ஒன்றும் பேசாமல், எழுந்து போய்விட்டான்!
" அம்மா! சரியா மடக்கிட்டே பேரனை! கிடுக்கிப்பிடி போட்டுட்டே!"
" அத்தை! எங்களாலே முடியாத ஒன்றை நீங்க சாமர்த்தியமா சாதிச்சதுக்கு உங்களுக்கு என்ன வேணும், சொல்லுங்க!"
" மதுரம்! உன் பிள்ளை மாதிரி, நீயும் மாட்டிக்காதே!"
எல்லோரும் சிரித்தனர். " மருமகளே! நீ கேட்டதனால் சொல்றேன், என் பேத்தியை அவ புருஷனோட இந்த வீட்ல பார்க்கணும் இன்னிக்கே..."
மருமகள் மதுரமும், மகன் மாதுவும் வாயடைத்துப் போயினர்! தலை குனிந்து, மௌனத்தில் ஆழ்ந்தனர்.
மாது, மதுரம், பேரன் முருகன் மூவரையும் வாய் திறக்க முடியாமல் செய்த பாட்டியின் சாமர்த்தியத்தை மற்றவர்கள் பாராட்டினர்.
வெகு நாட்களாக, அந்த குடும்பத்தின் மகிழ்வை பறித்துள்ள ஒரு சிக்கலுக்கு தீர்வு காண, திரியை கொளுத்திவிட்டாள், பாட்டி!
விவரமாகச் சொல்ல வேண்டாமா?
மாது-மரகதம் பெற்ற மூத்த மகள் தேனீ போட்ட முடிச்சை, மகன் முருகன் அவிழ்த்து, பிரச்னையை தீர்க்க நினைக்கிறான், அதை மாது-மதுரம் ஏற்கவில்லை!
அவர்களை பணியச் செய்ய, எடுத்திருக்கும் ஆயுதம், தன் திருமணத்தை தள்ளிப் போடுவது!
பேரனின் யுக்தி, பாட்டி அறிவாள், இருந்தாலும், கால அவகாசத்துக்கு ஒரு எல்லை உண்டே!
பேத்தி தேனீ பிரிந்து போய் நான்கு வருஷம் ஓடி விட்டது. இன்னமும் அவள்மீது கோபம் குறையவில்லை, அவளைப் பெற்ற மாது-மதுரம் தம்பதிக்கு!
அப்படியென்ன தப்பை தேனீ செய்துவிட்டாள்?
தனக்குப் பிடித்தவனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டாள்.
தேனீயின் 'அவன்' வேறு சாதி இல்லை, மாற்று மதம் இல்லை, கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவன், தந்தை பிரகாசம்பேராசிரியர், தாய் கனிமொழியோ அரசு அதிகாரி, தங்கை ரதி கல்லூரி மாணவி!
'அவன்' தான் அற்புதன்! எம்.சி.ஏ. பாஸ் செய்து, பெரிய கம்பெனியில் சாஃப்ட்வேர் இஞ்சினீயர், கைநிறைய சம்பளம், தேனீ பணியாற்றும் அதே கம்பெனி யில்தான் அவனும் வேலை செய்கிறான்.
ரொம்ப நல்லவன். கெட்ட பழக்கம் எதுவும் இல்லை.
தோற்றமோ, சினிமா நடிகன் தோற்பான். லட்சண மாக இருப்பான்!