செக்ரடரி இருவருக்கும் குளிர்பானம் எடுத்துவந்தான். அவர்கள்முன் வைத்தான்.
சப்னா, முத்தய்யாவை நெருங்கி அமர்ந்து, 'தனியா பேசணும்' என கிசுகிசுத்தாள்.
முத்தய்யா, அவளை தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.
" ஐயா! உங்க அட்வைஸ் வேணும்....."
" என் அட்வைஸா?"
" ஆமாம், என்னிடம் உள்ள பணத்தை முதலீடு செய்ய பெரிய நிபுணர்களை கேட்டேன். அவங்க, ஓட்டல் ஆரம்பிங்கன்னு சொல்றாங்க, அது சரிதானான்னு நீங்க சொல்லணும்......."
" எவ்வளவு பணம் முதலீடு செய்யப் போறீங்க?"
" அதையும் நீங்கதான் சொல்லணும்......!"
" எவ்வளவு பணம் நீங்க வைச்சிருக்கீங்க?"
" நீங்க எத்தனை ரூவா சொல்றீங்களோ, அதை வைத்திருக்கிறேன்........"
" எந்தமாதிரி ஓட்டல் நடத்த ஆசைப்படறீங்க?"
" எனக்கு ஆசைன்னு எதுவும் கிடையாது! கறுப்புப் பணமா இருக்கிறதை முதலீடு செய்யணும், கையிலே வச்சிக்க பயமாயிருக்கு...."
" ஓ! புரிகிறது, வரிகட்ட மனசில்லே, பதுக்கின பணம்! அதை யார் பெயரிலே முதலீடு செய்வீங்க?"
" அதையும் நீங்கதான் சொல்லணும்.........."
" ப்ளீஸ்! என் டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க...."
" என்னைப் பார்க்க, என் வீட்டுவாசல்லே கியூவிலே நிக்கறாங்க......"
" எனக்கு வேலை எக்கச்சக்கமா கியூவிலே நிக்குது, நீங்க கிளம்புங்க!"
" ஐயா! எனக்கு உங்களிடம் பிடித்ததே இதுதான்! என் புகழோ, அழகோ, பணமோ, உங்களை பாதித்ததே இல்லை, எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு ........!"
" சந்தோஷம்! அதை போனிலேயே சொல்லி இருக்கலாமே......."
" உங்க முகத்தைப் பார்த்து நேருக்கு நேர் நான் சொல்வதிலே, ஒரு 'த்ரில்' இருக்கே.....!"
" ஓ! எனக்கு உன்னிடம் பேசும்போது, எந்த 'த்ரில்'லும் வரலை, டக்குனு விஷயத்தை சொல்லிட்டுப் போ!"
" இந்தக் கோபம்கூட, எனக்கு பிடிச்சிருக்கு, ஐ லவ் யூ!" என்று முத்தய்யாவின் கைகளை முத்தமிட்டாள்!
கைகளை உதறியவாறு முத்தய்யா, " சப்னா! என் வீடு தேடி வந்து என்னுடன் பேசி என்னை சந்தோஷப்படுத்த, உன்னை வேற யாரோ அனுப்பியிருப்பாங்களோன்னு சந்தேகமாயிருக்கு!"