டுட்டாங்க. அதனால நமக்கு ஒன்னும் வருத்தம் இல்லை. குழந்தை திரும்ப கெடைச்சது எனக்கு சந்தோஷம்தான். ஆனா இந்த சூழ்நிலைல அவுங்க மறுபடியும் நம்ம குழந்தையை கேட்க வாய்ப்பிருக்கு. அந்தமாதிரி குழந்தை, அது இதுன்னு இந்த வீட்டுப் படியேறி யாராச்சும் வந்தாங்கன்னா நா பொல்லாதவளா ஆயிடுவேன்" கத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் நந்தினி.
அவள் சொல்லுவதிலும் நியாயம் இருந்ததால் அவனால் பதில் பேச முடியவில்லை .
கோபமிருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும் என்பதற்கு நந்தினி ஒரு சிறந்த உதாரணம், எந்த அளவுக்கு அவள் கோபப்படுகிறாளோ அதே அளவுக்கு சட்டென இளகும் தன்மையும் அவளுக்கு