மனித நேய கடவுள் - மலர்
This is entry #46 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
களக்காடு பேருந்து நிலையம். மூன்று வரிசை கொண்ட பயணிகள் இருக்கை. மாலை நேரம் என்பதால் பள்ளிகூடமே திரண்டு அங்கு தான் நின்று கொண்டிருந்தது. கசமுச கசமுச என மாணவர்களின் சத்தம்.
70 வயதிருக்கும் அவருக்கு. புது வேட்டி சட்டை ஆனால் நன்றாக அழுக்காகியிருந்தது. இருக்கையில் அமராமல் தரையோடு தரையாய் கிடந்தார். வாயில் கோழை வடிந்து கொண்டிருந்தது. அவரை சுற்றி சிறுநீர் கழித்திருந்த தடம் ஆறுபோல கிடந்தது. யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை. அவரும் யாரையும் கண்டு கொள்ளும் நிலமையில் இல்லை.
“என் உயிர வாங்குறதுக்குண்ணே பஸ்.ஸ்டாண்டுக்கு வரும் போல, மூத்திரம் வேற போய்வைச்சிருக்கு, யோவ் . . . யோவ்... எந்திரிய்யா, இங்க வந்து அசிங்கம் பண்ணி வைச்சிருக்க” என்று துப்புரவு பணி செய்யும் அம்மா கத்த, பெரியவர் தலையை தூக்கி பார்த்து விட்டு படுத்து கொண்டார். அவர் குடித்திருப்பதற்கான வாடையும் தெரியவில்லை. இரண்டு, மூன்று நாட்கள் சாப்பிடாமல் கிடந்தவர் போலிருந்தார்.
அந்த அம்மா அவர் படுத்திருந்த இடத்தை மட்டும் விட்டு, விட்டு மற்ற இடங்களை புலம்பிக் கொண்டே பெருக்கியது.
நான் காவலர் பணியில் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள் தான் ஆகியிருந்தது. பணியின் காரணமாக களக்காடு பேருந்து நிலையத்துக்கு, எனது சக நண்பருடன் வந்திருந்தேன். பள்ளி மாணவர்களை பேருந்தில் ஒழுங்காக ஏற சொல்வதும், படிக்கட்டில் பயணம் செய்யாமல் பார்த்துக் கொள்வதும் தான் எனது பணி.
நானும் எனது சக நண்பரும் அந்த பெரியவர் கிடந்த கோலத்தைப் பார்த்து, அவரை ஐயா, ஐயா என்று எழுப்பி பார்த்தோம் பயனில்லை.
“டே எஸ்.ஐ. சுப்பு சார் வாறாரு, வாடா போய் பாத்துட்டு வரலாம்” என்றான் சக நண்பன்.
தொப்பியை தலையில் வைத்து இருவரும் சல்யூட் அடிக்க, பதிலுக்கு அவர் தலையாட்டி விட்டு,
“என்னப்பா, பஸ் ஸ்டாண்ட் டியூட்டியா?”
“ஆமா சார்”.
“சார் அங்க ஒரு வயசான தாத்தா படுத்து கிடக்காரு, யாருன்னே தெரியலை. யாருன்னு விசாரிக்கணும்மா சார்?
“அட போங்க தம்பி, கொஞ்ச நேரம் கிடக்கும். பிறகு எவனாவது வந்து கூப்பிட்டு போயிடுவான். இதெல்லாம் இங்க சகஜம் தம்பி. அவன அவன் வீட்டுல கொண்டு போய் சேத்தா மட்டும். நம்ம சம்பளத்தையா கூட்டியா குடுக்க போறாங்க. . . “
பொறுப்பற்ற அவரது பேச்சு என்னை வெறுப்பேற்றியது இருந்தாலும் லேசாக சிரித்தேன்.
“சரி தம்பி வாறேன். எதாவது பிராப்ளம்னா உடனே கால் பண்ணுங்க என்றார்.
அடுத்து மஞ்சுவிளை பேருந்து வர, பள்ளிக் கூட மாணவர்கள் பேருந்து நிற்பதற்குள் முன்னே ஓட,
“ஏலே! நில்லுங்கடா” என்று பிரம்பை காட்ட, எல்லோரும் நின்றனர். பேருந்திலிருந்து பயணிகள் இறங்குவதற்கு முன்பே, அவர்களை இறங்கவிடாமல் உள்ளே நுழைந்தனர்.
நான் பேருந்தின் பக்கவாட்டில் பிரம்பால் அடிக்க, கூட்டமே என்னை திரும்பி பார்க்க, “இறங்கிறவங்களுக்கு வழி விடு” என்றேன். பயணிகள் இறங்கிய பின் அனைவரும் ஏறினார்கள். பேருந்து கிளம்பி சென்றது.
“இங்க பாரு நண்பா! இந்த பஸ்சுல ஏறி இறங்குவதெல்லாம் அவர்களுக்கே தெரியணும். நாளைக்கே நாம இங்க இல்லன்னா, முந்தியடித்துட்டு தான் ஏறப்போறாங்க”.
“அதென்னமோ உண்மைதான். இருந்தாலும் நாம இருக்கும் வரைக்கும் நல்ல படியா பஸ் ஏத்தி விடுவோம்” என்றேன்.
அடுத்து லெபன் ஏட்டையா வர, மூவரும் பேசிக்கொண்டே பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல,
“தம்பி, யார் இந்த பெரியவரு?“
“தெரியல, ஏட்டையா ரொம்ப நேரமா கிடக்காரு,
பேச்சு கொடுத்தா பேச மாட்டேங்காரு”
குனிந்து அந்த பெரியவரின் கையை பிடித்து தூக்கி, “தாத்தா.. தாத்தா..” என காதருகில் ஏட்டையா சத்தம் போட ஹா.. ஹா.. என்பதைத் தவிர வேறேதும் பேசவில்லை.
“இந்த ஆளப் பார்த்தா செத்து போயிடுவாரு போல இருக்கு, பேசக் கூட கெதி இல்ல.. ..
மீண்டும் தாத்தா எந்த ஊரு . . . எந்த ஊரு . . . ” என கேட்க ஏதோ முனுமுனுத்தார் ஏதும் கேட்கவில்லை.
“ஏட்டையா, அவரோடு சட்ட பையில ஏதோ இருக்கு பாருங்க. . .” பாக்கெட்டில் அவர் கைவிட அதிலொரு பர்ஸ் இருந்தது. திறந்து பார்த்தார். ஒரு பத்து ரூபாய் நோட்டும் இரண்டு இருபது ரூபாய் நோட்டுமிருந்தது. அதை வெளியில் எடுத்தவுடன், பெரியவரின் கை அதை பிடுங்க வேகமாக வந்தது.
‘நாங்க ஒண்ணும் உங்க பைசாவ கொண்டு போக மாட்டோம். நீங்க எந்த ஊரு சொல்லுங்க..”
“கடம்போ... கடம்போ...” என்றார். எனக்கேதும் புரியவில்லை. ஏட்டையா, “கடம்போடு வாழ்வா“ என்றதும் ஆமா என்று தலையசைத்தார். உங்க பேரு “ஆறுமுகம்” என்றார். அவரது சட்டை பையில் பர்சை வைத்து விட்டு, தள்ளி வந்து “கடம்போடுவாழ்வுல ப்ரண்ட் ஒருத்தன் உண்டு” என சொல்போனில் நம்பரை தேட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் “ஹலோ, நான் லெபன் பேசுறேன். ஒரு சின்ன ஹெல்ப்;.. என்டா சொல்லு .. உங்க ஊருல ஆறுமுகம்னு ஓரு பெரியவர தெரியுமா?”
“தெரியும்டா, விநாயகர் கோயில் தெரு...”
“ஓகே . டா. . . அவங்க வீட்டு மொபைல் நம்பர் வாங்கிக்கொடு” என்று கூறி போனை கட் செய்தார்.
“ஏட்டையா, இங்க கடம்போடுவாழ்வு போறவங்க யாராவது இருக்காங்களான்னு கேட்போமா?”
“சரி ! கேளு.”
“தம்பி, கடம்போடுவாழ்வு போறவங்க யாராவது இருக்கீங்களா. . . ?” என கேட்டேன்.
“சார் இவங்க ரெண்டு பேரும் அந்த ஊரு தான்” என ஒரு சிறுவன் கை காட்ட .. .
“நாங்க இல்ல சார். . . இல்ல சார்” என இருவரும் பயப்பட்டனர். அவர்களில் ஒரு சிறுவன் தோள் மீது கை போட்டு “தம்பி, இந்த தாத்தாவ அவங்க வீட்டுல இறக்கி விட்டா மட்டும் போதும். வேற ஒன்னும் பண்ண வேண்டாம்” என அழைத்து வந்தேன்.
அதற்குள் ஏட்டையா ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்தார். ஆட்டோகாரர், “சார் அங்க போனா iசா தராம ஏமாத்திடுவாங்க”.
“ஏ ! போப்பா, இந்த தாத்தாவ இறக்கி விடு பைசா தருவாங்க. . . நான் போன்ல பேசிட்டேன். ஒரு வேளை தரலன்னா பஸ்.ஸ்டாண்ட் வா நான் தாறேன்” என்றார் ஏட்டையா.
தாத்தாவின் கையை பிடித்து மேலே தூக்கி, ஏட்டையா கோவிலுக்கு மாலை போட்டிருப்பதை கூட பொருட்படுத்தாமல் மூத்திர வாடையடிக்கும் வேட்டியை மடித்து கட்டி விட்ட போது, ஒரு கணம் என் உடல் சிலிர்த்தது. அந்த தாத்தாவை ஆட்டோவில் ஏற்றி, அவருக்கு இருபுறமும் சிறுவர்களை அமர்த்தி, “தாத்தாவ முன்னால சாய விட்டுறாம பிடிச்சிக்கப்பா” என அனுப்பி வைத்தோம். தலையில தொப்பி வைத்து ஏட்டையாவுக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்க வேண்டும் போலிருந்தது. எந்த பிரதிபலனும் பாராமல் அவர் செய்த இந்த உதவி, என்னை மிகவும் கவர்ந்தது.
ஒரு வாரம் கழித்து ஒரு கேஸ் விசயமாக கடம்போடுவாழ்வு ஊருக்கு போக வேண்டியிருந்தது. அந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பும் போது,
“ஏட்டையா, போனவாரம் ஒரு தாத்தாவ ஆட்டோல ஏத்தி விட்டோமே, அவர் என்ன ஆனாருன்னு பாத்திட்டு வருவோமா” என கேட்க, வண்டியை விநாயகர் கோவில் தெரு விட்டார். தாத்தாவின் வீட்டை கண்டு பிடித்தோம்.
ஓரளவு வசதியான வீடு, கருப்புநிற கேட், ஆறுமுகம் பவனம் 1988 என எழுதியிருந்தது. மதில்மேல் பூந்தொட்டிகள் இருந்தன.
கேட்டை திறந்து உள்ளே சென்றதும், ஒரு அம்மா “வாங்க சார். . வாங்க சார். .” என வரவேற்க
“ஏம்மா ! இங்க ஆறுமுகம்னு ஒரு வயசான தாத்தா இருந்தாறே எங்கம்மா . . .“
“உள்ளே இருக்காரு” என கூட்டிப் போனார். அவரைப் பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்து போனேன். ஒரு பாயில், கால்களில் சங்கிலி கட்டப்பட்டு கிடந்தார்.
“ஏம்மா! இப்படி கட்டி வச்சிருக்கீங்க?”