2017 போட்டி சிறுகதை 52 - கணவனின் மறுபக்கம் - எஸ்.ஐஸ்வர்யா
This is entry #52 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - கணவனின் மறுபக்கம்
எழுத்தாளர் - எஸ்.ஐஸ்வர்யா
காலைச் சூரியன் தன் கதிர்களை வீசிக்கொண்டிருந்தது... “மணியப்பார்த்தீங்களா..! 6.30 ஆயிடுச்சு...இன்னுமா அப்பாவும் மகளும் தூங்குறீங்க..? இன்னைக்கு ரெண்டுபேருக்கும் லீவா..?...” ஆழ்ந்த உறக்கத்திலிருந்த விக்னேஷ் – மாயா செவிகளைத் துளைத்தது அந்த காலை அலாரம்.
“இதுக்குமேல தூங்கினா அவ்வளவுதான்...அவளே நேரடியா இங்க வந்து கத்துவா...வா செல்லம் எழுந்திரிப்போம் ..” என்று விக்னேஷ் மாயாவை எழுப்பினார்..இருவரும் எழுந்து தங்கள் அன்றாட வேலையைத் துவங்கினர்.
விக்னேஷ்–ரேவதி இருவருக்கும் திருமணமாகி 5 வருடங்கள் கழிந்தன. அவர்களுக்கு நான்கு வயதில் ஒரு அழகான பெண் குழந்தை, பெயர் மாயா.... விக்னேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்.. ரேவதி தான் படித்த படிப்புக்கேற்ற நல்ல வேலையைத் தேடிக்கொண்டிருப்பவள்.. தன் சுய செலவிற்கு எப்போதும் தன் கணவனையே எதிர்பார்த்து நிற்காமல் தனக்குப்பிடித்ததை தானே சம்பாதித்து வாங்கிக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுபவள்.புதிய ஆடை, ஆபரணங்கள், மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி மற்றவர்களுக்குமுன் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டுமென்று எப்போதும் நினைப்பவள்.
விக்னேஷோ ரேவதிக்கு நேர் எதிர்.. அவன், வாழ்வில் தேவையில்லாத செலவுகலைத் தவிர்த்து சிக்கனமாக வாழவேண்டுமென்று நினைப்பவன். தங்கள் அன்றாடத் தேவைகளைத் தீர்த்து, தேவையற்ற செலவுகளைக் குறைத்து, நிம்மதியுடன் வாழ ஆசைப்படுபவன். தன் மகள் மாயாவின் ஆசைகளை நிறைவேற்றி, அவளை எக்குறையுமின்றி வளர்க்க வேண்டுமென்பதைத் தன் இலட்சியமாகக் கொண்டவன்.
எப்போதும் போல விக்னேஷ், அலுவலகம் செல்லும் வழியில் மாயாவை பள்ளியில் விட்டுச் சென்றான். ரேவதி தன் வீட்டுவேலைகள் அனைத்தும் முடிந்தவுடன் லாப்டாப்பை உயிப்பித்துத் தனக்கான வேலையை இன்டர்நெட்டில் வழக்கம்போலத் தேடத்துவங்கினாள். அன்றைக்கும் எப்போதும் போல சரியான வேலை கண்களில் சிக்காததால் எரிச்சலுடன் லாப்டாப்பை ஆப் செய்துவிட்டு வேறு வேலையைப்பார்க்கத்துவங்கினாள்.
வார விடுமுறைகளில் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க இவர்கள் குடும்பமாக வெளியே செல்வதுண்டு.. “ஆமா.....என்ன ஷாப்பிங்கோ..எது கேட்டாலும் ஏதாவது காரணம் சொல்லி இவர் எதையும் வாங்கித்தரப்போறது இல்ல... ச்ச.. வேஸ்ட் ஆப் டைம்..” கணவனை மனத்துக்குள் திட்டினாள் ரேவதி. இதை நேரடியாகவும் விக்னேஷிடம் அவள் பலமுறை சொன்னதும் உண்டு... ஆனால், விக்னேஷ் ரேவதி மேல் என்றுமே கோபப்பட்டதில்லை. காரணம், அவன், அவள் மேல் கொண்டிருந்த பேரன்பு.
விக்னேஷ் தன் குடும்பக் கடமைகளிலிருந்து என்றுமே தவறியதில்லை... தேவையற்ற செலவுகளைக் குறைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சேமிப்பதும் உண்டு.. சிக்கனம் செய்த பணத்தில் மாதாமாதம் தனி சேமிப்பு வைத்துக்கொள்வதும் உண்டு. அது ரேவதிக்கும் தெரியும்.. அவன் அதை மாயாவிற்காக சேமிக்கிறான் என்று நினைத்துக்கொண்டிருந்தாள். தன் கணவனுக்கு இன்னொரு பக்கம் இருக்கும் என்பதை அவள் யோசிக்கவில்லை.. இவளது ஆடம்பர வாழ்விற்கு விக்னேஷ் ஒரு தடையாக இருப்பதாகவே அவள் நினைத்தாள்.
ரேவதி, தன் குழந்தை மாயாவை பள்ளியிலிருந்து அழைத்து வரச் செல்லும்போது தற்செயலாக அவள் தோழி ஆர்த்தியை சந்திக்க நேர்ந்தது..இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். கடைசியாக இருவரும் சந்தித்தது ரேவதின் திருமணத்தில். 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் சந்திக்கிறார்கள்.
“என்னடி எப்படி இருக்க...?நல்ல இருக்கியா?.”
“நல்லா இருக்கேன் ஆர்த்தி.... நீ எப்படி இருக்க? எங்க இந்தப்பக்கம்?..இங்க தான் உங்க வீடு இருக்கா? நான் உன்ன இந்தப்பக்கம் இத்தன நாளாப் பாத்ததே இல்லையே...?”
“நான் நல்ல இருக்கேன் ரேவதி... எங்க வீடு இங்க இல்ல... நான் வேலை விசயமா இங்க ஒரு இடத்துக்கு வந்தேன்... நீ எங்க இந்தப்பக்கம்..? மேரேஜுக்கு அப்புறம் ரொம்பவே மெலிஞ்சுட்டியே.......!.”
“சும்மா கிண்டல்பண்ணாதடி.... நான் அப்படியே தான் இருக்கேன்... என் பொண்ணு மாயாவ ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டுவரப்போயிட்ருக்கேன்.. உன் போன் நம்பர் கொடு.. ஒரு நாள் மீட்பண்ணலாம்..”
இருவரும் தங்களது கைபேசி எண்ணைப் பகிர்ந்துகொண்டு விடைபெற்றனர்.
ஒரு நாள் ரேவதின் கைபேசி ஒலித்தது. திரை ஆர்த்தி என்று காட்டியது..
“சொல்லுடி ..எப்படி இருக்க..? என்றாள் ரேவதி. “நான் நல்லா இருக்கேன்.. நீ இப்போ ப்ரீயா..? நாம மீட்பண்ணலாமா..?” என்றாள் ஆர்த்தி... “ஓ..எஸ்...தாராளாமா..! எங்க வரணும்னு சொல்லு ..” என்றாள் ரேவதி. ஒரு காபி ஷாப் பெயரைச் சொல்லி இருவரும் அங்கே வர முடிவுசெய்தனர். ரேவதி, தன் தோழி எதற்க்காகத் தன்னைப்பார்க்க அழைக்கிறாள் என்பதைப் பற்றி சற்றும் யோசிக்கவில்லை.இருவரும் அந்த காபி ஷாப்பை வந்தடைந்தனர்.
”இன்னிக்குத் தான் என்னைப்பத்தின நினைப்பு உனக்கு வந்துச்சா...? என்ன மீட் பண்ண இப்போதான் உனக்கு டைம் கிடைச்சுதா...?” என்றாள் ரேவதி.
“அதலாம் இல்லடி.... நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் வரச்சொன்னேன்..”
“முக்கியமான விசயமா..? சரி என்னனு சொல்லு..”
“உன் கணவன் எங்க வொர்க் பண்னறாரு..?
“இதுதான் உனக்கு முக்கியமான விசயமாக்கும்..!“ என்று அலுத்துக்கொண்ட ரேவதி, தன் கணவன் வேலை செய்யும் அலுவலகத்தைப்பற்றி ஆர்த்தியிடம் சொன்னாள்.