கடவுள் - ராசு
This is entry #47 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
“ஒரு நாள் மட்டுமே!”
“இங்கிருக்க எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் கெடு அது!”
“நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இந்த இடத்தில் இருக்க இன்று ஒருநாள் மட்டுமே கெடு விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்து விட்டார்கள். சொத்துச் சண்டையில் பிரிந்திருந்த குடும்பம் சேர்ந்து எடுத்த முடிவு இது.
கூடிக்கூடி பேசினார்கள். அப்படி பேசியதன் விளைவு எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் கெடு.
நகரத்தின் எல்லை தன் கரம் கொண்டு அணைக்க ஆரம்பித்த கிராமப் பகுதியில்தான் இந்த வீடு இருக்கிறது. பல தலைமுறைகளைக் கண்ட விசாலமான காற்றோட்டமான வீடு.
கட்டுமான கம்பெனி ஒன்று அடுக்குமாடி குடியிருப்பை கட்டுவதற்கு ஏதுவான இடமாக இந்த வீட்டை தேர்ந்தெடுத்தது என் வாழ்க்கைக்கே உலை வைத்துவிட்டது.
நாளைக்கு முன்பணம் தருவதாக கூறியவர்கள் எனக்கு இங்கிருக்க உரிமை கிடையாது என்றும் கூறிவிட்டனர். வீட்டினர் அதற்கு ஒத்துக்கொள்ளவும் அவர்கள் சென்று விட்டனர்.
அந்த கம்பெனிகாரர்களுக்கு என்னைத் தெரியாது. ஆனால் இந்த வீட்டில் உள்ளவர்கள் ஒருவருக்கு கூடவா என்மேல் இரக்கம் வரவில்லை.
அதோ போகிறானே முரளி! அவனை சிறுவயதில் என் மடியில் தாலாட்டி வளர்த்தேன். என்னிடம் விளையாடி வளர்ந்தவன். இப்போது அவன் மகன் கூட அப்படித்தான். வளர்த்த பாசம் கூடவா இருக்காது.
நான் கூப்பிடக் கூப்பிட காதில் வாங்காமல் போய்விட்டான். முகத்தில் பிரகாசம் தெரிந்தது. தன் பங்குப்பணம் எவ்வளவு வரும் என்று கணக்குப் போட்டிருப்பான்.
பணக்கணக்கு போட்டதில் பாசக்கணக்கு மறந்து விட்டான். அவர்களிடம் பங்கிற்கா நான் நிற்கப்போகிறேன். ஒரு மூலையில் அவர்களுக்கு தொந்தரவு தராமல்தானே இவ்வளவு நாளும் இருந்தேன். இனியும் அப்படி இருந்துவிட்டுப்போகிறேனே!
இந்த இடத்தை விட்டுப்போனால் நான் இறந்துவடுவேன் என்று அவர்களுக்கு தெரியாதா? நினைக்க நினைக்க அழுகையும் ஆத்திரமும் அடைத்தது.
எனது கண்ணீர் இவர்களிடம் இரக்கம் வரவைக்குமா? கடவுளே! உனக்கு கூடவா என் மேல் இரக்கமில்லை?
தலைமுறைகள் கடந்து வாழும் என்னைப் போன்றவர்களை கடவுளாக பாவிப்பவர்கள் கூட உள்ளனர். ஆனால் இவர்கள் என்னை ஒரு ஜீவனாக கூட மதிக்கவில்லையே!
என் உயிர்.. என் வாழக்கை அவர்களுக்கு துச்சமாகிவிட்டதே!
என் கண்களில் கண்ணீர் வழிகிறது. பொங்கிப் பொங்கி அழுகிறேன். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சுயநலமில்லாமல் எல்லோரையும் பாசத்துடன் அரவணைத்த எனக்கு அவர்களின் உதாசீனம் அழுகையை அதிகப்படுத்தியது. ஒருவேளை என் கண்ணீர் அவர்களின் மனதை மாற்றினால்?”
“இதோ விடிந்து விட்டது. இன்னும் நான் அழுதுகொண்டிருக்கிறேன். வீட்டினர் என்னை வெளியேற்ற ஆயத்தமாக ஆட்களுடன் வந்துவிட்டனர்.
முதலில் வந்த முரளி என்னைப் பார்த்து அதிர்ந்து நின்றான். அட! இவனுக்கு கொஞ்சம் இரக்கம் இருக்கு போலவே? நான் வியப்புடன் அவனைப் பார்த்தேன்.
முரளியைப் பின்தொடர்ந்து வந்த அனைவரின் முகங்களிலும் அதிர்ச்சியும் வியப்பும் மாறி மாறி வந்தன. கட்டுமானக் கம்பெனிக்காரர்களின் நிலையும் கூட அதுதான். நான் அவர்கள் அனைவரையும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.”
“அடடே! இந்த வேப்ப மரத்தில் பால் வடிகிறதே? தெய்வாம்சம் பொருந்திய மரமப்பா இது. நல்லவேளை வெட்டுவதற்கு முன் ஆண்டவன் காட்டிக் கொடுத்துட்டான். இது இப்படியே இருந்துட்டுப்போகட்டும்.”
“கம்பெனி முதலாளியின் வார்த்தைகள் எனக்கு ஆனந்தமளித்தன. என்னை வெட்டுவதற்கு வந்த ஒருவன் எங்கிருந்தோ ஒரு மஞ்சள் துணி கொண்டு வந்து கட்டி குங்குமம் வைத்தான்.
கடவுள் கண் திறந்து வி;ட்டார்.
இந்த மனுசப் பயலுகளுக்கு கடவுள் மேல் பயம் இருக்கிறதால்தான் நாட்டில் இன்னும் கொஞ்சம் இயற்கை உயிரோடு இருக்கு.
ஆனந்தத்தில் துள்ளினேன்.
என்னை சாகடிக்கத் துணிந்தவர்கள் பயபக்தியுடன் என் காலில் விழுந்து வணங்கினர்.
இப்போதும் நான் அழுகிறேன். ஆனால் இது ஆனந்தக் கண்ணீர். தன் அம்சமாக என்னைக் காட்டி என்னைக் காப்பாற்றிய கடவுளுக்கு நான் செய்யும் அபிசேகம்!
“நாம் வளமோடு நலமாக வாழ இயற்கையைப் பேணுவோம்!”
This is entry #47 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.