சிறுகதை - 'அப்பா'ன்னா என்னம்மா? - ரவை
சரஸ்வதி, தன் பெயருக்கேற்ப, சின்னஞ் சிறார்களுக்கு அடிப்படைக் கல்வி தருவதை தன் மகிழ்ச்சிக்காகவும் சமூக நலனுக்காகவும் அந்த குப்பத்துக்குச் சென்று அவ்வப்போது சொல்லிக் கொடுத்து வந்தாள்.
நொச்சிக் குப்பத்தில், அன்றாடம் புதிது புதிதாக ஏழைகள் குடியேறியவண்ணம் இருந்தனர்.
சரஸ்வதி நடத்தும் வகுப்புக்கும் அடிக்கடி புதிய குழந்தைகள் சேருவது உண்டு!
புதிய குழந்தைகளை, முதல் நாளில், சரஸ்வதி வழக்கமாக விசாரிப்பது, 'உங்கம்மா யாரு? உங்கப்பா யாரு? என்ன வேலை செய்யறாங்க?' என்பவை!
அப்படித்தான், அன்று முதன்முதலாக வகுப்புக்கு வந்த, பெண் குழந்தையை விசாரித்தாள்.
"உன் பேரென்ன?"
"எச்சுமி!"
" உங்கம்மா பேரு?"
"அம்மா!"
குழந்தையின் பதிலைக் கேட்டதும், மற்ற குழந்தைகள் சிரித்தன.
அவர்களை எச்சரித்துவிட்டு, தன் கேள்விகளை தொடர்ந்தாள்.
" உங்கம்மாவை நீ 'அம்மா'ன்னு கூப்பிடறே, மத்தவங்க எப்படி கூப்பிடறாங்க?"
" அதுவா? 'ஏய், பொம்பளை!'ன்னு ......."
மறுபடியும் குழந்தைகள் சிரித்தன.
அவர்களை சரஸ்வதி கண்டித்துவிட்டு,
" சரி, உங்கப்பா பேரென்ன?"
" 'அப்பா'வா? அப்படின்னா என்ன?"
இதைக் கேட்டதும், மற்ற குழந்தைகள், டீச்சருக்கு பயந்துகொண்டு, வாயைப் பொத்தி சத்தமின்றி சிரித்தனர்.
சரஸ்வதி, அந்தப் பதிலைக் கேட்டு, அதிர்ச்சியுற்றாள்.
மேற்கொண்டு அந்தக் குழந்தையை கேள்விகள் கேட்பது, தவறு என தீர்மானித்து, வகுப்பை நடத்தினாள்.
ஆனால், அவள் மனதில் சலனம் இருந்துகொண்டு தொல்லை தந்தது! ஏதோ, பெயருக்கு வகுப்பை நடத்தி முடித்துவிட்டு, புதிதாக சேர்ந்த குழந்தையின் பின்னே சென்றாள்.
அது நுழைந்த குடிசைக்குள் சரஸ்வதியும் சென்றாள்.
அவளைப் பார்த்ததும், குழந்தை தன் தாயிடம் "இவங்கதான் பாடம் சொல்லித் தராங்க......"
அந்த 'ஏய் பொம்பளை' சிரித்தவாறே, கரங்கூப்பி வரவேற்றாள், சரஸ்வதியை!