அர்த்தநாரி – ஜெய்
This is entry #29 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
ஆதியும், அந்தமுமான
அந்த சிவனை
அர்த்தனாரியாகத் தொழும் நாம்
ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல்
இருக்கும் மனிதரை
மனிதராகக் கூட மதிக்காதது ஏன்??????
“அபிஷேக் எங்கடாப் போன, இதென்ன இத்தனை நேரம் விளையாட்டு உனக்கு”, ஆறு மணிக்கு விளையாடப் போன பையன் எட்டு மணிக்கு வீட்டுக்குள் நுழைய, அவனிடம் கத்த ஆரம்பித்தாள் சுகன்யா.
“அம்மா, ஸ்வப்னாகூட விளையாடிட்டு இருதேன்ம்மா, டைம் போனதே தெரியலை, சாரிம்மா”
“ஏண்டா பன்னெண்டு வயசாகுது. எட்டாங்கிளாஸ் வந்தாச்சு. இன்னும் என்னடா பொண்ணுங்க கூட விளையாடிட்டு. இந்த flatsல இருக்கற பாய்ஸ் எல்லாம் சேர்ந்து கிரௌண்ட்ல கிரிக்கெட் விளையாடுறாங்க இல்லை. அவங்களோட போறதுக்கு என்ன”
“அம்மா, அவங்க சும்மா, என்னைக் கிண்டல் பண்ணிட்டே இருக்காங்கம்மா. விளையாட சான்ஸும் தர்றதில்லை. எப்போப் பார்த்தாலும் பால் பொறுக்கிப் போடுன்னு நிக்க வச்சுடறாங்க”
“என்கிட்ட ஊர்ப்பட்ட வாய் பேசறியே, அவங்ககிட்ட அதே மாதிரி பேச வேண்டியதுதானே”
“என்னால எல்லாம், அவங்ககூட சரிக்கு சரியா பேச முடியாதும்மா. நான் ஸ்வப்னா கூடவும், அவ ப்ரிண்ட்ஸ் கூடவுமே விளயாடிக்கறேன்”
“எப்படியோ போ, சரி நான் டின்னர் முடிச்சுட்டேன். வந்து சாப்பிடு, வா”
“அம்மா, நாளைக்கு ஸ்கூல்ல குழந்தைகள் தின விழா கொண்டாடறாங்கம்மா. எல்லாருமே ஏதானும் ஈவென்ட்ல கலந்துக்கனும்ன்னு டீச்சர் சொல்லிட்டாங்க’
“ஓ, நீ என்னடா பண்ணப் போற. நீதான் நல்லா வரைவியே, பேசாம ஆர்ட் காம்படிஷன் இருந்தா அதுல சேர்ந்துடு”
“இல்லைமா, நான் டான்ஸ் ஆடலாம்ன்னு இருக்கேன்”
“என்னது நீ ஆடப் போறியா, கலக்கறடா அபிஷேக். சரி, என்ன டான்ஸ் ஆடப் போற, ஹிப் ஹாப், சால்ஸா, டிஸ்கோ, இதுல எது”
“இதுல எதுவுமே இல்லமா, நான் பரத நாட்டியம் ஆடலாம்ன்னு இருக்கேன்”
“என்னது பரத நாட்டியமா????? உனக்கு அதுல எப்படி வணக்கம் சொல்றதுன்னு கூட தெரியாதேடா”
“என்னமா நீ, அதுக்கு பேர் வணக்கம் சொல்றது இல்லை, அதுப் பேர் நமஸ்கார் ஸ்டெப். ஸ்வப்னா டான்ஸ் கத்துக்கறா இல்லை. அவதான் எனக்கு சொல்லித்தரா. இன்னைக்கு அவ வீட்டுக்குப் போய் முதல் ஒரு மணி நேரம் டான்ஸ் ப்ராக்டிஸ் பண்ணிட்டுத்தான் விளயாடவே போனோம்”
“நல்லாப் பண்ணினா சரி. என்னப் பாட்டுக்கு ஆடப் போற?”
“சலங்கை ஒலி, படத்துலேர்ந்து வான் போலே பாட்டுக்கு ஆடப் போறேன்மா”
“சூப்பர் பாட்டுடா, கமல் அதுல செம்மையா ஆடி இருப்பார். youtubeல அவர் ஆடினதையும் ஒரு வாட்டி பாத்துக்கோ. ஸ்வப்னா சொல்லித்தராத ஸ்டெப்ஸ் இருந்தா அதையும் சேர்த்து ஆடலாம். அப்பறம் டிரஸ் என்ன போடப் போற. அதுவும் ஸ்வப்னாதுதானா”, என்று சுகன்யா விளையாட்டாக கேட்க, “போம்மா, அது நான் பைஜாமா, குர்த்தா போட்டு ஆடிடுவேன்”, என்றபடியே நடனப் பயிற்சி செய்ய சென்றான் அபிஷேக்.
“அபிஷேக் இன்னைக்கு ப்ளாட்ல பாய்ஸ் டேஅவுட் போறாங்களாம். அதுக்கு பசங்க எல்லாருமா சேர்ந்து சினிமா போலாம்ன்னு முடிவு பண்ணி இருக்காங்க போல. உனக்கு ஓகேவான்னு மேல வீட்டு ஆர்யன் கேக்க சொன்னான்டா”
“அவன் கேட்டா நான் வரலைன்னு சொல்லிடும்மா”
“ஏண்டா, படம் போறது உனக்கு பிடிக்கலையா. அப்படின்னா அது முடிச்சுட்டு எல்லாருமா சேர்ந்து பீச் போயிட்டு அப்படியே டின்னர் முடிச்சுட்டு வரப்போறாங்க போல, அதனால நீ பீச்க்கு நேரா வந்துருவேன்னு சொல்லட்டா”
“வேண்டாம்மா, எனக்கு அவங்க கூட போறதே பிடிக்கலை. எப்போப் பார்த்தாலும், ஒருத்தன் தோளுல இன்னொருத்தன் கையப் போட்டுட்டு, இல்லைன்னா ஒருத்தனை ஒருத்தன் அடிச்சுட்டுன்னு தொட்டுட்டே இருப்பாங்க”
“என்னடா அபிஷேக் இது, இதெல்லாம் ப்ரிண்ட்ஸ்குள்ள சகஜம்டா. நானும் நம்ம ரமேஷ் அங்கிளும் கூட வெளில போகும்போது தோளுல கைப் போட்டுட்டுதான் போவோம்”, அபிஷேக்கின் அப்பா மகேஷ் அவனுக்கு அதில் ஒன்றும் தப்பில்லை என்று கூறினார்.
“ஏண்டா போன வாரம் ஸ்வப்னா கூட சண்டை, அவளைப் போட்டு அந்த அடி அடிச்சே. அவளைத் தொட்டு தொட்டு பேசறது மட்டும் பரவா இல்லையா”, சுகன்யா கேட்க, ‘அவ என்னோட friendமா’, என்று பதிலளித்தான் அபிஷேக்.
பெண்களுடன் சகஜமாக இருக்கும் அபிஷேக்கால் ஆண்களுடன் சும்மாக் கூட பழக முடியவில்லையே என்று சுகன்யா கவலைப் பட, இன்னும் ஒரு வருடத்தில் கல்லூரி சென்றால் எல்லாம் மாறிவிடும் என்று ஆறுதல்படுத்தினார் மகேஷ்.
“டேய் அபிஷேக், இது என்னடா எப்போப் பார்த்தாலும், அந்த ஸ்வப்னா கூடவும், அவ ப்ரிண்ட்ஸ் கூடவுமே சுத்திட்டு இருக்க, சின்னப் பையனா இருக்கும்போது பரவா இல்லை. இப்போ உனக்கு பதினெட்டு வயசாச்சு. காலேஜ் போயாச்சு. பார்க்கிறவங்க உன்னையும், அவளையும் சேர்த்து வச்சு தப்பா பேசறாங்க, முதல்ல girls கூட சுத்தறதையும், அவங்க கூட விளயாடறதையும் நிறுத்து”, ஆபீசில் இருந்து வந்த உடன் அபிஷேக்கிடம் கத்த ஆரம்பித்தார் அவனின் தந்தை மகேஷ்.
“அப்பா, ஏம்ப்பா திட்டறீங்க. நான் ஒண்ணும் அவங்க கூட தப்பாப் பழகலை. எனக்கு ஸ்வப்னா ஒரு நல்ல friend. அவ்வளவுதான். அதுக்கு மேல ஒண்ணும் இல்லை. எனக்கு பாய்ஸ் கூட பேசவே பிடிக்கலைப்பா. அவங்க கூட பேசும்போது ஒரு மாதிரி கூச்சமா இருக்கு”
“என்னது, கூச்சமா இருக்கா, என்னடா உளர்ற?’
“இல்லைப்பா, நிஜமாவேதான் சொல்றேன். என்னால எந்த பாய்ஸ் கூடவும் சகஜமா பழக முடியலை. அவங்க பக்கத்துல வந்தாலோ, இல்லை அவங்க என்னைத் தொட்டுப் பேசினாலோ எனக்கு என்னவோ மாதிரி இருக்குப்பா, பிடிக்கவே மாட்டேங்குது”
“என்னாடா பைத்தியம் மாதிரி பேசற. உன் வயசுப் பசங்க, பொண்ணுங்க கூடப் பழகினாதாண்டா தப்பு………”
“அப்பா, ப்ளீஸ்பா, என்னை இப்படியே விட்டுடுங்க”, என்று மகேஷ் பேசிக்கொண்டிருக்கும்போதே அதை காது கொடுத்து கேட்க விரும்பாதவனாய் உள்ளறைக்கு சென்றான் அபிஷேக்.
“என்னங்க இது, இவன் ஏன் இப்படி இருக்கான். இவன் பண்ற வேலை எல்லாம் பார்த்தா பயமா இருக்குங்க. ரெண்டு நாள் முன்னாடி கண்ணாடிகிட்ட நின்னுட்டு என்னோட மை இட்டுட்டு இருந்தான். நான் போய் கேட்ட உடனே, ஒண்ணும் இல்லைமா, சும்மா வச்சு பார்த்தேன் அப்படிங்கறான். அதே மாதிரி இவன் பேசும்போது இவனோட குரல் கேக்க என்னவோ மாதிரி இருக்கு”, என்று சுகன்யா புலம்ப ஆரம்பிக்க தன் மகனிற்கு ஏதேனும் பிரச்சனையோ என்று முதல் முறையாக யோசிக்க ஆரம்பித்தார் மகேஷ்.
இப்படியே நாட்கள் செல்ல, அபிஷேக்கின் நடத்தையில் நிறைய மாற்றங்கள் வர ஆரம்பித்தன. உருவத்தில் ஆணாக இருந்தாலும், அவன் நடவடிக்கைகள் பெண்ணின் நடவடிக்கை போல் இருக்க, அதைக் கண்டு கொண்ட மகேஷும், சுகன்யாவும் கவலைப் பட ஆரம்பித்தார்கள். கல்லூரியிலும் அவனின் சக மாணவர்கள் கிண்டல் செய்ய ஆரம்பிக்க, அவன் கல்லூரிக்குப் போக முடியாது என்று அவன் பெற்றோரிடம் சண்டை போட ஆரம்பித்தான்.
“அப்பா, நான் நாளைலேர்ந்து காலேஜ்க்கு போகலைப்பா”
“அபிஷேக் பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு, ஏதோ போனாப் போகட்டும்ன்னு உன் இஷ்டத்துக்கு விட்டா, இப்போ காலேஜ் போக முடியாதுன்னு சொல்ற. படிக்காம என்ன பண்ணப் போற”
“அப்பா, ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. பசங்கல்லாம் எப்போப் பார்த்தாலும் கிண்டல் பண்றாங்க. நான் கிளாஸ்க்குள்ள போகும்போதெல்லாம், ஒம்போது, ஒம்போது அப்படின்னு கத்தறாங்கப்பா, நான் அப்படித்தான்னு தெரியும், இருந்தாலும் மத்தவங்க சொல்லும்போது எனக்கு அசிங்கமா இருக்கு”, என்று அழ ஆரம்பித்தான்.
“டேய் என்னடா சொல்ற. இது என்ன அசிங்கமா பேசிட்டு. வா நானும் உன்கூட காலேஜ்க்கு வரேன். உன் பிரின்சிபால் பார்த்து கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்”