கமாரா என் சாரதி - வின்னி

கமாரா எனது கார் சாரதி!, எட்டு மணிக்கே கைநிறைய முருங்கைக்காயை அள்ளிக்கொண்டு, பெரிய ஒரு பலாப்பழத்தைக் கட்டிப்பிடித்தபடி என்னைப் பார்க்க வந்து விட்டான்!. நான் அப்போதுதான் வேலைக்கு வந்திருந்தேன்.
அந்த ஆபிரிக்க நாட்டில் “டெவில் ச்டிக்” என்று முருங்கைக்காயையும், “டெவில் ப்ரூட்”, என்று பலாப்பழத்தையும் அழைப்பார்கள். அவை பேயோடு சம்பந்தப் பட்டவை என்ற நம்பிக்கை அவர்களுக்கு. அவர்கள் சாப்பிடுவதில்லை!.
ஆபிரிக்காவில் இப்படிப் பல,பல விசித்திர வழக்கங்கள்!.
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? அவர்களுக்குத் தெரியுமா பலாப்பழத்தின் சுவை? அவர்கள் மரவள்ளி இலைகளை சாப்பிடுபவர்கள்தானே!
யாழ்பாணத்தில் இருந்து வந்த எங்களுக்கு அவற்றைப் பிடிக்கும் என்று கமாராவுக்குத் எப்படித்தேரியுமோ?. அவை அங்கு எல்லா இடங்களிலும் வளர்ந்திருக்கும். சும்மா பிடுங்கலாம்!
கமாராவின் எண்ணம் எல்லாம் நான் கொடுக்கவிருக்கும் காசில்தான்!
பத்து லியோன் காசை கொடுத்தேன். சந்தோசமாக எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு என் மனைவியிடம் ஓடினான். என் மனைவியிடம் இருந்து நல்ல உறைப்பான சோறும் கறியும் கிடைக்கும் என்று அவனுக்குத் தெரியும்.
மூன்று கம்பெனிகளை மேற்பார்வை செயவதால் எனக்கு ஒரு உத்தியோகபூர்வமான கம்பெனிக் காரும் டிரைவரும்.
முதலாம் வகுப்பில் படிக்கும் எனது மகளை.கமாராதான் பள்ளிக்கூடம் கொண்டு போவான்.
காஷியர் பாங்க்குக்கு காசு எடுத்துச் செல்வதும் அவனோடுதான்.
எனக்கு வாகனப் பத்திரம் இல்லை. ஒரு நாள் கமாராவைக் கூப்பிட்டேன். வாகனப்பத்திரம் எடுக்கப் போகலாம் வா என்றேன்.
“சார் நீங்கள் வரத்தேவையில்லை. காசையும், உங்களுடைய ஐ. டி. கார்ட்டையும், படத்தையும், தாருங்கள்” என்று கூறினான். சரி என்று கொடுத்து விட்டேன். அவனிடம் காசு கொடுக்கப் பயம். சரியாக நூறு லீயோன் கொடுத்தேன். எனக்கும் அந்தக் கூட்டத்தில் அலைந்து திரிய மனமில்லை. வேலையும் அதிகம்.
போய் இரண்டு மணித்தியாலங்களில் திரும்பினான். அவன் கையில், சாரதி அனுபதிப் பத்திரம், என் படத்துடன்!. என்னை நேரில் பார்க்காமலே, எனக்குக் கார் ஓட்டத்தெரியுமோ என்று அறியாமலே, எனக்குச் சாரதி அனுமதிப்பத்திரம்!
“சார்! இன்னும் ஒரு ஐம்பது லீயோன் வேண்டும் என்றான்”. அந்த காசு சாரதிப் பத்திரம் வழங்குபவருக்கு. என்னால் அது கூட உகிக்க முடியாதா? கமாராவுக்கும் பங்குண்டு.
அதுதான் அந்த நாட்டு ஊழலுக்கு நான் சேய்யும் பங்கு! “ஊருடன் சேர்ந்து வாழ்” என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் “ஊருக்கு உலை வை” என்று கேள்விப்பட்டதில்லை.
எனது மனைவி மிகவும் நல்ல மனம் உள்ளவள். ஏழைகளுக்காக இரங்குவாள். தன்னிடம் உள்ள பழைய உடுப்புகளையும், மகளின் அளவில்லாத உடுப்புகள் எல்லாவற்றையும் அவனுக்குக் கொடுத்து விடுவாள்.. சில வேளைகளில் என்னைக் கேட்காமல் புது உடுப்புகளையும் தூக்கிக் கொடுத்து விடுவாள்.
அவளுடைய கருணை மனதை நன்றாகப் பயன்படுத்துவதில் அவன் ஒரு சூரன்!
தனது வீட்டில் இருக்கும் பத்துப் பேருக்கும் தான் ஒருவன்தான் உழைத்துப் போட வேண்டும், மனைவிக்குச் சுகமில்லை, பாரிச வாதத்தில் தாய் படுத்திருக்கிறாள், பாட்டி இறந்துவிட்டாள்.
இப்படிப் பல பல கதைகளைச் சொல்லி எவ்வளவோ காசை என் மனைவியிடமிருந்து கறந்திருப்பான்.
ஆனால் எனக்கோ அவன் சொல்லுவதில் ஒன்றும் நம்பிக்கை இல்லை!.
சப்பாத்துகளில் அவனுக்கு அலாதி ஆசை ! ஒரு நல்ல புதுச் சப்பாத்து வாங்க கமாராவின் இரண்டு மாதச் சம்பளம் தேவை.
நான் புதுச் சப்பாத்து போடுவதைக் கண்டால். "சார்! பாவித்ததும் எனக்கு தந்து விடுங்கள்” என்று முன்னதாகவே சொல்லி வைத்து விடுவான்.
"அதற்கு இன்னும் ஒரு வருஷம் செல்லும்" என்று நான் அவனைக் கேலி செய்து விட்டு போ ய் விடுவேன். அதற்கு முன்பே தனக்குச் சப்பாத்து கிடைத்து விடும் என்ற நம்பி க்கை அவனுக்கு.
எனது மகளின் சப்பாத்துகள், விளையாட்டுப் பொருட்கள், எல்லாம் அள்ளிக்கொண்டு போ ய் விடுவான். மகளின் புத்தகங்களையும் விடுவதில்லை! படிக்காதவனுக்கு புத்தகங்கள் எதற்கு? விற்பதற்கா அல்லது அவனது பிள்ளைகளுக்கா?
அன்று கம்பனில் காஷியர் வேலைக்கு வரவில்லை. அவரைத் தேடி எல்லா இடங்களுக்கும் ஆட்களை அனுப்பினோம். எங்கு தேடியும் அவரைக் கானவில்லை. ஒரு சந்தேகத்தில் அவரது அறைக்கதவை உடைத்துப் பார்த்தால் இரும்புப் பெட்டி திறந்தபடி காலியாக இருந்தது.
போலீசை அழைத்தோம் அவர்கள் ஒரு நாள் முழுவதும் பலரை விசாரித்தும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அவர்கள் தமது வேலையைச் சரியாகச் செய்தார்களோ என்று எனக்குச் சந்தேகம். காரணம், காஷியர் மந்திரி ஒருவரின் மருமகன்.