(Reading time: 6 - 11 minutes)

 வகுப்பில் நடந்ததை, சரஸ்வதி அவளிடம் தெரிவித்தாள்.

 அவள் தன் குழந்தையை கட்டியணைத்து நின்றாள்!

 சரஸ்வதி அவளிடமிருந்து ஒரு நீண்ட சோக கதையை எதிர்பார்த்தாள்.

 " ஏதோ சொல்ல வேண்டும்னு தோன்றியது, சொன்னேன். உனக்கு என்னிடம் சொல்ல விருப்பமில்லை போலிருக்கு!பரவாயில்லே, நான் பிறகு வரேன்........."

 

 " உங்களைப்போல, பெரியவங்க என்னைத் தேடி வர்றதே கிடையாது, வந்திருக்கிற உங்களுடன் பேசாமல் இருப்பேனா? உங்களை உட்காரச் சொல்லக்கூட, வசதியில்லே....." என பேசியவாறே, தன் பழைய சேலையை மண் தரையில் விரித்து சரஸ்வதியை அமரச்சொன்னாள்.

 " அம்மா! நீங்க நினைக்கிறாப்பல, நாங்க இந்த சமுதாயத்தை சேர்ந்தவங்க இல்லே, எனக்கோ, எங்க கூட்டத்தில யாருக்குமே 'அப்பா' ங்கிற உறவே கிடையாது!......."

 " அப்படியா! நீங்க எந்த கூட்டம்?"

 " ஊர் ஊரா திரிகிற கூட்டம்! அங்கங்கே எப்ப எப்ப என்ன வேலை கிடைக்குதோ, அதை செய்து அவங்க தர்ற உணவை சாப்பிடுவோம், பழைய துணிமணி கொடுத்தா வாங்கிப்போம், வீடுன்னு சொல்றாப்பல எதுவும் கிடையாது, கிடைச்ச நிழல்ல தங்கிக்குவோம்! ஒண்ணா சேர்ந்து போவோம்னு சொல்லமுடியாது, யார் யாருக்கு எங்கெங்கே கிடைக்குதோ, அங்கங்கே போயிடுவோம்....இப்பக்கூட, ஒரு போலீஸ்கார ஐயா என்ன இந்த குடிசையிலே தங்கவச்சிருக்கிறாரு, அக்கம்பக்கத்திலே சொல்கிற வேலையை செய்வேன், அவங்க போடற சோறுதான் எங்களை வாழவைக்குது, அதனால்தான், என் புள்ளைக்கு எந்த உறவுமுறையும் தெரியாது, எனக்கே தெரியாது.........."

 " அப்படியா! உங்களப்போல, எத்தனை பேரு இருப்பீங்க?"

 " எனக்கு விவரம் தெரிஞ்ச புதுசுல, கணிசமா இருந்தோம், போகப் போக, குறைஞ்சு, இப்ப நான் தனியாளாயிட்டேன்......"

 " உன்னை உங்க கூட்டத்திலே என்ன பேர் சொல்லி கூப்பிடுவாங்க?"

 " எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம், 'ஆம்பளை', 'பொம்பளை' இவ்வளவுதான்! பக்கத்திலே இருந்தா, பேசுவோம், இல்லைனா யாரையும் கூப்பிடமாட்டோம், அதனால பேர்னு ஒண்ணு தேவைப்படலே! உங்களைப்போல, சொந்தபந்தம், சொந்த ஊரு, படிப்பு, வேலை, பாஷை எதுவும் கிடையாது!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.