பாவி நானென்ன செய்வேன். நான் ஆசைப்பட்டதன் காரணம் புரியவில்லை உனக்கு... - சாணக்யசித்தார்த்தன்
This is entry #75 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
"அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே... அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை... ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்... பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்தார்கள்… இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே... இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்… ச்சேச்சே... அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது… அவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள். அது அவளே தான்...!"
"போய் குளிச்சுட்டு வா"
"ச்சு. டிஸ்டர்ப் பண்ணாத"
அவன பின்னாடி இருந்து கழுத்தோடு அணைச்சு, அவன் கன்னத்தோட கன்னம் வச்சு, "அடுத்த கதையா" என்றேன்.
"நான் குளிக்க போறேன்."
அவன் போனதும், அவன் எழுதிட்டு இருந்த பேப்பரை எடுத்து படிக்க ஆரம்பிச்சேன்.
"தங்கச்சி மாப்பிள்ளைக்கு போன் பண்ணி எங்க இருக்காங்கன்னு கேளுப்பா, நல்ல நேரம் முடியுறதுக்குள்ள போகனும்" என்றாள் என் அன்னை.
"அவங்க தான் வந்துகிட்டு இருக்காங்கனு சொன்னாங்கல, நம்ம அவசரத்துக்கு அடுத்தவங்கள தொந்தரவு பண்ணக்கூடாதுமா. மணி 5 தான்மா ஆகுது. வந்துருவாங்க" என்று கண்ணாடி முன் நின்று என்னை நானே ரசித்துக்கொண்டிருந்தேன்.
டிங்க், டிங்க்.
"வாங்க மாப்ள"
"மச்சான் எங்க இருக்காரு, அத்த?"
"உள்ளதான் இருக்கான் மாப்ள, வா சுதா"
"மச்சா, அடடே. சுதா, இங்க வந்து உங்க அண்ணன பாரு, மச்சானுக்கு மாப்பிள்ள கல வந்துருச்சுடோய்"
"என்னணா? இந்த மாதிரி உன்ன பாத்ததே இல்லயே, எப்பயும் கம்பெனி யூனிஃபார்ம் போட்டுட்டு, மூஞ்சி நெறைய தாடி, மீசைய வச்சுகிட்டு சுத்துவ. இப்ப பாரு, சேஷ் பண்ணி, எப்டி இருக்க தெரியுமா. திருஷ்டி சுத்தி போடணுமே, என் அண்ணே இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கானே."
என் தங்கை சொன்ன மாதிரி, இதற்க்கு முன்பு வரை, எண்ணெய் வைக்காத தலை, தாடியும், மீசையும், அதிகமாக வளர்த்து, காட்டுவாசியை போல் இருப்பேன். ஆனால் இன்று, நீல கலர் முழு கை சட்டை, சந்தன கலர் பேண்ட், அதுலயும், கைப்பட்டன போட்டு, இன் பண்ணி, பெல்ட் போட்டுருந்தேன். நானே என்ன புதிய தயாவாக பாத்தேன்.
"மச்சானுக்கு வெக்கத்த பார். மச்சா, இங்க பாருங்க" என்று என்னை தன் மொபைலில் போட்டோ எடுத்தார் என் தங்கையின் கணவர்.
"எல்லாரும் சேந்து என் பையன கிண்டல் பண்றேங்களா, வாங்க போகலாம். 6-7.30 நல்ல நேரம். பொண்ணு வீட்ல இருந்து போன் பண்ணிடாங்கப்பா."
"சரி போலாம்மா, தனபால் மாமா வீட்ல எல்லாரும் ரெடியாகிடாங்களானு ஒரு வார்த்த கேட்ருங்கமா."
"உன்னோட தாய்மாமா ரெடியாகி அர மணி நேரமாச்சு, போற வெளில அவங்கள நம்ம வேன்ல ஏத்திக்கலாம். வாசல்ல வேன் நிக்குது, வாங்க எல்லாரும் போலாம்" என்று என் அன்னை, எங்களை அழைத்து சென்றாள். வாடகை வேனில் நாங்களும், தாய்மாமா குடும்பமும் போனோம். பொண்ணு வீட்டிற்கு போய் சேரும் வரை, எல்லாரும் என்ன கிண்டல் செய்தார்கள்.
அகிலன் குளிச்சுட்டு வர்ற சத்தம் கேட்டுச்சு, பேப்பர டேபிள் மேல வச்சுட்டு, ஓடிப் போய் பாத்தேன். அவன் அலுவலகத்துக்கு தயாராகி இருந்தான். "இரு, அகில். டிபன் எடுத்து வைக்குறேன்" என்றேன். "வேணாம்"னு சொல்லிட்டு போய்ட்டான்.
“அகிலன் எப்பயும் இப்படி இருக்கமாட்டானே. என்ன ஆச்சு இவனுக்கு? ஏன் இப்படி பண்றான். இந்த ரெண்டு வருசத்துல இந்த மாதிரி நடந்ததே இல்லயே. ஒருவேள தெரிஞ்சுருக்குமோ?” என எனக்குள்ள பல கேள்வி. சாப்டலாம்னு உக்காந்தேன். ஆனா, சாப்ட முடியல. ஒருவித பயம் எனக்குள்ள இருந்தது. “அகிலனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? என்ன கொல பண்ற அளவுக்கு அகிலனுக்கு தைரியம் இல்ல, அவ்ளோ ஏன், என்ன அடிக்க கூட மாட்டான்.” என்னோட கண்ணு மட்டும் தான் டி.வி. பாத்துட்டு இருந்துச்சு, என்னோட நெனப்பு ஃபுல்லா, ஏன் அகிலன் ஒரு மாதிரியா இருக்கானு தான்... அப்போ தான் அரவிந்த் கால் வந்தது.
"ஹலோ, அரவிந்த்"
"என்ன செல்லம், அகில் போய்ருசா"
"டேய், ஏன்டா நீ வேற. அது, இன்னைக்கு ஃபுல்லா என்ட சரியாவே பேசல. உர்ர்ருனே இருத்துச்சு. ஒரு வேள தெரிஞ்சுருக்குமோ?"
"அப்டிலா இருக்காது டி. நீ ஏன் கொழப்பிகிற"
"இன்னைக்கு சாப்ட கூட இல்லடா."
"ஆபிஸ் டென்ஷனா இருக்கும் டி, அப்டியே தெரிஞ்சா என்ன, இருக்கவே இருக்கு. ஐ.பி.சி. 498A."