நினைவே கதை எழுது - புவனேஸ்வரி
(எட்டு வருடங்களுக்கு முன்பு)
" ஸ்டாப் இட் லாவண்யா ..ஜஸ்ட் ஸ்டாப் " .
அதுவரை பிடித்து வைத்திருந்த பொறுமை கை மீறி போயிருந்தது.. அவன் குரல் ஒலித்த வேகத்தில் கார்த்திக்கின் உடலிலேயே லேசாய் நடுக்கம் பிறத்தது...
"டேய் விக்னேஷ் " என்று நண்பனை பார்த்து கார்த்திக் எதோ சொல்ல வர
"சாரி கார்த்திக் .. என்னால இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது மச்சி .. எனக்கு நீயும் ப்ரண்டு , அவளும் ப்ரண்டு .. உங்க ரெண்டு பேரில் யார் முக்கியம்ன்னு நான் யோசிச்சதே இல்ல.. ரெண்டு பேருமே எனக்கு ஒன்னு தான் .. ஆனா , அவ பேசுற விதம் என்னை மிருகமாய் மாத்திடும் போல ... நீயே அவகிட்ட பேசு ..எதுவும் வேணும்னா எனக்கு போன் பண்ணு நான் வெளில வைட் பண்ணுறேன் .."என்றுவிட்டு லாவண்யாவின் முகத்தை பார்க்காமலேயே அந்த அறையை விட்டு வெளியேறினான் விக்னேஷ்...
அந்த சம்பவத்திற்கு பிறகு மிக சில தடவை தான் அவன் லாவண்யாவை பார்த்தான் ..ஆனால்,அப்போதும் அவன் அவளிடம் பேசவில்லை .. இதோ எட்டு வருடங்கள் உருண்டோடி விட்டன..
(நிகழ்காலம்)
லாவண்யா அனுப்பிய மேசெஜையே பார்த்து கொண்டிருந்தான் விக்னேஷ்.. அவன் அருகில் அமர்ந்து தோளில் கை வைத்து அழுத்தினாள் அஞ்சலி, விக்னேஷின் மனைவி .. பொதுவாக ப்ரண்ட்ஸ் நாலு பேரு ஒன்றாய் இணைந்து காலத்தோடு பயணித்து அவரவர் ஜோடியை கண்டுபிடிச்சு , காதலையும் நட்பையும் சரிசமமாய் வைத்து கொள்ள போராடுவாங்க..
ஆனா இவங்க நால்வர் விஷயத்தில் கார்த்திக்- லாவண்யா , விக்னேஷ் -அஞ்சலி காதலர்களாய் இணைந்த பிறகுதான் நண்பர்களாய் இணைந்தார்கள் ..அதனாலேயே அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகவே இருந்தது.. ஒளிவு மறைவில்லா ஆரோக்யமான நட்பில் இருந்தார்கள் அவர்கள் , எட்டு வருடங்களுக்கு முன்பு.. அதன்பின் காலமும் விதியும் விளையாடியதை போக போக தெரிந்து கொள்வோம் ..
எந்த ஒரு பதிலும் கூறாமல் அமைதியாய் இருந்த விக்னேஷை பார்க்க அஞ்சலிக்கு பயமாய் இருந்தது..
" வினு ..."
".."
"வினு .. என்னடா அமைதியாகவே இருக்க ?"
".."
"டேய் ...! அழறியா ?"
".."
"வினு என்னை பாரேன் !!" என்றப்படி அவள் எழுந்து நின்று விக்னேஷின் முகத்தை கையில் ஏந்திட அவளை இழுத்து அவள் வயிற்றில் முகம் புதைத்து அழ தொடங்கினான் விக்னேஷ் ..
" நான் ஒரு முட்டாள் அம்மு .. செல்பிஷ் .. அயோக்கியன்..ச்ச் என்னை நினைத்தால் எனக்கே கோபமாய் வருது ! "
"ஷ்ஷ்ஷ்ஷ்... டேய் வினு .. என்னடா ஆச்சு..சொல்றத கேளு அழாதே "என்று அவள் அவனது கேசத்தை பாசமாய் கோதி விட்டாள் ..
" லாவி மேல எனக்கு கோபம் இருந்தது உண்மைதான்... ஆனா அதுக்காக அவளை இப்படி ஒதுக்கி வைத்திருக்க கூடாது.. உன்னையும் அவகிட்ட பேசாதேன்னு தடுத்து இருக்க கூடாது... அவ எவ்வளவு கஸ்பட்டு இருப்பாள் ..கார்த்தி...கார்த்தி சத்தியமாய் என்னை மன்னிக்கவே மாட்டான் "
"ஷ்ஷ்ஷ்ஷ் .. போதும் .. முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும் .. நீ அழுதால் எல்லாம் சரியாகிடுமா வினு ? நீ பண்ணினது தப்புதான் ..அதை சரி பண்ணலாம்..அதை விட்டுட்டு நடந்ததை நினைச்சு புலம்பாதே .. நாளைக்கே நாம அவளை பார்க்க போவோம் " என்றாள் அஞ்சலி.. சில நிமிடங்கள் அவளை இறுக அணைத்து அழுதபடி இருந்தவனுக்கும் அதுவே சரியென்று பட்டது.. மீண்டும் அந்த மெசேஜை படித்தான்..
" ஹாய் விக்ஸ் அண்ட் அஞ்சு ..என்னையும் கார்த்தியையும் சுத்தமா மறந்துட்டிங்க தானே ? நான் உங்க மேல செம்ம கோவத்துல இருக்கேன் .. ஹீ ஹீ .. சரி மொறைக்காத விக்கி ..ஐ மிஸ் யூ டா .. கார்த்தியே என்னை மன்னிச்சுட்டான் ..நீ மன்னிக்க மாட்டியா ? நாளைக்கு அவனுக்கு பெர்த் டே ,சோ வீட்டுக்கு வாங்க டா.இதுதான் என் புது அட்ரஸ் ..வித் லவ் லாவி " .
அஞ்சலியை பார்த்து லேசாய் புன்னகைத்தவன் நடுங்கும் விரல்களுடன் லாவண்யாவிற்கு போன் போட்டான் .. எட்டு வருடங்களுக்கு பிறகு அவளின் குரலை கேட்க போகிறான் .. எப்படி இருக்கிறாள் அவள் ? எப்படி பேசுவாள் ? என்று அவன் யோசிக்க , நினைத்தாலே இனிக்கும் படத்தில் "நண்பனை பார்த்த தேதி மட்டும் " என்ற பாடல் காலர் ரிங் டோனய் ஒலித்தது..
"அம்மு இவ இன்னமும் ரிங் டோன் மாத்தல பாரேன் " என்றான்..
அதற்குள் லாவண்யா போனை எடுத்துவிட "ஆமாடா , எல்லாரும் உன்னை மாதிரி கஜினி சூர்யா ஆகிடுவாங்களா? " என குரல் கொடுத்தாள் லாவண்யா..
" லாவி !!!"