சூப் கிட்சின் - வின்னி
‘"அப்பா இன்று நாங்கள் இருநூறு பேருக்கு மதியச் சாப்பாடு பரிமாறினோம்" என்று அவன் உற்சாகமாக கூறினான். உணவு வங்கியின்’ சூப் கிட்சினில் தொண்டர் பணியை முடித்துவிட்டு வந்த எனது மகனோடு பேசிக்கொண்டு இருந்தேன்.
"அவ்வளவு பேரா?" கனடாவிலும் வறுமையா?” நான் ஆச்சரியப் பட்டேன்!
"அப்பா நாங்கள் சூடான சூப், பாண்,மரக்கறி, எல்லாம் கொடுத்தோம்".
இருநூறு வாடிக்கையாளருக்கு தொண்டு செய்த பெருமை அவன் முகத்தில் தெரிந்தது.
ஆமாம்!அவர்களை வாடிக்கையாளர்கள் (clients) என்றுதான் அழைக்க வேண்டும். அவர்களை பிச்சைக்காரர்கள், வழியில்லாதவர்கள், குடிகாரர் என்று வேரு ஒரு பெயராலும் அழைக்க முடியாது.
அவர்களைக் குறிப்பிடுவதற்கு என்ன அருமையான, ஆழமுள்ள, கருத்தான சொல்!
சூப் கிட்சினுக்கு வருபவர்களில் பலர், மதுவுக்கும், போதை வஸ்துக்கும், அடிமையானவர்கள், கவனிப்பாரற்ற வயோதிபர்கள், கணவன்மாரால் கைவிடப்பட்ட தாய்மாரும் அவர்கள் பிள்ளைகளும், வேலையில்லாத வாலிபர்கள், தமக்குக் கிடைக்கும் வருவாயில் செலவுகளை சமாளிக்க முடியாதவர்கள், இப்படி பலதரப் பட்டோர்.
அவர்கள் எல்லோரும் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு தமக்கும் ஒரு விடிவு காலம் ஒரு நாள் வரும் என்று ஆவலோடு காத்திருப்பவர்கள்.
அவர்களுக்கு உணவு பரிமாறுவது தொடக்கம் அவர்கள் சாப்பிட்டதும் அவர்களுடைய உணவுப் பாத்திரங்களைக் கழுவுவது வரை எல்லாம் தொண்டர்களின் வேலை.
'சில்லவக்', பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள 'வன்கூவர்' நகரில் இருந்து கிழக்கே நூறு கிலோ மீ ட் டருக்கு அப்பாலுள்ள ஒரு ஊர்.
எண்பதாயிரம் பேர் வசிக்கும் அமைதியான ஓர் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் இந்த ஊரின், வடக்கே “பிரேசர் ஆறு” தெற்கே கனேடிய அமெரிக்க எல்லை.
உயர்ந்த பனி படர்ந்த மலைகளாலும், ஆறுகளாலும் சூழ்ந்த அந்த ஊரில் பழங்குடி மக்கள் பல இடங்களில் வசிக்கிறார்கள். அவர்களை 'ஸ்டோலோ தேசத்தவர்கள்" என்றழைப்பார்கள். அவர்கள் மூதாதையோர் 10,000 வருடங்கள் அங்கிருந்ததாக சரித்திரம்.
பொது மக்களின் நன்கொடைகளின் உதவியுடன் அவர்களுக்கு விடிவுகாலம் வரும்வரை 'சல்வேய்சன் ஆர்மி' என்ற நிறுவனத்தால்அந்த ஊரில் நடாத்தப்படும் ஒரு தொண்டு. ஒவ்வொரு நாளும் மதியவேளை மாறுதலில்லாத ஒரே மாதிரியான சாப்பாடு.
அவர்களுக்கு ஒரு நாள் என்றாலும் ஒரு நல்ல சாப்பாடு கிடைக்காதா என்ற ஏக்கம் என் மகனுக்கு! அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் சூப் தானா?.
சூடானது, ,சத்துள்ளது அனால் அதை ஒவ்வொரு நாளும் சாப்பிடுவதில் யாருக்கும் அலுத்துவிடும். சிலர் அதை வெளிப்படையாகவே சொல்லி விடுவார்கள்.
ஒருவர் இருவர் என்றால் வீட்டிலிருந்தே எடுத்துச் சென்று விடுவான் இருநூறு பேருக்கு எப்படி ?
அடுத்த வருஷம் பல்கலைக்கழகம் போக இருக்கும் அவனுக்கு, அவனது தொண்டு, பல்கலைக்கழகம் நுழைவுக்கு, கைகொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு. வெளி உலகை அறியவும் இது ஒரு சந்தர்பம்!.
ஆபீசில் அடுத்த நாள் எனக்கு வேலை ஓடவில்லை. அந்த ஐந்து நட்சத்திர ஹோடேலில் அதிகாரியாக இருக்கும் எனக்கு என் மகனின் ஆசையை எப்படிப் பூர்த்தி செய்வது என்றுதான் யோசனை.
அமெரிக்காவில் இருக்கும் என் உயர் அதிகாரியைக் தொலைபேசியில் அழைக்கிறேன்.
இருநூறு பேருக்கு ஹோட்டல் ரெஸ்டரன்டில் புதுவருட கொண்டாட்டத்தில் பரிமாறப்படும் அதே உணவை அந்த சூப் கிட்சினிலும் பரிமாற நினைக்கிறேன் என்ற எனது எண்ணத்தை அவரிடம் சொல்கிறேன்.
அவர் ஆச்சரியமாக, "என்ன நூறு டாலருக்கு விற்கும் விலை உயர்ந்த அந்த உணவையா?" என்று கேட்டார்.
"இலாபம் இல்லாமலே அது பத்தாயிரம் டாலர் வருமே? அதனால் எங்களுக்கு என்ன பலன்?
“நாங்கள் செய்வது வியாபாரம்! தர்மம் அல்ல!" என்றார், இலாபமில்லாமல் எதையும் செய்யாத அந்த அதிகாரி.
வருடத்தில் ஒரு முறையாவது அவர்கள் அனுபவிக்கட்டுமே! அது எனது எண்ணம்.
"அந்த யோசனையை விட்டுவிடும் வேறு சிக்கனமான வழியில் உதவி செய்யப் பாரும் என்றார்" கருணை அற்ற அந்த அதிகாரி.
ஆழ்ந்த சிந்தனையுடன் வீடு வந்து சேர்கிறேன். மகனைத் தேடுகிறேன் அவன் அறையில் இல்லை. இன்னும் வீட்டுக்கு வரவில்லை போலும்!
அவனுடைய மேசையில் ஒரு சிகரெட் பக்கெட்! எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, அவனுக்கு எப்ப தொடக்கம் இந்தப் பழக்கம்?
நான் புகைப்பதில்லை! எங்கிருந்து பழகினான் இதை?
நான் அப்பாவுக்கு தெரியாமல் பனை மரத்துக்குப் பின்னால் ஒளிந் திருந்து, மாமாவின் பாக்கெட்டிலிருந்து களவெடுத்த சிகரட்டை, புகைத்த ஞாபகம் வருகிறது.
மனைவி தெரிந்தால் அவனுடன் கத்துவாள்.அதைப் பற்றி மூச்சு விடவில்லை