காதல் மணம் - மது
முகை விரியும் முன்
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே
{ “காதல் மணம்” என்ற இந்தக் கவிதைக் கதை இறையனார் பாடிய இக் குறுந்தொகை பாடலால் ஈர்க்கப்பட்டு அதைத் தழுவி எழுதப் பட்டது... சிலர் படித்திருப்பீர்கள் ... திருவிளையாடல் படம் பார்த்தவர்கள் சிவாஜி கணேசன் , நாகேஷ், ஏ. பி . நாகராஜன் பகுதியை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.. மற்றவர்கள் இறுதியில் உள்ள குறிப்பைப் படித்துவிட்டு பிறகு மலருக்கு தாவுங்கள் }
(1)
கொட்டும் அருவியின் குதூகலமாய் அவள்
கடலின் ஆழத்தின் அமைதியாய் அவன்
(2)
படபடவென வெடித்திடும் பட்டாசாய் அவள்
கம்பீரமாய் முழங்கும் இடியென அவன்
(3)
தித்திக்கும் நிலவின் குளிர்ச்சியாய் அவள்
தகதகக்கும் சூரியனின் தீட்சண்யமாய் அவன்
(4)
எதிர் துருவங்கள் தான் ஈர்க்குமோ!!!
"காதல் மணம் "
வாசம் ப(பி)டிப்போமா!!!
(5)
கொண்டாட்டம் உற்சாகம் - அது ஒரு பிறந்த நாள் விழா
குட்டி தேவதையாய் முதலாண்டில் அடி வைத்த குழந்தை நிலா..
(6)
பாரெங்கும் பரந்து விரிந்த தொழில் சாம்ராஜ்ய மன்னன்
பறந்து வந்து விட்டான் - தோழியின் மகளுக்கு அவன் தாய் மாமன்.
(7)
மழைமேகம் மண்ணில் தவறி விழுந்ததோ
மயில்தோகையென படர்ந்து விரிந்ததோ
முதல் பார்வையிலே கிறங்கி நின்றான்
மங்கையரிடம் மயங்காதவன் - கருங் கூந்தலிலே மோகம் கொண்டான்
(8)
அறிமுகப் படலம்
அங்கு ஓர் காதல் காவியம் அரங்கேற்றம்
(9)
என் உயிர் நண்பனே! என் பிரியமான தோழியிவள்.
ஓர் விபத்திலிருந்து நிலாவின் உயிர் காத்தவள்
இசையின் அரசி நாட்டியப் பேரொளி
பண்பில் சிகரம் – இவள் பாரதி .. (நம் நாயகி)
(10)
இவன் சகல கலா வல்லவன்; வசீகர மன்மதன்
இருபது வருட நட்பு; இருந்தும் புரியாத புதிரானவன்
தொழில் நிர்வாகத்தில் சூரப்புலி - என்
தோழன் மதன் யாருக்குமே எட்டாக் கனி...( நம் நாயகன்)
(11)
விழிகள் நான்கின் உரசல்
இதயப் பாறைகளில் விரிசல்
(12)
முதல் முறை தோற்றுப் போனான்
சிறையெடுத்து விட்ட வெற்றிப் புன்னகையுடன்
முகம் சிவக்க தலை குனிந்தாள்
எட்டாக்கனியைக் கைப்பற்றிய களிப்புடன்