அவள் கணவன், தனது வயது அறுபது நிறைவடைந்ததை ஒட்டி, பெரிய மண்டபத்தில் 'அறுபதாம் கல்யாணம்' விழாவாக உறவினர்களையும், ஊரையும் கூட்டி தடபுடலாக விருந்துவைத்து கொண்டாடியபோது, வழக்கம்போல, அவன் தன் மனைவிக்கு தாலி கட்டுகிற நிகழ்ச்சியின்போது, நடந்ததுதான்!
வைதிகர்கள் அக்னி வளர்த்து மந்திரம் ஓத, அவன் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மனைவியின் கழுத்தில் தாலி கட்ட அவளை நெருங்கியபோது, யாருமே எதிர்பார்க்காத, கற்பனைகூட செய்யமுடியாத, அந்த நிகழ்வு நடந்ததுதான், கூடியிருந்த அவையோரை திடுக்கிட வைத்தது!
அவன் தன் கையில் தாலியுடன் அவள் கழுத்தில் கட்டுவதற்காக கையில் தாலியுடன் நெருங்கியபோது, மனைவி அந்தக் கையை தனது பலம் அனைத்தையும் உபயோகித்து, தன் கழுத்தை நெருங்க முடியாமல் தள்ளிவிட்டு, எழுந்து நின்று, முன்னமேயே வாலிப வயதில் அவன் கட்டிய தாலியையும் தன் கழுத்திலிருந்து வெளியெடுத்து, அவன் முகத்தில் வீசி எறிந்தபோது, இரண்டு தாலிகளும் அவன் மடியில் விழுந்தன!
இது போதாதென, அவள் தனது வெறுப்பையெல்லாம் ஒன்று சேர்த்து, அவன் முகத்தில் காரி உமிழ்ந்ததுதான், உச்சக்கட்டம்!
அவன் தன் கண்பார்வையை மறைத்த அவள் எச்சிலை துடைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவள் மாயமாய் எங்கோ மறைந்து போனாள்!
விழாவை படம் பிடித்த வீடியோவில், இந்தக் காட்சி முழுவதும் தெளிவாக தெரிந்தது!
அதை யாரோ விஷமிகள் யூடியூபிலும் சேர்த்து, விழாவில் கலந்துகொள்ளாதவர்கள் அனைவருக்கும் தெரிவித்துவிட்டது.
மர்மத்தை விடுவிக்காமல் விடுவார்களா, ஊடகங்கள்?
துப்பு துலக்கினார்கள்.
முதலில், கணவன்-மனைவி இருவருடைய குடும்ப சரித்திரத்தை கண்டுபிடித்தார்கள்.
அவளுக்கு சொந்த தாய்மாமன் தான், கணவன்! ஊர் பட்டிவீரன்பட்டி! மிராசுதார் பரம்பரை! நஞ்சை, புஞ்சையென பல ஏக்கர் பரப்பளவு விளைநிலம்!
செல்வக் கொழிப்புள்ள பாரம்பரியம்!
கணவன் தொழில்துறையில் இறங்கி, ஏற்றுமதி மூலம் கோடீஸ்வரன்!
மனைவிக்கும் அவனுக்கும் இடையே உறவு துவக்கத்தில் இனிப்பாக இருந்து, போகப் போக இனிப்பு குறைந்து குறைந்து கசப்பாக வளர்ந்து வெறுப்பாகவே மாறிவிட்டது!