(Reading time: 11 - 22 minutes)

யாரிடமும், எதுவும் பேசாமல் எனது அறைக்கு சென்றேன். அவளை முதன்முதலில் பார்த்த தருணத்தை நினைத்தேன். 3 வாரத்திற்கு முன்பு கோவிலில், அவள் அமைதியாக அமர்ந்து, கண்களை மூடி, மந்திரம் கூறிக்கொண்டிருந்தாள். அவளது முடியை யாரோ இழுத்தவுடன், யாரது என கோபத்துடன் கண் விழித்தாள். ஒரு குழந்தை தான் என தெரிந்ததும், அவளது கோபம் உடனே புன்னகையாக மாறியது. குழந்தையை தூக்கி, மடியில் வைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். இது 1 நிமிடத்திற்கும் குறைவான நேரத்திலேயே நடந்தது. ஆனால், அவளது கோபம் புன்னகையாக மாறிய அத்தருணம், அழகின் உச்சக்கட்டம். அழகிற்கு இலக்கணம் என்றால், நான் இத்தருணத்தை தான் கூறுவேன். பொதுவாக நான் பெண்களின் முகபாவனைகள், நளினங்களை ரசிப்பவன் அல்ல. ஆனால், அவளது விசயத்தில் என்னால் ரசிக்காமல் இருக்கமுடியவில்லை.

அன்று இரவு, என் அன்னை ஒரு போட்டோவை தந்து, "பேரு அபிநயா. ரெண்டு நாளைக்கு முன்னாடி உன்னோட போட்டாவ அனுப்சேன். புடிச்சு போய், பொண்ணோட போட்டாவ அனுப்பிருக்காங்க" என்றாள். "எத்தன போட்டாவ தான் பாக்குறது" என்று சலித்து போய் வாங்கினேன்.

போட்டோவை பார்த்தவுடன், உடனே என் அன்னையிடம் பிடித்துத்திருக்கிறது என்றேன். நான் கோவிலில் பார்த்த பெண்ணின் போட்டோ தான் அது.

"சீகரா என் நெஞ்சினிக்க, உன் பொன் மடியில் தூங்கினால் போதும்" என்று என் செல்போன் என்னை இடையூறு செய்தது.

"சொல்லு அகில்"

"நான் இன்னைக்கு சீக்கிரமா வந்துருவேன். ரெடியா இரு. நாம பீச் போறோம்"

"சரி அகில்" னு சொன்ன அடுத்த நிமிஷம் போன் கட் ஆனது. "என்னவா இருக்கும்னு எனக்குள்ள பல கேள்வி. ஒரு வேள என்னோட வெளாடுறானா?. சரி என்னனு பீச்ல கேக்கலாம்"னு மனசுகுள்ள நெனச்சுட்டு கதைய படிக்க ஆரம்பிச்சேன்.

பிநயா, அழகான பெயர். அபிநயா - அபிநயம். சரியாக தான் பெயர் வைத்திருக்கிறார்கள்" என்று என்னுள் பேசினேன். ஆனால், அப்போது எனக்கு ஒரேயொரு தயக்கம் மட்டுமே. "என் குடும்ப நிலையை புரிந்து அபிநயா என்னுடன் இருப்பாளா? என்னவாக இருந்தாலும் சரி, அவளிடம் நான் எல்லாவற்றையும் பகிர்ந்து, அன்பாக இருந்தால், அவள் புரிந்துகொண்டு என்னுடன் இருக்கப்போவது உறுதி." என எனக்கு நானே பதிலளித்துகொண்டேன்.

அன்றிலிருந்து, நான் வேலைக்கு போகும் போதும், வீடு திரும்பும் போதும், வழியில் இருக்கும் மற்ற ஜோடிகளை பார்த்து ரசிக்க ஆரம்பித்தேன். அவர்களின் செயல்களை கவனித்து, நானும், அபிநயாவும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று பல கற்பனைகளை வளர்த்தேன். இப்படியே ஒரு வாரம் சென்றது.

"அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே... அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை... ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்... பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்தார்கள்… இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே... இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்… ச்சேச்சே... அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது… அவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள். அது அவளே தான்...!"

தய படிச்சுட்டு, ரெடியானேன். அடுத்த 10 நிமிசத்துல அகிலன் வந்தான். அவனோட யமகா ஆர். எக்ஸ். 100 பைக்ல நாங்க திருவான்மியூர் பீச்சுக்கு போய், கடலை பாத்து உக்காந்தோம். ரொம்ப நேரமா அகில் என்கிட்ட எதுவுமே பேசல. அமைதியா கடல் அலையவே பாத்துட்டு இருந்தான்.

“என்ன ஆச்சு அகில்”

“ஏன் இலக்கியா? ஏன்?”

நான் எதுவுமே பேசாம அமைதியா இருந்தேன்.

“எனக்கு அப்பா இல்ல. அம்மாவும், தம்பியும் மட்டும் தான். அவங்க நம்மளோட இருக்குறது உனக்கு புடிக்கலேன்ற ஒரே காரணத்துக்காக, அவங்க ரெண்டு பேத்துக்காக, பக்கத்து தெருல வீடு எடுத்து, தங்கவச்சேன். அதுக்கப்பறம், அவங்க நம்ம வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டு போறது புடிக்கலேன்னு சொன்ன, நானும் அவங்கள வரவேணாம்னு சொல்லிட்டேன். ஆனாலும் என் மனசு கேக்கல, பாவம் அவங்க மட்டும் எப்புடி தனியா இருப்பாங்க. தம்பி இப்போ தான் பன்னெண்டாவது படிக்குறான். அவங்க கஷ்ட படக்கூடாதுன்னு சனி, ஞாயிறு மட்டும் நான் அவைகளோட தங்கிட்டு வருவேன். உனக்காக தான இலக்கியா நான் ராப்பகலா கஷ்டபடுறேன். காலைல, ஹுண்டாய் கம்பெனி ல வேலைக்கு போறேன். நைட் வந்து, பத்திரைக்கு கதை எழுதி சம்பாதிக்குறேன். எல்லாமே, யாருக்காக? அப்பறம் ஏன் இலக்கியா? நான் என்ன தப்பு பண்ணேன். எனக்கு துரோகம் பண்ண எப்டி உனக்கு மனசு வந்துச்சு.” என்று பேசிட்டு விட்டு கண்களில் நீர் தழும்ப என்னை பார்த்ததும், எனக்கு கண்ணுலா கலங்கி, பேச்சே வரல. தொண்டைய யாரோ கயிறால இறுக்கி கட்டுன மாதிரி இருந்துச்சு.

“நான் எழுதுனது கத இல்ல இலக்கியா. இப்போ என் வாழ்க்கைல நடந்தத தான் கொஞ்சம் மாத்தி எழுதிருக்கேன்” என்றான் அகிலன்.

என் கண்ணில் இருந்து நீர் வழிய, “என்ன மன்னிச்சிடு அகில்” என்றேன்.

This is entry #75 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.