சிறுகதை - பாட்டியின் ஆசை! - ரவை
" பாட்டி! உனக்கேதாவது ஆசை இருந்தா, சொல்லு! நிறைவேற்றி வைக்கிறேன்!"
" பேராண்டி! எனக்கு வேறென்னடா வேணும், உன் தாத்தா மடியில் படுத்து என் கடைசி மூச்சு போகணும்...."
" பாட்டி! என்னாலே செய்யமுடிந்ததை சொல்லு, பாட்டி! தாத்தா சொர்க்கம் போய் பத்து வருஷமாச்சு! அவரை அழைச்சிண்டு வா என்றால், என்னால் முடியுமா?"
" எனக்கு வேற ஒரு ஆசையும் இல்லேடா...."
" சரி, யோசனை பண்ணி சொல்லு! என்னாலே முடிந்ததை செய்து தரேன்.."
" ஆமாம், என்ன இன்று திடீர்னு, இப்படி கேட்கிறே, இத்தனை வருஷமா கேட்க மறந்துட்டாப் போல! .......ஒருவேளை டாக்டர் ஏதாவது என்னைப்பற்றி பயமுறுத்தினாரா? எதுவா இருந்தாலும், மறைக்காம சொல்லுடா!"
" ஐயோ பாட்டி! நீ இன்னும் நூறு வருஷம் உயிர் வாழ்வேன்னு, டாக்டர் சிவா பந்தயம் கட்டியிருக்கிறார்.."
" எனக்கு பேராசை கிடையாதுடா, இப்பவே தொண்ணூறு ஆயிடுத்து..."
" நீ தாத்தாவைவிட, பன்னிரண்டு வயசா சின்னவ?"
" அந்தக் காலத்திலே இது சகஜம்டா!"
" தாத்தா, தொண்ணூற்று இரண்டு வயசு, சாகிறபோதுன்னு அப்பா சொல்வார்...நீயும் அந்த வயசாவது இருப்பே, அதுக்கு மேலேயும் இருப்பே, சரி, ஏதாவது ஆசை இருந்தா சொல்லு, நிறைவேற்றிவைக்க முயற்சிக்கிறேன்..."
" நான் என் ஆசையை சொல்றேன், வீட்டிலுள்ள எல்லாரையும் கூப்பிடு!"
" இதுக்கு எதுக்கு ஊரை கூட்டறே? என்னிடம் சொல்லு, போதும்!"
" போடா! இதையே செய்ய மாட்டேங்கறே...."
" சரி சரி, எல்லாரையும் கூப்பிடறேன்....."
அடுத்த ஐந்தாவது நிமிஷம் எல்லோரும் கூடினர்.
"எல்லாரும் நல்லா கேளுங்க, பேரன் எனக்கு ஒரு வாக்குறுதி தந்திருக்கான், என் ஒரு ஆசையை நிச்சயம் நிறைவேற்றி வைக்கிறேன்னு, சரிதானே, பேராண்டி?"
" சரிதான்!"
" என் ஆசை, இதுதான்! என் பேரனின் கல்யாணத்தை சீக்கிரமா பார்த்து ரசிக்கணும்....... நீங்க சாட்சி! சீக்கிரம்னா, ரெண்டு மாசம்!"
எல்லோரும் கைதட்டி ஆதரித்தனர்.
பேரன், திருதிருவென, விழித்தான்.