சிறுகதை - அந்தக் கிழவி வருது....! - ரவை
" முதலாளி! அந்தக் கிழவி வருது! பழைய பாக்கி எக்கச்சக்கமா ஏறிக்கிடக்கு! கறாரா பேசி பாக்கியை வசூல் பண்ணிடுங்க........."
" அதுக்குத் தானே இந்த போர்டு! 'இன்று முதல் கடன் இல்லை!' இதை எல்லார் கண்ணிலும் படறமாதிரி மாட்டு!"
"அதோட, பாக்கி நிற்கிற கடனையும் வசூலிக்கணும், முதலாளி! அந்தக் கிழவியிடம் இன்று கறாரா பேசிடுங்க!"
" ஆமாம், தெரிஞ்சவங்கன்னாலும் எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கில்லையா.........?"
"கிழவி நெருங்கி வந்திடுச்சு........"
முதலாளி அவன் சொன்னதை காதில் வாங்கிக் கொண்டதும், கல்லாவிலிருந்து எழுந்து உள்ளே ஓடிப் போய் மறைந்து கொள்ளுமுன், ஊழியனிடம் " அவங்க வந்தா, நான் வெளியே போயிருக்கேன்னு சொல்லிடு...."
ஊழியனுக்கு, முதலாளி அந்தக் கிழவியைப் பார்க்க ஏன் பயப்படுகிறார் எனப் புரியவில்லை!
'கடன் பட்டிருப்பவள் கிழவி! கடன் கொடுத்துள்ளவர், முதலாளி! அவள் அல்லவா, இவரைப் பார்த்து ஒளியவேண்டும், இவர் ஏன்ஒளிகிறார்?'
இப்படி குழப்பத்தில் ஊழியன் தவித்தபோது, கிழவி எதிரில் நின்றாள்.
" ஒரு கிலோ பச்சரிசி கொடுப்பா!"
" கிழவி! காசு கொடுத்தா, அரிசி போடறேன், கடன்னா முதலாளி வந்தால்தான்..."
" அவர் எப்போ வருவார்?"
" அவருக்குத்தான் தெரியும்......"
கிழவி ஏதோ யோசனையில் சிறிது நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.
" எனக்கு கடனா அரிசி கொடுத்தா, முதலாளி உன்னை கோவிச்சுக்க மாட்டாருப்பா!......"
" அந்தக் கதையெல்லாம் நேத்தியோட முடிஞ்சிபோச்சு! அங்கே பாருங்க, போர்டு தொங்குது, 'இன்று முதல் கடன் இல்லை!"
" அப்படியா? அவரு நல்லா இருக்காரா? நீ நல்லாயிருக்கியா? முதலாளியின் மகன் சோமு நல்லா படிக்கிறானா? அம்மா வயிற்றிலிருந்து பிரசவத்தின்போது அவனை நான்தான் வெளியிலே கொண்டு வந்தேன், நடு ராத்திரி! சோமுவின் அம்மா திடீர்னு வலியிலே துடிக்குது, ஆஸ்பத்திரிக்கு அவளை தூக்கிட்டுப் போக, வண்டி கிடைக்கலே! உங்க முதலாளி என்னிடம் ஓடிவந்து 'எப்படியாவது அவளை காப்பாத்துங்க'ன்னு கெஞ்சினாரு, கடவுள்மேலே பாரத்தைப் போட்டு நானும் தைரியமா போய் பிரசவம் பார்த்தேன். கடவுள் கைவிடலை.......சரி, நான் வரேம்ப்பா! முதலாளியை நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லு!"