மகளிர் தின சிறப்பு சிறுகதை - சரிநிகர் சமானமாக... - ரவை
“'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்,
அறிவிலோங்கி இவ்வையம்
தழைக்குமாம்-பூணு நல்
அறத்தோடு போந்து நிற்பது
தாய் சிவசக்தியாம்!'
என்று அன்றே சொல்லிவைத்தான், செஞ்சொற் கவிஞன் சுப்பிரமணிய பாரதி!
நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து எழுபத்துமூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன.
விடுதலை பெற்ற வளமார் பாரத நாட்டில், இன்று பெண்கள் பல துறைகளில் வெகுவாக முன்னேறியுள்ளனர், என்பது பெருமைக்குரிய உண்மை!
இருந்தாலும், பெண்கள் இன்னும் பல மைல்கற்களை தொடவேண்டியுள்ளது!
உங்களுக்கே தெரியும், நான் விளக்கவேண்டிய அவசியமில்லை!
உடனடியாக, நாம் செய்யவேண்டியது, தனிமனிதனின் மனப்பாங்கில் பெண்களுக்கு ஆதரவாக மாற்றம் கொண்டு வருவதே!
அவற்றை பட்டியலிட அவசியமில்லை!
இந்த வினாடி முதல், நாம் அந்தப் பாதையில் உறுதியுடன் நடை போடுவோம்!"
பேராசிரியர் அனல்விழி தன் உரையை முடித்ததும், அரங்கமே எழுந்து நின்று கைதட்டி அவர் பேச்சை பாராட்டியது.
காரில் ஏறி, பேராசிரியர் தன் வீடு திரும்பியதும், அவர் டைனிங் டேபிளில் அமர்ந்தார்.
அவர் அப்படி அமர்ந்துவிட்டால், சாப்பிட்டு முடிக்கும்வரை, அவர் வாய் திறந்து பேசமாட்டார். மனைவி மாணிக்கம், அவருக்குப் பிடித்த உணவை, சரியான அளவில், அளவான சூட்டில், பரிமாறவேண்டும். இதுதான், திருமணமான இந்த முப்பது ஆண்டுகளாக, அந்த வீட்டில் நடந்துவரும் பழக்கம்.
அன்று, அந்தப் பழக்கத்துக்கு மாறாக, அவர் அமர்ந்து சில வினாடிகள் கழிந்தும், உணவு பரிமாறப்படாதபோது, பேராசிரியர் கண்களை உருட்டி, சமையலறையை நோக்கி பார்வையை கூரான அம்பாக அனுப்பினார்.
அங்கிருந்து, மனைவி மாணிக்கம், சைகையின்மூலம், கொஞ்சநேரம் பொறுத்துக் கொள்ளும்படி, கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சினாள்.
பேராசிரியர் ஏதும் பேசாமல், எழுந்து, முன் அறைக்கு வந்து, டி.வி.யை பார்க்க சோபாவில் அமர்ந்தார். கையில் அன்றைய செய்தித்தாள்!
மனைவி மாணிக்கம் அவர் அருகில் வந்து நின்றாள். அவள் நிழல் தெரிந்தும், பேராசிரியர்