சீச்சி! தெரிந்திருக்காது. வீட்டுக்கு வந்தபோது என்னைப் பார்த்தது கூட நினைவிருக்காது. எப்பவோ ஒரு நாள். மறந்து போயிருக்கும். மனம் சமாதானப் பட்டது.
காத்திருந்தான். இன்னும் ஐந்து நிமிடங்கள். பள்ளிக்கூடத்துக்கு லேட்டாகிவிடும். பரவாயில்லை. கொஞ்சம் லேட்டானால் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். "பைசிக்களில் காத்துப் போய்விட்டது சார், அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லை சார், வயித்து வலி சார்" எத்தனையோ மாதிரி சொல்லலாம்.
மோட்டார் சைக்கிள் சத்தம் கீழே கேட்டு எட்டிப் பார்த்த போது கேசவன்தான். மோட்டார் சைக்கிளைக் கீழே வைத்துப் பூட்டிவிட்டு மேலே வந்தான்.
"என்னடா லேட் பண்ணிட்ட?" என்று ஆவலோடு கேட்டான் முத்தையா.
"போடா. பெரிய சிக்கலாப் போச்சி. வேற ஆளுங்க வாடகைக்கு வாங்கிட்டுப் போயிட்டாங்க. இன்னுங் கொஞ்ச நேரத்தில கெடைச்சிரும்"
கேசவன் கவலைப்பட்டான். "கொஞ்ச நேரன்னா?"
"இன்னும் அரை மணி நேரத்தில..."
"இன்னும் அரை மணியா? கேசவா, பள்ளிக்கூடத்துக்கு நேரமாயிடுண்டா. நாளைக்குப் பாத்துக்கலாமா?"
"போடா பெரிய பள்ளிக்கூடம். நீ போறதுன்னா போ! நான் இன்னைக்குப் போகல! நாளைக்கு இந்த வீடியோ கிடைக்காது. இன்னைக்கு திரும்ப குடுத்திறனும். அத வேற எடத்துக்கு அனுப்பப் போறாங்களாம்."
மனம் தவித்தது. "அப்படின்னா?"