யாதுமாகிய காதலை அறிவாயோ மனமே!!! - சாணக்யசித்தார்த்தன்
This is entry #66 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
என்னோட வருணுக்கும், நித்யஸ்ரீக்கும் நாளைக்கு கல்யாணம். ஆமா, என்னோட வருண் தான். இந்த ஒரு வருஷம் நான் அவனோட எப்படிலா இருந்தேன். எத்தனையோ தருணங்கள்ல அவனோட நான் தனிமைல இருந்துருக்கேன். இனிமேல், அவனோட தனிமைல இருக்குற சந்தர்ப்பம் எனக்கு கெடைக்குமா? அவனோட சோகத்த எல்லாம் என்ட்ட சொல்லித்தான் அழுவான். நித்யஸ்ரீயா இருக்கட்டும், இல்லேனா, அவனோட அம்மா, அப்பாவா இருக்கட்டும், யார்கிட்ட சண்டைனாலும் அவன் என்கிட்டே தான் சொல்லி ஏங்குவான். ஆனா இனிமேல். கல்யாணத்துக்கு அப்பறம், என்னோட வருண் மாறிருவானா !!! என்ன மறந்துருவானா? எப்போதும் போல என்ன செல்லமா சசினு கூப்டுவானா? என்கிட்டே இனிமேல் பேசுவானா? என்ன பாப்பானா?
அவனோட நான் பழகுறதுக்கு முன்னாடியே நித்யஸ்ரீய எனக்கு தெரியும். என்னால அவன கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு தெரியும். அவன் வாழ்க்கைல எப்பயுமே நான் கூட இருக்கமுடியாது. ஆனா நான் ஆசைப்படுறதுலாம், ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது என்ன பாத்து அவன் பேசணும், ரொம்ப அதிகமா இல்லாம, குட் மார்னிங் சொன்னா கூட போதும். நான் அவன பாத்துட்டே இருக்குற பாக்கியமாவது எனக்கு கெடைக்கணும். நித்யஸ்ரீய அவன் கல்யாணம் பண்ணுனதும் என்ன மறந்துறக்கூடாது. இதுலா நடக்குமான்னு தெரியல.
ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் கூட ரெண்டு பேர் வீட்லயும் சண்ட. மதுரைல காதல் கல்யாணம், பெத்தவங்க சம்மதத்தோட பண்றதுனா சும்மாவா, அதுவும் 2001 ல. இத்தனைக்கும் ரெண்டு பேரும் ஒரே ஜாதி தான், உட் பிரிவு தான் வேற.
காதல் கல்யாணமும், செல்போனும் மதுரக்காரங்களுக்கு அறிமுகமான காலம் அது...
நித்யஸ்ரீ, மதுரை கே. என். என். காலேஜ் ல ஃபஸ்ட் இயர் படிக்குற டேபிள் டென்னிஸ் ப்ளேயர். நல்ல கருமையான முடி, நெத்தில சின்னதா குங்குமம், சொக்கவைக்கும் பழுப்பு நிறக்கண்கள் (ப்ரவுண் கலர் ல இருக்குற பனிக்கட்டி மாதிரி), கூர்மையான மூக்கு, நல்ல சிவந்த உதடு, சிரித்த முகம். ஒல்லியான தேகம். 5 அடி 2 அங்குலம் உயரம். கருப்பு பேரழகி.
வருண், மாது காலேஜ் ல ஃபைனல் இயர் படிக்குற கபாடி ப்ளேயர். மூச்ச தம் கட்டிக்கிட்டு, ஜல்லிக்கட்டு காள மாதிரி ஒடம்ப குலுக்கி, கால்ல புழுதிய தட்டி, மீசைய (அரும்பு மீசைய) முறுக்கி விட்டு அவன் ரைடு போறத பாக்குறதுக்குன்னு தனியா ரசிகர் பட்டாளமே இருக்கு. அதுவும் குறிப்பா பெண்கள் பட்டாளம். அவனோட நேர்த்தியான உடற்கட்டு, கூர்மையான பார்வை, ரெண்டு கைய விரிச்சி ஒரு சின்ன துள்ளல் போடுவான், அப்போ காத்துல அசையுற அவனோட தல முடி, அப்டியே சொக்க வைக்கும். போட்டில வேற யாரையும் பாக்கனும்னே தோணாது.
காலேஜ் லெவல் ல ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் நடக்கும் போது, ரெண்டு பேரும் கலந்துபாங்க. வருண் போட்டில வின் பண்ணி அவன் ப்ரெண்ட்ஸோட சந்தோஷத்துல கத்தி குதிக்கிறத இவ பாத்து ரசிப்பா. நித்யஸ்ரீ டேபிள் டென்னிஸ் வெளாடுரத இவன் பாத்து ரசிப்பான். ரெண்டு பேரும் ஒவ்வொரு ஸ்போர்ட்ஸ் ஈவெண்டலயும் பாத்துப்பாங்க, ஆனா பேசுனது இல்ல. இவனுக்கு அவ டீ. டீ ப்ளேயர் னு தெரியும். அவளுக்கு இவன் கபாடி ப்ளேயர் னு தெரியும் அவ்ளோ தான்.
வருண் ஒவ்வொரு ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் முடிச்சு வீட்டுக்கு வந்ததும், "இன்னைக்கு நான் அவள பாத்தேன். ரொம்ப அழகா இருந்தா, பேசலாம்னு நெனச்சேன், என்ன பேசுறது, எப்டி ஆரம்பிக்குறது. ஒண்ணுமே தெரியல"ன்னு என்கிட்ட தான் பொலம்புவான். அவ ஜெர்ஸி டீ ஷர்ட்ல கே. என். என் னு போட்டுருந்துச்சு. அத வச்சு, அவ கே.என்.என். காலேஜ்னு இவனுக்கு தெரியும். மத்தபடி, அவ பேரு கூட இவனுக்கு தெரியாது.
ஒரு வாரம் அவளுக்காக, அவ காலேஜ் முன்னாடி நின்னு பாத்தான். எந்த யூசும் இல்ல. அடுத்த ஸ்போர்ட்ஸ் ஈவென்ட்ல அவ ஸ்டேஜ்ல பரிசு வாங்கும் போது பேர கண்டுபுடிச்சு, அவ காலேஜ் ல இருக்குற இவனோட ஃப்ரண்ட்ஸ் மூலமா அவள பத்தி எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டான்.
அவ வீட்ல இருந்து காலேஜ் வர அவள ஃபாலோ பண்ணி, “நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க”னு ஒரு சின்ன பேப்பர் ல எழுதி, அவ சைக்கிள் ல சீட்டுக்கு அடில வச்சு, சாக் பீஸால சீட் மேல அம்புகுறி போட்டு வந்தான்.
அவ அந்த பேப்பர படிச்சுட்டு சுத்தி முத்தி பாத்தா, அப்பறம் பேப்பர கிழிச்சு போட்டு போய்ட்டா.
அடுத்த நாள், “ஏன் அந்த பேப்பர கிழிச்சு போட்ட, உண்மைய தான் சொல்றேன். நீ ரொம்ப அழகா இருக்க.” னு எழுதி வச்சான்.
அவ அத படிச்சுட்டு, யாரோ அவ காலேஜ் பையன் தான் வெளாடுரானு நெனச்சுகிட்டா. அடுத்த நாள் காலைல “நீ யாருனு சொல்லு“ னு எழுதி வச்சா.
“நான் உன்னோட தீவிர ரசிகன், நீ பால டாஸ் பண்ணி, டாப் ஸ்பின் ல சர்வீஸ் போடுவியே, சான்சே இல்ல. ஒவ்வொரு காலேஜ் ஸ்போர்ட்ஸ் ஈவென்ட்லயும் நான் உன்ன பாப்பேன்”
“நான் உன்ன பாத்ததே இல்லையே, நீ யாருன்னு சொல்லு”
“நானும் ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் ல கலந்துக்கத்தான் வருவேன். ஆனா உன்னோட அழகுல மயங்கிட்டேன். நீ ஒவ்வொரு செட் முடிஞ்சதும், உன்னோட அழகான உதட்டுக்கு மேல முத்து முத்தா வேர்துருக்கும், அதெல்லாம் நீ தொடச்சுட்டு, நீ தண்ணி குடிக்கும் போது, உன்னோட தொண்டை சங்கயே மெய் மறந்து பாப்பேன்”
“நீயும் டீ.டீ. ப்ளேயரா? எந்த காலேஜ்?”
“நான் மாது காலேஜ், டீ.டீ. ப்ளேயர்லா இல்ல. ரெண்டு நாள் கழிச்சு, திருச்சி இன்ஜினியரிங் காலேஜ் ல ஸ்போர்ட்ஸ் டே, அங்க வந்து நான் யாருன்னு கண்டுபுடி”