தர்மன், பெயருக்கேற்ப, இருவரிடமும் அன்புடன் நடந்து கொள்வான்!
அவனுக்கு தன் தந்தை ஏன் தேவிகாவை பத்தாவது வகுப்போடு படிப்பை முடித்து விடச் சொன்னார் என இன்று வரை புரியவேயில்லை!
கல்யாணராமனின் திட்டமே வேறு!
தேவிகாவை, பெரிய பணக்காரன் எவனுக்காவது இரண்டாம் தாரமாக கட்டி வைத்து, அவனிடமிருந்து பணத்தை கறக்கவேண்டும், எனும் பேராசை!
இப்போது, தேவிகா தன் மாமாவுக்கு என்ன பதில் தருகிறாள் என கேட்போமா?
" மாமா! இப்ப மட்டும் எனக்கென்ன குறைச்சல்? என்னையும் அம்மாவையும் கண்ணுக்குள்ளே வைத்து இருபது வருஷமா காப்பாற்றி வரீங்க, நீங்க! இந்த வீட்டிலே எனக்கில்லாத வசதியா, அங்கு கிடைக்கப் போகுது, மாமா! எனக்கு உங்கள்மீது முழு நம்பிக்கை உண்டு. நீங்க எனக்கு எது செய்தாலும், அது என் நன்மைக்காகவேன்னு தெரியும்!
நீங்களே முடிவு பண்ணி, 'நீட்டு கழுத்தை!' னு சொன்னால் போதும், அவன் நல்லவனா, இல்லையா னு யோசிக்காம கழுத்தை நீட்டி தாலியை கட்டிக்கிட்டு அவன்கூட வாழ்வேன்!"
இதைக் கேட்டுக் கொண்டிருந்த தர்மன், 'அடி பாவி!' என முனகினான்.
கல்யாணராமனுக்கு பெருமகிழ்ச்சி!
அடுத்து தன் தங்கையிடம் கல்யாணராமன் பேசினார்.
" கோமு! அந்தப் பணக் காரனுக்கு, முதல் மனைவி, மலடி! குழந்தை இல்லே! நம்ம தேவிகாவை அவன் குழந்தை பெறத்தான், கட்டிக் கொள்கிறான், இவதான் இனி அந்தவீட்டு எசமானி! பெட்டி சாவி இவ இடுப்பிலேதான்!"
" அண்ணே! அவனுக்கு என்ன வயசு? என்ன தொழில்?"
" ஆள் பார்ப்பதற்கு, ராஜாமாதிரி, ஜம்முனு இருப்பான்! பங்களா, கார் வாங்கித்தர, புரோக்கர்! நிறைய பணம் சேர்த்துட்டான் காரிலேதான் போவான்...."
" இன்னமும் அவன் வயதை சொல்லலியே...."
" வயசென்னம்மா, பெரிய வயசு! இருபது வயசு இளைஞன் பொட்டுனு பூடறான், தொண்ணூறு வயசு கிழவன் பந்து விளையாடறான்......"
" அப்பா! நீ இன்னும், அத்தை கேட்ட கேள்விக்கு நேரிடையா பதில் தரலே, அவன் வயசென்ன?"
" இன்னும் ஐம்பதையே எட்டலே....."
" அடப் பாவி! அப்பா! உனக்கு மனசாட்சி இருக்கா, இல்லையா? இருபது வயசுப் பெண்ணுக்கு, ஐம்பது வயசு கிழவனை மாப்பிள்ளையா பிடிச்சிருக்கியே, பணத்துக் காக! த்தூ!"