(Reading time: 21 - 42 minutes)

" நீ கோழை கார்த்தி .. கஷ்டத்தை சந்திக்க முடியாத கோழை ..உன் மேல நம்பிக்கை இழந்த கோழை ..என் மேல நம்பிக்கையை இழந்த கோழை ? என்ன நினைச்ச நீ ? கல்யாணத்தை நிறுத்திட்டு என்னையும் வெறுக்க வெச்சிட்டா வேற ஒருத்தனை கட்டிப்பேன்னு நினைச்சியா ? இதுக்கு பேரு தியாகமா கார்த்தி ? துரோகம் !!!"

".."

" இன்னொருத்தன் என்னை கல்யாணம் பண்ணி , தொட்டு ஆண்ட பிறகு , நீ இதுக்காகத்தான் பொய்யாய் நடிச்சன்னு தெரிஞ்சா நான் எப்படி கூனி குறுகி இருப்பேன்னு யோசிச்சியா ?!! சுயநலவாதி நீ ! உன் காதலி விதவை ஆகிட கூடாதுன்னு என்னை உயிரோட கொன்னுட்டியே கார்த்திக் .. எனக்கு வலிக்கிறது கார்த்திக்.,.. மனசு உடம்பு எல்லாமே வலிக்கிறது.. எனக்கு சிரிக்கவே மறந்து போச்சு ! யாரையும் நம்ப முடியல , யாரு கூடவும் மனசு விட்டு பேச முடியல .. கடவுள் உனக்கு தந்த நோயை எனக்கு நீ தந்துட்ட கார்த்தி !!"

".."

"முட்டாளா கார்த்தி நீ ? உனக்கு கேன்சர்ன்னு தெரிஞ்சா அந்த காலத்து ஹீரோயின் மாதிரி வாயபொத்தி  அழுதுட்டு போயிருப்பேன் நினைச்சியா ? போராடி இருப்பேன் .. எந்த டாக்டர் கிட்ட  காட்டியாச்சும்  உன்னை  குணபடுத்த  முயற்சி பண்ணி இருப்பேன் ..அப்படியே அது நடக்கலன்னா ,இருக்குற கொஞ்ச நாள் உன்னை கல்யாணம் பண்ணி உன்னோடு வாழ்ந்துருப்பேன் .. உன் உயிர் இப்படி ஹாஸ்ப்பிடல் பெட்ல போறதை விட , என் மடியில் இருந்து போயிருக்க்கலாம்னு தோணவே இல்லையா கார்த்தி ?"

" நான் எப்பவோ செத்துட்டேன் கார்த்தி ..  இப்போ நீ சாகுறத பார்க்குறேன் அவ்வளவுதான் ! "

" ஸ்டாப் இட் லாவண்யா ..ஜஸ்ட் ஸ்டாப் " .

அதுவரை பிடித்து வைத்திருந்த பொறுமை கை மீறி போயிருந்தது.. அவன் குரல் ஒலித்த வேகத்தில் கார்த்திக்கின் உடலிலேயே லேசாய் நடுக்கம் பிறத்தது...

"டேய் விக்னேஷ் " என்று நண்பனை பார்த்து கார்த்திக் எதோ சொல்ல வர

"சாரி கார்த்திக் .. என்னால இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது மச்சி .. எனக்கு நீயும் ப்ரண்டு , அவளும் ப்ரண்டு .. உங்க ரெண்டு பேரில் யார் முக்கியம்ன்னு நான் யோசிச்சதே இல்ல.. ரெண்டு பேருமே எனக்கு ஒன்னு தான் .. ஆனா , அவ பேசுற விதம் என்னை மிருகமாய் மாத்திடும் போல ... நீயே அவகிட்ட பேசு ..எதுவும் வேணும்னா எனக்கு போன் பண்ணு நான் வெளில வைட்  பண்ணுறேன் .."என்றுவிட்டு லாவண்யாவின் முகத்தை பார்க்காமலேயே அந்த அறையை விட்டு வெளியேறினான் விக்னேஷ்...

அவன் போனதை வலியுடன் பார்த்தான் கார்த்திக் .. மீண்டும் அவன் பார்வை அவள் மீது படிய

"விடுடா,நீயே போகப்போற ! அவன் இருந்தா என்ன போனா என்ன ? என் வாழ்க்கை முடிஞ்சிருச்சு கார்த்தி .. ஏன் டா என்கிட்ட சொல்லல ? என் மனதைரியம் மேல உனக்கு அவ்வளவுதான் நம்பிக்கையா ? நீ காரணத்தை சொல்லி பிரிஞ்சிருந்தா எத்தனையோ விஷயங்கள் சரி ஆகி இருக்குமே கார்த்தி .. என்னை குழந்தை மாதிரி பார்த்துப்பேன்னு  சொல்லிட்டு இப்படி அனாதையா விட்டுட்டு போற ல ?"என்று அவள் கேட்கவும் இதயம் வெடிக்க , கார்த்திக் வாவென கை நீட்டிட, அவன் மார்பில் தஞ்சம் அடைந்து கதறினாள்  லாவண்யா ..

" நீதானே கார்த்திக் சொன்ன ? எங்க போனாலும் என்னை கூட்டிட்டு போன்னு  ! கூட்டிட்டு போயிரு கார்த்திக் ..ஏன்டா விட்டுட்டு போற ? ப்ளீஸ் கார்த்திக் ... எனக்கு இப்போவே சாகனும் .. வா ஏதாச்சும்  பண்ணிக்கலாம் .. "என்றவளின் இதழில் அழுத்தமாய் முத்தமிட்டான் கார்த்தி .. அவளின் கண்ணீர் நிற்கும்வரை அவன் முத்தத்தை நிறுத்தவில்லை.. சில நொடிகளுக்குப் பின் அவளை விடுவித்தான் ..

" நான் முட்டாளாய் வாழ்ந்துட்டேன் ..உண்மைதான் .. உனக்கு நல்லது பண்ணனும் நினைச்சேன் ..நான் இல்லாமல் நீ வாழ கத்துக்கணும்னு  நினைச்சேன் .. உன்ன மாதிரி நான்  யோசிக்கல டா ... என்னை மன்னிச்சிரு .. ஆனா நீ வாழனும் லவ்ஸ்...நம்ம காதல் நம்ம மரணத்தோடு முடிஞ்சிடனுமா ? நம்ம ரெண்டு பேரின் குடும்பத்தை நினைச்சு பார்த்தியா ? இனி ரெண்டு குடும்பத்துக்குமே நீதான் வாரிசு ... எனக்காக நீ வாழனும்..நான் உன்னோடுதான் இருப்பேன் ..என் உடல் போச்சுன்னா , நானும் போயிருவேனா ? இல்ல டீ ..உன்ன சுத்தி தான் இருப்பேன் ... நீ தப்பான முடிவு எடுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு !"

"சரி பண்ணுறேன் .. ஆனா , என்னை கல்யாணம் பண்ணிக்க !"

" அம்மு "

" மாமா,என்னை கல்யாணம் பண்ணிக்கோ ..இல்லன்னா என்னை என் முடிவை தேடி போக விடு "

"வேண்டாம் டா"

"இல்ல,எனக்கு நீ வேணும் .. டாக்டர் கிட்ட நான் பேசுறேன் .. டிஸ்சார்ஜ் ஆகிடு ..நாம தனியா ஏதாச்சும்வீட்டுல இருப்போம் ..விக்னேஷ்க்கு கூட தெரிய கூடாது "

"ஏன்டீ ?"

"இவ்வளவு நாள் அவன் உண்மையை மறைச்சான் ல ? அதுக்கு இதான் தண்டனை ? எந்த விஷயமாய் இருந்தாலும் , நமக்கு பாசமானவங்க கிட்ட அதை முழுசாய் மறைக்க கூடாது..அதுனால தான் உன்னை திட்டினேன்.. நான் திட்டினது அவனுக்கு சேர்த்து தான் .. இப்போ கோபத்துல என் வார்த்தை அவனுக்கு புரியாது.. ஆனா எதிர்காலத்துல நிச்சயமா அவன் இதை மனசுல வெச்சிப்பான் .. சரி அவன் பேச்சை விடு ..எனக்கு என்ன  பதில் சொல்ல போற ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.