தன்னை உழைத்துக் காப்பாற்ற வேண்டிய அப்பா இல்லாத குறைக்குத் தொழிற்சாலையில் இரண்டிரண்டு ஷி·ப்டாக வேலை செய்கிறாள். கண்களெல்லாம் சிவந்து போய் வீடு வருகிறாள். வீட்டிலிருக்கும் நேரத்திலெல்லாம் முதுகிலும் தோளிலும் வலி நிவாரணித் தைலங்களைத் தேய்த்துக் கொண்டு அந்த நாற்றத்தோடே சுற்றிக் கொண்டிருக்கிறாள். பாவமாக இருக்கிறது. அவளைக் காப்பாற்ற வேண்டும்.
ஆனால் இன்று ஒரு நாள்... இந்த வாய்ப்பை விட முடியாது. தமிழ் நடிகைகளாமே...! குஷ்புவா, ரம்பாவா? ஆ...!
இரவு முழுவதும் நாளைக்கு நண்பனுடன் ரகசிய கூட்டில் ஈடுபடும் கிளர்ச்சி, காமக் கிளுகிளுப்பு, அம்மா நினைவுக்கு வந்த மாத்திரத்தில் குற்ற உணர்ச்சி, நாளைக்குப் பிறகு நல்லவனாக மாறிவிடலாம் என்ற சமாதானம் எல்லாம் வந்து அவனைத் தூங்க விடாமல் அடித்திருந்தன.
இத்தனைக்கும் மத்தியில் இத்தனை எதிர்பார்ப்புக்களுடன் இங்கே வந்து... எங்கே போனான் கேசவன்?
முத்தையா கேசவனின் வீட்டுக்கு வெளியிலேயே வராந்தாவில் உட்கார்ந்து காத்திருந்தான். இன்னும் ஒரு மணி நேரத்தில் பள்ளிக் கூடம் போயாக வேண்டும். படம் பார்க்க அரை மணி நேரமாவது ஆகும். கேசவன் துரோகம் பண்ணி விட்டான். இனிமேல் இவனை நம்பக் கூடாது. இவனுடன் என்ன தோழமை வேண்டிக் கிடக்கிறது? ஒழித்துத் தொலைக்க வேண்டும். அயோக்கியன்.
இருந்தாலும் கொஞ்ச நேரம் இருந்து பார்க்கலாம். இல்லாவிட்டால் "என்ன --ரு அவசரம் ஒனக்கு? அஞ்சு நிமிஷம் காத்திருக்கக் கூடாதா?" என்று திட்டுவான்.
வராந்தா வழியே ஒரு தமிழ்ப் பெண் போனாள். அவனைப் பார்த்து லேசாகச் சிரித்தது போல் இருந்தது. முத்தையா தெரியாதது மாதிரி தலையைத் திருப்பிக் கொண்டான். யார் எங்கேயோ பார்த்தது போல....! அம்மாவை ஒரு நாள் பார்க்க வந்தாளோ? அம்மாவோடு வேலை செய்யும் பெண்ணோ? மனம் திடுக்கிட்டது. தெரிந்து கொண்டிருப்பாளா? அம்மாவிடம் சொல்வாளோ? ஒரு மாதிரி பயம் வந்து கவிந்தது.