அவர்கள் நடுவயது தம்பதியர். ஏதோ குடும்ப தகராக இருக்குமோ என்று எண்ணினேன். சிறிது, சத்தமாகவே பேசி வந்தனர். எனக்கு எதுவும் புரியவில்லை. என் கவனமும் அவர்கள் பக்கம் பெரும்பாலும் திரும்பவில்லை.
அவர்களுக்கு, முன் இருக்கையில் பர்தா அணிந்த இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தனர்.
அவர்களின், நான்கு கண்கள் மட்டுமே தெரிந்தன.
மிக அழகான கண்கள்.
அவர்கள், மீதிருந்த என் பார்வை, வேறு பக்கம் திரும்பினாலும், மூன்று முறை மீண்டும், மீண்டும் அவர்கள் பக்கமே திரும்பியதை என்னால் தடுக்க முடியவில்லை. அப்போது, ஒரு சிற்றின்பத்தை என்னால் உணர முடிந்தது.
விஜயகாந்த் திருமணமண்டப பேருந்து நிறுத்தம். பேருந்து நின்றது. பேருந்திலிருந்து ஒரு சிலர் கீழிறங்கினர். என் இரண்டு கால்களுக்கும் இடம் கிடைத்து விட்டது.
ஒரு முதியவர், ஒரு நடுவயது பெண் மட்டும் பேருந்தினுள் ஏறினர்.
பேருந்து நகர ஆரம்பித்தது.
கூட்டத்தில், நுழைந்து, முட்டி மோதி, தடுமாறி என்னருகே உள்ள ஓர் இருக்கையின் பிடியை பிடித்து நின்றார், அந்த முதியவர்.
கன்னடம் பேசி வந்த தம்பதியர் அமர்ந்துள்ள இருக்கையின் பிடியைப் பிடித்து நின்றாள், அந்த நடு வயதுப் பெண்.
பேருந்து சற்று வேகம் குறைவாக சென்றுக் கொண்டிருந்தது.
இது லேடிஸ் சீட் எழுந்திருங்க என்று கூறி அந்த கன்னட தம்பதியரைப் பிரித்து, அந்த இருக்கையில் அமர்ந்தாள், அந்த நடு வயதுப் பெண்.
தன் கணவனை எழுப்பி விட்ட கோபத்தில் இருக்கையின் பெரும் பகுதியை அந்த கன்னடப் பெண்ணே ஆக்கிரமித்திருந்தாள்.
இருவரின் தோள்களும் ஒன்றோடு, ஒன்று மோதி ஒரு மௌனமான சண்டை அங்கு நிலவிக் கொண்டிருந்தது.
இன்னும் சில நிமிடங்களில் அவர்கள் மௌனம் கலைந்து எழுப்பப் போகும் சத்தம், அனைவரின் காதையும் கிழிக்குமென்று எதிர் பார்த்தேன்.
கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் பேருந்து நுழைந்தது.
இந்த பேருந்தை எதிர்பார்த்து நிற்கும் கூட்டத்தைப் பார்த்த நான், என் இடத்தை உறுதி செய்து நிலையாக நின்றுக் கொண்டேன்.
பேருந்து நின்றது. சிலர் கீழிறங்கினர். பலர் உள் ஏறினர். பேருந்து நகர ஆரம்பித்தது.
என்னருகே நின்றுக் கொண்டிருந்த முதியவருக்கு இருக்கை கிடைத்து விட்டது.
சென்ற பேருந்து நிறுத்தத்திலிருந்தே, முதியவரையேப் பார்த்து வந்த, இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞன், முதியவரின் அருகே, நின்றுக் கொண்டிருந்தான்.
ஒரு சிறு ஆனந்தம் என்னுள் எழுந்தது.
எனக்கு நன்கு பரிச்சயமான, என்னை மறக்க செய்யக் கூடிய, என் மன ஓட்டத்தை தடுத்து நிறுத்தக் கூடிய ஒரு குரலின் மலையாள ஒலி என் கவனத்தை ஈர்த்தது.
உடனே, என் பார்வையை அங்கு திருப்பினேன்.
அது அவளே தான்...
எனது வலது பக்க இருக்கையில் அமர்ந்தவாறு அலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்த மகிழ்ச்சியில் நான் திகைத்து நின்றுக் கொண்டிருந்தேன்.
பல வருடங்களாக தேடி அலைந்தும், பார்க்க முடியாமல் போனவள், என் முன் வெறும் இரண்டடி தொலைவில் இருக்கிறாள்.
அலைப்பேசியில் பேசி முடித்து, அலைப்பேசியை தன் கை பையில் வைத்தாள். அவள், அலைப்பேசியின் திரை என் கண்ணில் படவில்லை. ஆனால், நாய் குட்டியின் புகைப்படம் தான் அவள் அலைப்பேசியின் முகப்பு திரையிலிருக்கும் என்று நம்பினேன்.
அவளைப் பார்த்து சிரித்தப்படி நின்றுக் கொண்டிருந்தேன்.
அவளை அழைக்க முயலும் போது, எதேர்ச்சையாக அவள் என் பக்கம் திரும்பினாள்.
நான் சிரித்தப்படி அவளைப் பார்த்தேன். அவள் சில நொடிகள் சாதாரணமாகப் பார்த்து விட்டு, முகத்தை வேறு திசையில் திருப்பிக் கொண்டாள். அதன் பின் அவள் என் பக்கம் முகத்தை திருப்பவே இல்லை.
அந்த நொடி, என் இரு புருவங்கள், ஒன்றாக இணையப் போராடின. என் மூக்கு விரிந்து அதிலிருந்து வெப்பக் காற்று வெளியேறியது.
உடனே, என் வலது கை விரல்களை மடக்கி ஓங்கி ஒரு குத்து விட்டேன்.
என் இடது கை மட்டும், என் தலைக்கு மேல் உள்ள கருப்பு இரும்பு கம்பியின் அதிர்வை உணர்ந்துக் கொண்டிருந்தது.
கூட்ட நெரிசலின் காரணமாக கம்பியை பிடித்திருந்த மற்ற கைகள் அதிர்வைப் பொருட்படுத்தவில்லை.
ஆனால், என் வலது கை விரல்கள் மட்டும், பலரின் கைகளுக்கு நடுவே ஒர் அதிர்வை ஏற்படுத்திவிட்ட பெருமிதத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது. அந்த இன்பத்தை தனிமைப் படுத்த, என் வலது கை விரல்களை என் ஃபேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டேன்.