நானும் அவளும்ம - கிருத்திகா
நானும் அவளும் ஒரே கல்லூரியில்தான் பி.எஸ்.சி ஃபிசிக்ஸ் படித்தோம். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். அவளை முதன் முதலாக கல்லூரியில் பார்த்த போதே என்னையறியாமல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. அன்று அவள் வெள்ளை சுடிதாரில் விரித்துவிட்ட கூந்தலில் ஒற்றை ரோஜாவோடு பார்பதற்கு தேவதைபோல் இருந்தால் நான் மட்டும் அல்ல, அவளின் பின்னால் ஒரு கூட்டமே சுற்றித் திரிந்தது. ஆனால் பெரிதாக யாரையும் கண்டு கொள்ளமாட்டாள்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் அவள் நினைவாகவே சென்றது. எனது நினைவுகளில் அதிகமாக அவள் எண்ணங்களே கொடி கட்டிப் பறந்தது. எப்படி அவளிடம் சொல்வது? .என்னுள் ஒரு யோசனை தோன்றியது.
அவளுடைய தோழிகளின் வாயிலாக அவளது பிறந்த நாளை தெரிந்து கொண்டேன். ஒரு வாழ்த்து அட்டையில் தைரியமாக எனது காதலை வெளிப்படுத்தி எனது பெயரைப் போட்டு கல்லூரி முகவரிக்கே அனுப்பி வைத்தேன். அனுப்பிவிட்டேனே தவிர ஒரு பயம் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. ஒரு வேளை கல்லூரி நிர்வாகத்திடம் பிரச்சனையை எடுத்துப் போய்விட்டால் என்ன செய்வது. இரண்டு நாட்கள் என்னுடைய பொழுதுகள் பயத்தின் உணர்வுகளாலேயே கடந்து கொண்டிருந்தது.இரண்டு நாள் கழித்து அவளது கையிலிருந்த புத்தக கட்டுக்கு மேலேயே என்னுடைய வாழ்த்து அட்டை.
என்னுடைய இதய ஓட்டம் கன்னாபின்னாவென்று ஓடியது. முகத்தில் வியர்வைத் துளிகள் பயத்தில் தயங்கி வெளியே வந்து கொண்டிருந்தது. என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் அவளை உற்று நோக்கினேன். அவளும் என்னைப் பார்த்தாள்.சிறிது நேரம் யோசித்தவளாய் என்னை நோக்கி நடந்து வந்தவள், தன் கையிலிருந்த அந்த வாழ்த்து அட்டையை என் கையிலேயே தினித்துவிட்டு, தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள், இதிலெல்லாம் எனக்கு இன்ட்ரெஸ்ட் கிடையாது, என்னுடைய நோக்கமெல்லாம் என்னுடைய படிப்புதான். இதற்குப் பிறகு என்னைத் தொந்தரவு செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறிவிட்டு விறுவிறு என நடந்தாள்.
அன்று இரவு முழுவதும் என் முகத்தை தலையனைக்குள் புதைத்துக் கொண்டு அழுதேன். ஒரு வழியாக் மூன்று நான்கு மாதங்கள் ஆனது நான் ஒரு சராசரி நிலையை அடைவதற்கு. இருந்தாலும் அவளது நினைவுகள் என் உயிரில் கலந்து இருந்ததை என்னால் உணர முடிந்தது. கல்லூரியின் மூன்று ஆண்டுகள் முடிந்து அன்று நிறைவு விழா. விழாவும் இனிதே முடிந்து வீடு திரும்பும் போது, செந்தில் என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அவள் நின்று கொண்டிருந்தாள்.
என்னருகில் வந்தவள், உங்களைப் போல் ஒரு ஜென்டில்மேனை பார்ப்பது மிகவும் அரிது. நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு பிறகு என்னை ஒருநாள் கூட தொந்தரவு செய்யவில்லை. இதுதான் ஒரு ஆண் மகனுக்கு அழகு என்றாள். எனக்கு உச்சி குளிர்ந்த்து. ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லை என்ற பிறகு அவளை தொந்தரவு செய்வது எந்த வகையில் நியாயம் என்று என் பங்கிற்கு எடுத்துவிட்டேன் ஏக்கத்துடனேயே. சரி வருகிறேன் என கிளம்பும் போது, செந்தில் என்று தயங்கினாள். என்ன? என்று சற்று குழம்பி நின்ற நிலையில், செந்தில் நான் உங்களை காதலிக்கிறேன், என்னை ஏற்று கொள்வீர்களா என்றாள்.
அவ்வளவுதான் இறக்கையை கட்டிக்கொண்டு அந்தரத்தில் பறப்பது போல பரவசம் அடைந்தேன். அதன் பிறகு ஒரு காபி ஷாப்பிற்க்கு சென்று மனம் விட்டு பேசினோம். பிறகு எங்கள் சந்திப்பகள் அடிக்கடி தொடர்ந்தன.
ஒருநாள் பீச்சில் இருக்கும்போது அவள் கூறினாள் .. செந்தில் எனக்கு ஒரு பெரிய எம்.என்.சி கம்பனியில் வேலைகிடைத்து உள்ளது ... துவக்க சம்பளமே இந்து லக்கணம் . நானும் ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்திருந்தேன் அவளுடைய சம்பளத்தை கணக்கிடும் போது அதில் மூன்றில் ஒரு பங்குதான். எனக்கு கூட ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது. அவள்தான் நான் சம்பாதித்தால் என்ன?,நீங்கள் சம்பாதித்தால் என்ன? எல்லாம் ஒன்றுதானே என்று என்னை சமாதானம் செய்வாள்.எங்களுடைய திருமணத்தைப் பற்றி தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தோம். அவளுடைய வீட்டில் எதிர்ப்பு இருப்பதாக அடிக்கடி புலம்புவாள்.. இந்த சமயத்தில்தான் இந்த செய்தி இடியாய் என் தலையில் விழுந்தது. கடந்த ஒரு மாதமாகவே என்னை முழுவதுமாக தவிர்த்திருந்தாள். அப்படியென்றால் அவள் பேசியது எல்லாம் வெறும் நடிப்புதானா?.
அவளுக்கு திருமணமாம் கடந்த இரண்டு வாரங்களாக அந்த செய்தி என் ரத்தத்தை கொதிப்படைய செய்திருந்தது. எப்படி மாறினாள்? என்ற கேள்விகள் என்னை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தன. காதலின் வலியை நம்பிக்கை துரோகம் செய்கிற ஒருத்தியால் எப்படி உணர முடியும்.படுபாவி.. பாதகி....எப்படித்தான் இப்படி செய்ய அவளுக்கு மனம் வந்தது.எந்த அளவிற்கு அவளை உயிருக்கு உயிராய் காதலிக்கிறேன் என்பது அவளுக்கே நன்றாய் தெரியும்.நம்ப முடியவில்லையே !!!.என் நண்பர்கள் மூலமாக அந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டேன். நான் குறைந்த சம்பளம் வாங்குகிறேன் என்றுதான் என்னை நிராகரித்துவிட்டாள்.