உயிர்த்துளி உன்னில் சங்கமம் - லாவண்யா
This is entry #67 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே... அவளைப் பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்பமுடியவில்லை. ... ஒரு மாதத்திலேயே பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர் தங்கையைப் போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள். பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள்.
இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே... இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்குத் தெரிந்தாள்.
“ச்சே... ச்சே... அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது.” அவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள். அது அவளே தான்!
ஜனனியை வேறொரு இளைஞனுடன் கண்டதும் நந்தகுமாரின் மனம் வேண்டாத எண்ணங்கள் அனைத்தைச் சுற்றியும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. கெட்ட எண்ணங்களின் ஆதிக்கம் கூடக் , கூட மதியின் பகுத்தறியும் திறன் வலுவிழந்து கொண்டிருந்தது.
அதன் பலனாக மனம் நிலைகொள்ளாமல் தவிக்க, கையிலிருந்த அவன் இரண்டு சக்கர வாகனம் தடுமாறியது. ‘ச்சே... இன்னும் இரண்டு வாரங்களில் கல்யாணத்தை வைத்துக் கொண்டு எத்தனை எளிதாக அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்’ என முணுமுணுத்த நந்தகுமார், அந்த சிக்னல் தாண்டி ஓர் கடையின் முன்னால் நிறுத்தினான்.
ஓர் பாட்டில் குளிர்ந்த தண்ணீர் வாங்கிக் குடித்தவனின் உள்ளக் கொதிப்பு சற்றும் அடங்கவில்லை. ‘ஒரு மாதமாக நான் இவளை நினைத்துக் கனவு கண்டு கொண்டிருந்தால் இவளோ வேறொருவனை நினைத்துக் கொண்டிருக்கிறாள்...’ என எண்ணியவாறே மீண்டும் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கிச் செலுத்தினான்.
வழிநெடுகிலும், ‘என்னை ஏமாற்றத் திட்டம் போட்டவளைச் சும்மா விடக் கூடாது... ஏதாவது செய்ய வேண்டும்... அதை அவள் வாழ்நாள் முழுமைக்கும் மறக்கக் கூடாது...’ என ஏமாந்த நெஞ்சம், பழி வாங்கத் துடித்துக் கொண்டிருந்தது.
வண்டியை நிறுத்திவிட்டு தன் வீட்டுக்குள் சென்றவனை அவன் தங்கையின் குரல் கட்டிப் போட்டது.
“நீ என்ன சொன்னாலும் என் அண்ணன் அதை நம்ப மாட்டார்... இவ்வளவு ஏன், உன்னோட என்னைச் சேர்த்து வைத்துப் பார்த்தாலும், தீர விசாரித்துத் தான் ஓர் முடிவுக்கு வருவார்...
அப்படி இருக்கறப்போ நான் உன்னை லவ் பண்ணினேன் எனப் பொய் சொன்னா உடனே நம்பிடுவாரா?” என யாரிடமோ அலைபேசியில் கத்திக் கொண்டிருந்தாள் தங்கை ஆர்த்தி.
‘தங்கை சொல்வது எத்தனை உண்மை? தங்கை தப்பு செய்துவிட்டாள் என யார் சொன்னாலும் அவன் நம்பமாட்டான். எங்கிருந்து அவள் மேல் அப்படி ஓர் நம்பிக்கை வந்தது? என் வீட்டுப் பெண் என்பதால் உண்டான நம்பிக்கையா?
ஜனனி வேறொரு வீட்டுப் பெண் என்றதும் உடனே அவள் மேல் கெட்ட சாயம் பூச வீராவேசமாக கிளம்பிவிட்டேனே... ச்சே... ச்சே... என்னவொரு கீழ்த்தரமான எண்ணம்?’ எனத் தன்னை நினைத்தே வெட்கம் கொண்டான் நந்தகுமார்.
‘கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்பதை எத்தனை எளிதாக மறந்து போனான்.
அதை நன்கு உணர்த்திய தங்கைக்கு மனதில் நன்றி சொல்லிவிட்டு, ஜனனியிடம் அவள் ஓர் இளைஞனுடன் சென்றதைப் பற்றி விசாரிக்கலாம் என்ற தீர்மானத்துக்கு வந்தான்.
முதலில் தங்கை காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருக்கும் பிரச்சனையைப் பார்ப்போம் எனப் பட்டென்று ஆர்த்தியின் கையிலிருந்த அலைபேசியைப் பறித்து, ஸ்பீக்கரில் போட்டான்.
எதிர்முனையிலிருந்தவன், “நீ இப்போ என் காதலுக்கு ஒத்துக்கலை நான் தற்கொலை பண்ணிப்பேன்... அதற்குக் காரணம் ‘நீ’ன்னு லெட்டர் எழுதி வைத்துவிடுவேன்...” என மிரட்டிக் கொண்டிருந்தான்.
“அப்படியா? சந்தோஷம்... எப்போ தற்கொலை செய்யப் போற?” என நந்தகுமார் கேட்க, திடீரென்று ஒலித்த ஆண் குரலில் “அது சார்... வந்து...” என மறுமுனையில் இருந்தவன் திக்கித் திணறினான்.
அதுவரையில் இருந்த வீராவேசம் எல்லாம் வடிந்து போனது அவனுக்கு.
“ஏண்டா... ஒரு பொண்ணுக்குப் பிடிக்கலைன்னு தெரிஞ்சதும் விலகிக்க மாட்டீங்களா? நீ இப்போப் பேசியதை எல்லாம் என் செல்போன்ல பதிந்து வைத்திருக்கேன்... இனிமேல் என் தங்கையை ஏதாவது தொல்லைப்படுத்தின... அப்புறம் போலீஸ்ல சொல்ல வேண்டி வரும்... ஜாக்கிரதை...” என நந்தகுமார் மிரட்டவும் மறுமுனையில் இருந்தவன் பம்ப ஆரம்பித்தான்.
“இல்லைங்க சார்... தெரியாமல்... இனிமேல் பண்ணமாட்டேன்...” எனத் தொடர்ப்பைத் துண்டித்தான்.
“அண்ணா...” எனத் தயங்கியவாறே நந்தகுமாரின் முன்னால் ஆர்த்தி வந்து நிற்க, “இதை ஏன் என்கிட்டே சொல்லலை?” என முறைத்தான்.
“அது அண்ணா, கல்யாண நேரத்தில் உங்களுக்கு டென்ஷன் வேண்டாம் என நினைத்தேன்... சாரி அண்ணா...” என இழுத்தாள் தங்கை.