ஆட்டிக்கொண்டு, நின்றான்.
கிழவிக்கு புரிந்துவிட்டது, யாரோ வெளிநபர் வீட்டுக்கு வந்திருக்கிறார், அதற்காகத் தான், மணி அவளை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறான்.
ஆம், கிழவியைப் பார்க்க வெளியூரிலிருந்து அவள் உறவினர் வந்திருக்கிறார்!
" கணபதி! எப்போடா வந்தே? வா வா! அப்பா, அம்மா சௌக்கியமா?"
" அக்கா! ஏன்க்கா, இப்படி கிழவியாயிட்டே, நாற்பது வயசிலேயே? உன் குழந்தைங்க பசியிலே சுருண்டு படுத்துக் கிடந்ததை பார்த்து, பதறிப்போய், இப்பத்தான் அவங்களுக்கு ஓட்டலில் இருந்து இட்லி வாங்கிக் கொடுத்தேன், உனக்கும் வாங்கி வந்திருக்கேன், முதல்லே சாப்பிடு, அக்கா! பிறகு நிறைய பேசலாம்....."
கிழவி மனதிற்குள் இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு, தனக்கு வைத்திருந்த இட்லிகளில் ஒன்றை எடுத்து, வாசலுக்கு வந்து, மணிக்கு ஊட்டினாள்.
மணியின் கண்களிலிருந்து நீர் வழிந்தது!
பிராணிகளுக்கு உணர்வோ, அறிவோ இல்லையென யார் சொன்னது?
கிழவி திரும்பி உள்ளே சென்று, தம்பி கணபதியின் கன்னத்தை வருடி, கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்து, " உன்னைப் பார்த்து எத்தனை நாளாச்சுடா! நல்லா இருக்கியா? அப்பா அம்மா திடமா நடமாடிண்டு சௌக்கியமா இருக்காங்களா?"
" போக்கா! உனக்கு கஷ்டம்னா, நான் ஓடி வரமாட்டேனா? எனக்கு சொல்லி அனுப்பக் கூடாதா? இப்படியா பட்டினி கிடப்பது, குழந்தைகளையும் பட்டினி போடுவது?........."
கிழவி துயரம் தாங்காமல் தம்பியை அணைத்துக்கொண்டு அழுதாள். அவளை தம்பி தடுக்கவில்லை! அழுது, துக்கத்தை, மனப் பாரத்தை, இறக்கி வைக்கட்டும் என காத்திருந்தான்!
"கணபதி! திடீர்னு என்ன விஷயமா வந்தே? உன் கல்யாணம் நிச்சயமாயிடுத்தா? அல்லது வேற வேலையா இங்கு வந்திருக்கியா?"
" அக்கா! மூச்சு விடு! கேள்வி மேலே கேள்வியா அடுக்கிண்டே போகாதே! ஏன் உன்னைப் பார்க்க உன் தம்பி வரக்கூடாதா? நீ என் ஒரே அக்கா! நான் உன் ஒரே தம்பி! அப்பா, அம்மாவுக்கு வாரிசுகளே நாம் இருவரே!"
" சரி, நீ எதுக்கு வந்திருந்தாலும் சரி, சரியான சமயத்துக்கு வந்து, எங்க பசியை போக்கிட்டே! தெய்வமே உன்னை அனுப்பிச்சா மாதிரி........"
" ஆமாம்க்கா! தெய்வம்தான் என்னை இங்கே அனுப்பிச்சிருக்கு, உன்னையும் குழந்தைகளையும் உடனே ஊருக்கு அழைத்துப் போக! கிளம்புங்க, எல்லோரும்!"
குழந்தைகள் இதைக் கேட்டதும், "அய்யா!" என குதித்து கும்மாளமிட்டன!