“ரேவதி... உன் கணவனை நேற்று நான் வேறு ஒரு இடத்தில் பார்த்தேன்..வேலை நேரத்தில் அவர் அலுவலகத்தில் இல்லாமல் எதற்கு அங்கே வரணும்..?” என்றாள் ஆர்த்தி.
குழம்பிய ரேவதி, அதைப் பெரியதாக எடுத்துக்கொள்ளாதவளாய், “அவர் வேற ஏதாவது வேலை விஷயமா வந்திருக்கலாம்... எப்போதுமே அலுவலகத்துலதான் இருப்பாருன்னு சொல்ல முடியாதுல...” என்று சமாளித்துப் பேச்சை மாற்ற முயற்ச்சித்தாள். ஆனாலும், அவளது சிந்தனை எல்லாம் ஆர்த்தி சொன்ன விசயத்தைத்தான் சுற்றிவந்தது. தன் கணவன் மீது சந்தேகம் எழத்துவங்கியது.
அன்று இரவு விக்னேஷ் வீட்டிற்கு வந்தவுடன் , ரேவதி அவனிடத்தில், “ஏங்க..உங்களுக்கு எப்பவுமே ஆபீஸ்ல தான் வொர்க் இருக்குமா இல்ல வெளியவும் போகச் சொல்லுவாங்களா..?” என்றாள்.. என்ன திடீர் விசாரணை என்று மனதில் நினைத்தவன், “ஆபீஸ்ல மட்டும்தான் எனக்கு வேலை இருக்கும்.. என்ன இத்தனை வருசமா இல்லாம இப்போ திடீர்னு இதலாம் விசாரிக்குற..?” என்றான் விக்னேஷ். “இல்ல ..சும்மாத்தான் கேட்டேன்..” என்ற ரேவதிக்கு அவன் மேல் இருந்த சந்தேகம் அதிகரித்தது. மறுநாள் அவன் எங்கெல்லாம் செல்கிறான் என்று பார்க்க அவனைப் பின்தொடர முடிவு செய்தாள்.
மறுநாள், விக்னேஷ் எப்போதும்போல மாயாவை பள்ளியில் விட்டு, அலுவலகம் சென்றான். மதியம் மாயாவை பள்ளியிலிருந்து அழைத்து வர வேறு ஏற்பாடுகளைச் செய்த ரேவதி, அவனைப் பின்தொடர்ந்தாள்.காலை முதல் மாலை வரை அவன் அலுவலகம் வாசலில் அவள் காத்திருந்தாள். மாலை மணி 6. விக்னேஷ் அலுவலகம் விட்டு வெளியேறித்தன் வண்டியைக்கிளப்பிக்கொண்டு புறப்பட்டான்.
ரேவதி அலுவலத்தினுள் சென்று விசாரித்தபோது , தன் கணவன் எப்போதும் வேலை முடிந்து 6 மணிக்கே வீடு திரும்புவார் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. “ஆனால் இவர் வீட்டிற்கு வர 9 மணி ஆகிறதே....இடையில் மூன்று மணி நேரம் இவர் எங்கே போகிறார்..?” என்பதை யோசித்தபடியே நடந்தாள் ரேவதி. “நாளை மாலை 6 மணிமுதல் இவரைப் பின்தொடர்ந்தால் இவர் நம்மிடம் வசமாக மாட்டிக்கொள்வார்..” என்று மனதில் நினைத்தாள்.
மறுநாள் மாலை மணி 6.. விக்னேஷ் வெளிவருவதற்காக அலுவலக வாசலில் காத்திருந்தாள் ரேவதி. வெளியே வந்தவனைப் பின்தொடர்ந்தாள் ரேவதி. அவன் ஒரு அனாதை இல்லத்திற்குச் சென்றான். அங்கே ஒரு குழந்தைக்கு சில புத்தகங்கள், புது ஆடைகள் கொடுத்துவிட்டு, சில மணி நேரம் அங்கே தன் பொழுதைக்கழித்துவிட்டு வீடு திரும்பினான். தினமும் சிலமணி நேரம் இப்படி தன் பொழுதைக்கழிப்பதில் அவனுக்கு ஒரு மன நிம்மதி.
“அந்தக் குழந்தைக்கும், இவருக்கும் என்ன சம்பந்தம்..?“ என்றே அவளது யோசனையெல்லாம் இருந்தன. விக்னேஷ், தனக்கும், மாயாவிற்கும் ஏதோ துரோகம் செய்கிறார் என்று நினைத்தாள் ரேவதி. தன் கணவன் தன்னை இத்தனை நாட்களாக ஏமாற்றிக்கொண்டிருந்தார் என்றும், தன் வாழ்க்கை மொத்தமாக சீரழிந்துவிட்டது என்றும் வருந்தினாள்.
மறுநாள் அந்தக் குழந்தையைப்பற்றிய விவரங்களை அறிய அதே அனாதை இல்லத்திற்குச் சென்றாள். அந்த அனாதை இல்லத்தின் நிர்வாகியிடம் தன் கணவனைப் பற்றியும், அந்தக் குழந்தையைப்பற்றியும் விசாரித்தபோது, “விக்னேஷ் உங்க கணவரா.?? நீங்கதான் ரேவதியா..? வாங்க வாங்க.... உங்க கணவர் எங்க அனாதை இல்லத்திற்கு நிறைய உதவி பண்ணிட்டுவராங்க.. ஹி இஸ் சச்ச கிரேட் பெர்சன்.. உங்க பேருல தான் எல்லா உதவியும் பண்ணிட்டுவராங்க... எங்களுக்கு மட்டுமில்ல இதுமாதிரி இன்னும் நிறைய ஹோம்-க்கு அவரால முடிஞ்ச உதவிய செய்யுறாரு... நீங்க அவர கணவரா அடைய ரொம்ப கொடுத்துவெச்சுருக்கணும்.. நீங்க அவருக்கு எவ்வளவு சப்போர்ட்டா இருந்திருந்தா அவர் இவ்வளவு உதவி செய்யுறாரு... தேங்க்ஸ் மேடம்..” என்று அவர் பாராட்டுக்களைக் கேட்ட ரேவதிக்கு சுருக்கென்று வலித்தது.. தான் இவை எதற்கும் தகுதியற்றவள் என்று நினைத்து வருந்தினாள். மேலும், இத்தகைய உயர்வான நபரை, அன்பான கணவரை மிகவும் கேவலமாக சந்தேகித்ததை நினைத்து அவளை அவளே வெறுத்தாள். தான் செய்த தவறுக்கு மனதார விக்னேஷிடம் மன்னிப்புக்கேட்கவேண்டும் என்று முடிவுசெய்தாள்.
அன்று இரவு தன் கணவர் வீடு திரும்பியதும், “உங்ககிட்டக் கொஞ்சம் பேசனும்” என்றாள். “சொல்லுமா...” என்றான் விக்னேஷ். “ஐ ஆம் ரியல்லி வெரி வெரி சாரி.... நான் உங்களைத் தப்பா நினைச்சுட்டேன்...நீங்க தேவையில்லாத விசயத்துக்கு செலவு செய்யாம இருக்குறத நினைச்சு எத்தனையோ தடவ நான் கோபப்பட்டுருக்கேன்... ஆனா.. இப்போதான் அதோட அர்த்தம் புரிஞ்சுது எனக்கு.. நீங்க இல்லாதவங்களுக்கு உதவி பண்றது எவ்வளவு பெரிய காரியம்..! இனிமே நானும் வேலைக்குப்போய் என்னால முடிஞ்ச உதவியும் உங்களோட சேர்ந்து செய்யுறேன்... உங்களுக்குக் கிடைக்கும் புண்ணியத்துல எனக்கும் கொஞ்சம் கிடைக்கட்டும் ..” என்று உணர்ச்சி பொங்கப்பேசினாள் ரேவதி.
ஆடம்பர வாழ்வில்தான் நிம்மதியும், சந்தோஷமும் இருக்கிறது என்று இன்றுவரை நினைத்திருந்தவளுக்கு உண்மையான சந்தோஷம் எதில் இருக்கிறது என்பதை விக்னேஷ் தன் செயல்களால் புரியவைத்தான். தன் கணவனின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து அவரைத் தன் கணவனாக அடைந்ததற்கு வருந்தியவள், அவளது ஆடம்பர வாழ்விற்கு அவனை ஒரு தடையாக நினைத்தவள், இன்று அவரது மறுபக்கத்தைப் பார்த்து, இப்படி ஒரு நல்ல மனிதனைத் தன் கணவராக அடைந்ததற்கு, தான் பாக்கியம் செய்திருக்கவேண்டுமென்று தனக்குள்ளே பெருமைப்பட்டாள் ரேவதி. நாமும் நம் அன்றாடத் தேவைகள் போக, சிறு சேமிப்பு செய்து, நம்மால் முடிந்த உதவிகளை, இல்லாத ஏழை எளிய மக்களுக்கு செய்து நாம் வாழும் வாழ்விற்கு ஏதேனும் அர்த்தம் சேர்ப்போமாக.....!
This is entry #52 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - கணவனின் மறுபக்கம்
எழுத்தாளர் - எஸ்.ஐஸ்வர்யா
{kunena_discuss:1083}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.