" ஆமாம்,தர்மா! முதல்லே, உன் கல்யாணம்! நீயே நல்ல பெண்ணை பார்த்துச் சொல்றியா, நான் பார்க்கட்டுமா?"
" அத்தை! என்னை உன் குழந்தையாகவே எடுத்து வளர்த்தது, நீதான்! எனக்கு ஒரு பெண்ணை நீயே காட்டு! நான் செய்துக்கிறேன்..."
" நான்தான் தேவிகா இந்த வீட்டு மருமகள்னு சொல்லிட்டேனே....."
" ஓ.கே. அத்தை!" கல்யாணராமனுக்கு இந்த பேச்சை எப்படி தடுப்பதென தெரியவில்லை, தடுக்கப்படா விட்டால், தனது ஆசையில் மண் விழுமே என தவித்தார்.
இப்போதும், அவருக்கு கை கொடுத்தது, தேவிகா! " அம்மா! உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா? எனக்கு வயசு இருபது! தர்மனுக்கு என்னை விட இரண்டு வயதுதான் கூட!
இதெல்லாம், இந்தக் காலத்தில் கல்யாணம் செய்து கொள்கிற வயதா?
முதல்லே, தர்மனுக்கு வேலை கிடைத்து, அதில் அவன் நிரந்தரமாகி, வாழ்க்கைபற்றி அனுபவம் பெறணும், பிறகுதான் அவனால, தனக்கு தகுந்தவளை தேர்வு செய்ய முடியும், இல்லையா மாமா?"
" கரெக்ட்! சீக்கிரமே தர்மனுக்கு ஒரு நல்ல வேலை பார்த்து வைக்கிறேன், பிறகு ஒரு வருஷம் போகட்டும், அவனே பெண்ணை செலக்ட் பண்ணட்டும், சரிதானே, கோமு?"
நல்லவேளையாக, பேச்சு அத்துடன் கலைந்தது.
கல்யாணராமன், மேற்கொண்டு எப்படி இந்த விஷயத்தில் தொடர்வதென தெரியாமல் விழித்தார்!
இன்னும் இரண்டு, மூன்று வருஷம் தள்ளிப்போனால், அவர் வயதும் கூடும்!
எதிர்ப்பு கூடுதலாகும்! தேவிகாதான் நல்ல திட்டம் தரவேண்டும்!
அன்று அமாவாசை! தேவிகா, மற்ற மூவரையும் அழைத்து, நடு ஹாலில் அம்ர்த்தி, முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு பேசினாள். " இன்று அமாவாசை! அம்மா சொல்லுவா, இதை 'நிறைந்த நாள்'னு! அதாவது எந்த நல்ல காரியத்தை இந்த நாளில் முடிவு செய்தாலும் அது கட்டாயம் நிறைவேறும்!
விஷயத்துக்கு வரேன்! தர்மா! முக்கியமா, நீ கேட்டு முடிவு எடு!
இந்த வீட்டிலே ரெண்டு பேருக்கு இப்ப அர்ஜன்டா கல்யாணம் செய்தாகணும், யார் அந்த ரெண்டு பேர்?"
" ஒண்ணு நீ, மற்றது நான்!"
" அதுதான் இல்லே, நமக்கு இப்ப அவசரமில்லே, சரியாக சொல்லணும்னா, அதற்கான சமயம் இன்னும் வரவேயில்லை!