(13)
செவ்வானம் பூத்தூவி வாழ்த்தியது
செவ்வனே காதல் விருட்சத்தை வளர்த்து விட்டது
(14)
இறைவன் முன்மொழிந்ததை பெற்றோர் நிச்சயம் செய்தனர்
இணைந்த மனங்களுக்கு மணநாள் குறித்து விட்டனர்
(15)
பின்னோடு அணைத்து கூந்தல் வாசம் பிடித்தான்
பாவை அவனணைப்பில் தன் வசம் இழந்தாள்
(16)
என் கூந்தலில் முகம் புதைத்து
என்ன ஆராய்ச்சி என் மனுவிற்கு..
நக்கீரனும் ஈசனுமே தெளிவு பெறாத ஐயம்
நீ கண்டு விட்டாயோ! ஏன் இந்த பரவசம்!
(17)
முந்தானை முடிச்சு என்று தான் கேள்வி
முடி அழகாலே கட்டிப் போட்டு விட்டாயடி என் ரதிதேவி..
காத்திரு கண்மணி காலம் அதிகமில்லை
கல்யாண நாளன்று சொல்லுவேன் என் பதிலை..
(18)
மாலைக் கதிரவனே சீக்கிரம் மறைந்துவிடு
மறுகோடியில் இருக்கும் அவனிடம் சென்றுவிடு
மன்னவனுக்கு என் காலை வணக்கம் சொல்லிவிடு
மங்கையென் கரம் பிடிக்க விரைந்து வர ஆணையிடு (18)
(19)
இரவு முழுதும் என் துயர் கண்டு சிரித்தாய்
இனி அங்கும் சென்று என்னவளை காய்வாய்
அதனால் இப்போது நீ தேய்ந்து போய்விடு
அமுத நிலவே! மணநாள் இரவு வாழ்த்த வளர்ந்துவிடு
(20)
விஞ்ஞான வளர்ச்சியின் வசதிகள் இருந்தும்
வான் நிலவை சூரியனை தூது செல்ல யாசித்தனர்
இயற்கை வருடித் தரும் இனிய ஆறுதல்
இவர்கள் பிரிவின் துன்பத்தையும் நேசித்தனர்.
(21)
அடைமழையும் புயலும் வெளியில் ஆட்டிப் படைக்க
அங்கு புறப்பட்டுவிட்டான் என்ற செய்தியைக் கேட்ட
அவள் மனதிலோ இதமான தென்றல் வீச
ஆனந்தம் கொண்ட இயற்கையும் காதலுக்கு அடங்கி விட
(22)
ஊரெங்கும் புயலுக்குப் பின் வரும் அமைதி
உள்ளத்தில் இடியென தாக்கியது ஒரு செய்தி
மதன் வந்த விமானம் விபத்துக்குள்ளானது - அவளின்
மனம் மட்டும் சிறிதும் அதிராமல் துடித்தது.
(23)
ஒவ்வொரு தகவலாய் வந்த வண்ணம்
ஒருவரும் பிழைத்து வர இல்லை சாத்தியம்
(24)
என்ன பெண் நான் - என்னவனுக்கு ஆபத்து
என் மனம் பதறவில்லையே!!
ஏனென்று எனக்குத் தெரியவில்லையே!!
(25)
அறிவும் மனமும் எதிர் திசைகளில் பயணிக்க
தன் நிலை விளங்காமல் துயர் கொண்டாள்
இறைவன் திருவடியில் சரணடைந்தாள்