(Reading time: 5 - 9 minutes)

வைஜயந்தி IPS - சுபஸ்ரீ

Vaijeyanthi ips

ரகர் பத்து மணிக்குதானே வரேன்னு சொன்னாரு? ஏன் இன்னும் வர்ல?“ என பத்மினி ஆவலோடு கேட்டாள்

“ஆமா .... எதாவது நடுவுல முக்கிய வேலையா இருக்கும்.. இல்ல டிராபிக்ல மாட்டியிருக்கலாம்” என்றான் பத்மினியின் கணவன் ராகவன்.

இந்த சம்பாஷணையை கேட்டுக் கொண்டே வெளியே ஊஞ்சலில் ஆடியபடி லேப் டாப்பை நோண்டிக் கொண்டிருந்தான் அவர்களின் சீமந்த புத்திரன் அஸ்வின். அவன் அருகில் அவனுடைய நண்பன் பாலா. இருவரும் ஐடி கம்பெனியி்ல் வேலை பார்ப்பவர்கள். இருவருக்கும் தேவைக்கு அதிகமாகவே சம்பளமும் சந்தோஷமும்.

“என்னடா கல்யாண ஏற்பாடு பலமா நடக்குது போல” என காதை கடித்தான் பாலா

“இப்பதான்டா பொண்ணே பாக்க ஆரம்பிச்சிருக்காங்க”

“அப்ப ப்ரியா?”

“அடப்பாவி ... எங்க ரெண்டு பேருக்குள்ள நல்ல நட்பு மட்டும்தான்டா இருக்கு.. தரகர் வர்ற நேரமாச்சு ..நீ முதல்ல கிளம்பு”

“ச்சே ..ச்சே எனனடா இப்படி பேசற ..கோச்சிகாத மச்சி ..”

“பாரு தரகர் முன்னாடி வாய திறக்கக் கூடாது .. டேய் என் வாழ்க்கையில விளையாடிடதாடா ப்ளீஸ்” முகத்தை பாவமாக வைத்துக் கொண்டான் அஸ்வின்

“என்ன அஸ்வின் நான் உன் நண்பேன்டா ... என்னை வில்லன மாதிரி பாக்காத ... ”  

கேட் கதவை திறந்துக் கொண்டு ஒருவர் உள்ளே வந்தார். வெள்ளை வேஷ்டி ஜிப்பா நெற்றியில் பட்டை, கையில் தோல்பை என டிரேட்மார்க் கல்யாண தரகர் காஸ்ட்யூமில் காட்சியளித்தார்.

பத்மினியும் ராகவனும் விழுந்து அடித்துக் கொண்டு அவரை வரவேற்றனர். அஸ்வின் ஒரு புன்னகையை அவருக்கு காணிக்கையாக்கினான். பாலா புன்னகையை அவர் கவனிக்காமல் சென்றுவிட்டதால் கொஞ்சம் அவனுக்கு வருத்தம்.

“வாங்க வாங்க உட்காருங்க” என ராகவன் தன் அருகிலேயே அவரை அமர்த்திக் கொண்டான். அவருக்கு குடிக்க கமகமவென சூடான பில்டர் காபி கொடுக்கப்பட்டது. சம்பிரதாய பேச்சு வார்த்தைகளும் ஷேம சமாச்சாரங்களும் அவர்களிடையே நடைபெற்றது.  வெளியே நான்கு கண்கள் லேப் டாப்பை பார்ப்பதுப் போல பாவ்லா காட்ட நான்கு காதுகளும் கூர்மையாக தீட்டப்பட்டு உள்ளே பேசப்படுவதை கேட்டுக் கொண்டிருந்தது.

“எங்க பையன் அஸ்வினுக்கு நிறைய பொண்ணு பார்த்தோம் ஓண்ணும் சரிப்படல” என குற்றபத்திரிக்கையை தாக்கல் செய்ய ஆரம்பித்தாள் பத்மினி

“கவலப்படாதீங்கோ .. என்கிட்ட உங்க பையனுக்கு ஏத்த மாதிரி பொண்ணு இருக்கு .. “ என தரகர் பதிலளித்தார்.

“பொண்ணு எந்த ஊரு?” ராகவன் ஆவலாக கேட்க

“பொண்ணு சென்னைதான் பேரு ரஞ்சனி பி.ஈ கைநிறைய சம்பளம் .. இந்தாங்க போட்டோவும் ஜாதகமும்”

பவ்யமாக வாங்கிக் கொண்டாள் பத்மினி.

“உங்க பையன் ஜாதகத்துக்கு நல்லா சேருது ..... வைஜயந்தி வந்தா போதும்” என்றார் தரகர்

ராகவனும் பார்த்தான் அவனுக்கு பரம திருப்தி

“ஆமா வைஜயந்தி பாத்தா போதும்”  என்றாள் பத்மினி

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பாலா “யாருடா வைஜயந்தி?”

“ம்ம் ...எனக்கு தெரியாதுடா” இது அஸ்வின்

“ நான் சைட்டெல்லாம் அடிக்க மாட்டேன் .. பொண்ணுக்கு அக்காவா இல்ல தங்கச்சியா? உனக்கு சொந்தமா?”

“நீ அடங்கவே மாட்டியாடா“ கோபமாக அஸ்வின்

பாலாவுக்கு மண்டையே வெடித்துவிடும்போல இருந்தது. “எல்லா வக்கணையாதான் பேசுறாங்க .. இந்த வைஜயந்தியோட போன் நம்பர் இல்ல அட்ரசையாவது சொல்லக் கூடாதா .. ” என மனதில் அங்கலாயித்தான்.

அப்போது “பையன்கிட்ட போட்டோ காமிங்கோ அதுக்கு முன்னாடி போட்டோவையும் ஜாதகத்ததையும் சாமி முன்னால வெச்சுட்டு ... சுவாமிய நல்ல வேண்டின்டு காட்டுங்கோ ... அப்புறம் எல்லா வைஜயந்தி கையிலதான் இருக்கு” என்றார் தரகர்.

இதைக் கேட்ட அஸ்வின் மனது “ஐயோ எங்கம்மா சாமி முன்னால போன அரைமணி நேரம் பூஜை பண்ணுவாங்களே ... போட்டோவ எப்ப பாக்க முடியுமோ? ... இந்த தரகர் வாய வெச்சுட்டு சும்மா இருக்க கூடாதா  .. இதுல வைஜயந்தி வேற... அது யாரோ? “ என தவித்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.