ஒவ்வொரு வீட்டிலும் இந்த தலைமுறை மாறுதல் வேகமாக ஊடுருவிக் கொண்டிருக்கிறது, இனி ஆண்கள் விழித்துக்கொண்டு தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளாவிடில், ஸ்டிரைக் செய்த டெலிவரி சிப்பந்திகளின் கதிதான், அவர்களுக்கும்!
பேராசிரியரைப் போன்று மேடையிலே பேசுவது ஒன்றும், செயலில் செய்வது வேறாகவும் இனி இருக்கமுடியாது!
பெண்கள், வெளியே ஆண்களைப்போல, வேலைக்கு செல்வார்கள், நிறைய படித்து பட்டம் பெறுவார்கள், நாட்டை ஆள்வார்கள், ராணுவத்தில் தலைமை ஏற்பார்கள், விண்வெளி ஆராய்ச்சியில் தலைமை ஏற்பார்கள்!
'அடுப்பூதும் பெண்கள்' இனி 'ஆணுக்கு நிகராக வையத் தலைமை கொள்வார்கள்'!
ஆண்களும் அதேபோல, சமைக்கவும், குழந்தைகளை பராமரிக்கவும், வீட்டை நிர்வகிக்கவும் கற்பார்கள்!
மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவார்கள்!
பாரதி கண்ட பெண்விடுதலை நாட்டில் நடைமுறைக்கு வரும்!
மாணிக்கங்கள், ரேகாக்களாக மாறுவார்கள்!
" அப்பா! இன்னிக்கு 'பெண்கள் தின' விழாவிலே அப்படி என்ன பேசினீங்க? என் தோழிகள் எல்லாரும் நீங்க பிரமாதமா பேசினதாக மெசேஜ் அனுப்பியிருக்காங்களே!"
ரேகாவுக்கு பேராசிரியரின் பதில், ஒரு புன்னகையே!