2017 போட்டி சிறுகதை 29 - சுந்தரி பெண்ணே…!!! - வசுமதி
This is entry #29 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு
எழுத்தாளர் - வசுமதி
"சுந்தரி பெண்ணே...!!!" எனது முதல் கதை. தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும். உங்க கருத்துக்களுக்காக காத்திருக்கேன் பிரண்ட்ஸ்
கொங்கு தமிழின் உறைவிடமான கோயம்முத்தூரில் உள்ள கலை அறிவியல் கல்லூரி தான் நம் கதையின் களம்.
இளங்காலை பொழுதை ரசித்தவண்ணம் தனது மிதிவண்டியை அந்த கீத்துக் கொட்டகையில் க்ரீச் என நிறுத்திய அடுத்த நொடி பாண்டி யை சூழ்ந்து கொண்டனர் அவன் சகாக்கள்.
"ஏயா பாண்டி! மொதோ வருசம் படிக்கற புள்ளைங்க வர ஆரம்பிச்சிட்டாங்கடா. வாடா அந்த ஆலமரத்துக்கிட்ட போலாம்",என்று அவனை இழுத்து சென்றனர்.
வீரபாண்டின் ராசாத்தியின் சீமந்தபுத்திரன் தான் பாண்டி என அழைக்கப்படும் சுந்தரபாண்டியன். ஊர் தலையின் தலைமகன். நம் கதையின் நாயகன்.
தன் தோழிகளுடன் கலகலவென பேசியபடியே அந்த கல்லூரிக்குள் காலடி எடுத்துவைத்தது ஒரு சிட்டு. அவள் தான் நம் கதையின் மொட்டு திரிபுரசுந்தரி.
"சீக்கரம் வாங்கடி போலாம், சீனியர்ஸ் கிட்ட மாட்டிக்கிட்டம்னா அவ்ளோதான்",என்று பரபரதபடியே நடந்தாள் திரிபுரா.
ஈஸ்வரன் பரமேஸ்வரியின் புதல்வி தான் திரிபுரசுந்தரி. வீட்டில் புலி வெளியில் எலி. படிப்பில் கெட்டி வீட்டில் சுட்டி. குடும்பத்தின் முதல் பட்டதாரி.
இருபாலர் படிக்கும் காலேஜில் ராகிங் இல்லாமல் இருக்குமா??? அங்கும் இங்கும் குழுக்களாக மாணவர் மாணவியர் அமர்ந்து புது வருட மாணவ மாணவிகளை கலாய்த்து கொண்டிருந்தனர்.
அப்படி தான் பாண்டி & கோவிடம் நமது நாயகி & கோ சிக்கினர்.
"ஏ புள்ளைங்களா! அங்கென்ன பராக்கு பாத்துட்டு போறீங்க ?இங்கன வாங்க புள்ளைங்களா", என்று பாண்டியின் சகாக்களின் ஒருவனான சங்கரன் திரிபுரா & கோ வை அழைத்தான்.
அவன் குரலுக்கு பயந்து நாயகி & கோ அந்த ஆலமாரத்திற்கு சென்றனர்.
"என்ன பிள்ளைங்களா மொதோ வருசமா???",என்று சங்கரன் கேட்டதற்கு பூனைக்குட்டி மியாவ் மியாவ் என்பதுபோல் நமது நாயகியும் "ஆமா ஆமாம்", என்றாள்.
சிறுபிள்ளை தனமான இந்த செயலில் கவரப்பட்ட நமது நாயகன் அந்த சுந்தரி பெண்ணை ஒரு சுவாரஸ்யதுடன் கவனிக்க ஆரம்பித்தான்.
"தாத்தா... தாத்தா... என்ன மலரும் நினைவுகளா?? இந்த மரத்த பார்த்தவுடனே எந்த சுந்தரி ஞாபகத்துல வந்தாங்க??",என தனது பெயரன் மித்ரன் கண்ணடித்து கேட்கவும் தான், தான் அந்த ஆலமரத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்துகொண்டார் பாண்டியன்.
"ஆம்" என்பது போல் தன் பெயரனிடம் தலையசைத்த தாத்தா, “எனது சுந்தரி பெண்ணை இங்கு தான் முதலில் பார்த்தேன்",என்றார்.
மித்ரனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள தனது கல்லூரிக்கு வந்த தாத்தா அந்த சிதிலடைந்த ஆலமரத்தை கண்டதும் அதனை நோக்கி சென்றார் அவர் நினைவுகளும் பின் நோக்கி சென்றுவிட்டது.
அந்த ஆலமரம் பாண்டி தாத்தாவை போல் பலரின் நட்பையும் காதலையும் பிரிவையும் தனது கம்பீரம் மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. பல நட்புகளும் காதலும் பூத்தது அதன் அடியிலேயே.
ஒரு ஆலமரத்துக்கு ஏன் இவ்ளோ பில்டப்ஸ்னு பாக்கரீங்களா ??
இந்த நூற்றாண்டின் காபீ ஷாப் தான் கடந்த நூற்றாண்டின் மரத்தடி. அதிலும் ஆலமரத்தடி ரொம்ப பிரசித்தி பெற்றது. பாடசாலையாக இருந்த ஆலமரத்தடி விளையாட்டு தளமாய் மாறி மீட்டிங் ஸ்பாட்டாய் உருமாறி இப்பொழுது ஆலமரத்தை முதல் வகுப்பு பாடப்புத்தகத்தில் மட்டுமே காணமுடிகிறது.
" லவ்ஸ் ஆ தாத்தா ??? என்கிட்ட சொல்லவேயில்ல",வியப்பு மாறாமலே கேட்டான் மித்ரன். இருக்காதா பின்ன , எப்பொழுதும் கம்பீரத்துடன், ஒற்றை பார்வையில் அனைவரையும் வசீகரிக்கும் அவர் ஒரு பெண்ணை நினைத்துக்கொண்டேன் என்று சொன்னால் வியக்காமல் என்ன செய்வான்.
"இந்த ஜெனெரேஷன் பையன்னு நல்லா ப்ரூவ் பண்ற தம்பி நீ. ஒரு பொண்ண பத்தி பேசுனாலே அந்த பொண்ணு லவ்வராதான் இருக்கணும்னு அவசியம் இல்லயே பா. தோழியாகவும் இருக்கலாம் இல்லையா??",என்றார்.
ஆர்வக்கோளாரில் தான் கேட்ட கேள்வியில் உள்ள தவறை உணர்ந்து கொண்டவன், அந்த பெண்ணை பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொண்டு,"சாரி தாத்தா. யார் அந்த சுந்தரி பெண்??”,என்று வினவினான்.
மித்ரன் இவ்வாறு கேட்டதும் தாத்தா மீண்டும் தனது இளமைக்கால நினைவலைக்குள் சென்றார்.
இரட்டை ஜாடையில் சிகப்பு ரிப்பன் கட்டி வெள்ளை தாவணியில் இருந்தவளை கண்டதும் தான் சிறு வயத்தில் பிடித்து விளையாடிய அழகான முயல் குட்டி போல் உள்ளாள் என நினைத்து கொண்டான் பாண்டி.
திரிபுராவை நோக்கி ஒருவன் பாடச்சொல்ல அவள் மிரள்வதை பார்த்த பாண்டி, "பயப்படாத பிள்ள. ராகிங்கரது உங்கள மிரட்றதுக்காக இல்ல. உங்களோட திறமைகளை வெளி கொண்டாரதுக்கும் உங்க பயத்தை போக்கவும் தான்", என்றான்.