பள்ளி காலம் அவளுக்கு எந்த குறையும் இல்லாமல் நிறைவாகவே முடிந்தது... அடுத்து கல்லூரிக்கு சென்றிருந்தால், அந்த அனுபவம் எப்படி இருந்திருக்குமோ..?? அதற்கான வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவில்லை...
அவள் பள்ளி படிப்பை முடிக்கும் தருவாயில் குடும்பத்தில் கொஞ்சம் கஷ்டமான சூழ்நிலை இருந்தது... அந்த சமயத்தில் தான், தன் தந்தையின் நண்பர் மூலமாக ராமாயிக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது...
அது ஒரு கல்லூரி காதல் கதை... அதில் நாயகன், நாயகியின் நண்பர்கள் வட்டாரத்தில் ஒருத்தியாக நடிக்க வேண்டும்... நகைச்சுவையாக பேசி... எல்லோரையும் கேளி செய்து நடிக்கும் கதாபாத்திரம்... அது அவள் பள்ளியில் இயல்பாய் செய்யும் காரியம் என்பதால்... அந்த கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்தாள்..
பின் அதுபோன்ற கதாபாத்திரங்களே அவளுக்கு அமைந்தது... கூட்டத்தோடு கூட்டமாக நின்று இரண்டு மூன்று வசனங்கள் பேசி நடித்துக் கொண்டிருந்தாள்... பிடிக்கிறதோ... இல்லையோ... ஒரு துறையில் கால் பதித்துவிட்டால், அதில் புகழடைந்து விடும் எண்ணம் தோன்றும் தானே... அப்படித்தான் ராமாயியும் தன் நடிப்பு திறமையை காட்ட முயற்சித்தாள்...
ராமாயி... ரம்யாவாகி நகைச்சுவை நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றாள்... தன் குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு சம்பாதிக்கிறாள்.. தன் தாய், தந்தையரின் எதிர்காலத்திற்கு தேவையானதை இப்போதே சேமித்து வைத்துவிட்டாள்... சொந்தமாக வீடு வாங்கிவிட்டாள்... கார் வைத்திருக்கிறாள்...
திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கட்டுமா..?? என்று பெற்றவர்கள் கேட்டதுக்கு, சம்மதமும் தெரிவித்துவிட்டாள்... தற்போது வெளியாகியிருந்த இரண்டு படங்களில் கொஞ்சம் முக்கியமான கதாபாத்திரம்... அதிலும் ஒரு படத்தில் நாயகியின் கூடவே இருக்கும் பாத்திரம் என்பதால், வெளிநாடு கூட சென்று வந்துவிட்டாள்...
இவ்வளவும் முன்னேறியும் மனதில் ஏதோ ஒரு குறை.. பள்ளிக்காலம் வரை இவளின் புறத்தோற்றத்தை மற்றவர்கள் கேளியாக பேசிக் கேட்டது குறைவு தான்... அப்படி யாராவது பேசினாலும், அதை பெரிதுப் படுத்தமாட்டாள்..
ஆனால் இந்த நடிப்புத் துறையில், ஒரு நகைச்சுவை நடிகையான இவளின் புறத்தோற்றத்தை வைத்து தான் வாய்ப்பே... ஒவ்வொரு படத்திலும் ஒரு வசனித்திலாவது, யாராவது ஒருவர்.. இவளின் தோற்றத்தை, நிறத்தை, அந்த நீள மூக்கை வைத்து கேளி செய்வது போல் காட்சி இருக்கும்...
எப்போதும் போல அதைப் பெரிதுப் படுத்தாத இவளின் குணத்தால் அதை கண்டும் காணாமலும் விட்டாலும், ஏனோ மனதின் ஒரு மூலையில் சிறிய வலி ஏற்பட தான் செய்யும்... தன் நடிப்புத் திறமையால் தான் இந்த முன்னேற்றம் என்றாலும், இந்த தோற்றமும் சேர்ந்து தான் நம்மை இந்த திரைத்துறையில் தக்க வைத்துள்ளது என்று நினைத்து தன்னை சமாதானப்படுத்திக் கொள்வாள்...
இப்படி அவள் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்க... அப்போது தான் பள்ளி விழாவிற்கான அழைப்பு வந்தது... அதுவும் பழைய மாணவர்களும் சந்தித்துக் கொள்ள போகிறார்கள் என்று தெரிந்ததும்... ஏனோ சிறுபிள்ளை போல் உற்சாகமானாள்... திரும்ப அனைவரையும் பார்ப்பதை நினைத்து மகிழ்ந்தாள்... திரும்ப பள்ளிக் காலத்துக்கே போனது போல் ஒரு உணர்வு...
ஆனால் அங்கு சென்றதும் எல்லோரும் இவளை ராமாயியாக பார்க்காமல், ரம்யாவாக பார்த்ததில் அவளின் உற்சாகம் குறைந்தது... அதுவும் ஒருத்தி ராமாயி என்று அழைக்க வந்து ரம்யா என்று அழைத்தது இவளுக்கு என்னவோ போல் இருந்தது...
அவர்கள் அப்படி நடந்துக் கொண்டதை இவள் குறையாக நினைக்கவில்லை... ஆனால் மனதிற்கு அது நிறைவாகவும் இல்லை...
வாழ்க்கை இவளுக்கு நிறைய மாற்றத்தை கொடுத்திருக்கிறது... தோற்றத்திலிருந்து, தன் அந்தஸ்து வரை எல்லாம் மாறியிருக்கிறது... அதேபோல் தான் எல்லோரும் மாறியிருக்கிறார்கள்... ஏதோ ஒரு குறிக்கோளை நோக்கி, வாழ்க்கையில் முன்னேறும் போது, தங்கள் இயல்பையே தொலைத்துவிடுகிறார்கள்...
ராமாயியை விட ரம்யாவை தெரிந்து வைத்திருந்தால், அதில் அவர்களுக்கு ஏதாவது ஆதாயமோ.. இலாபமோ கிடைக்கும்... அப்படியே இல்லையென்றாலும் தாங்கள் ரம்யாவிற்கு தெரிந்தவர்கள் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்... இதில் ஒன்றும் தவறில்லை... அதனால் அந்த விழாவிற்கு சென்றது மனதிற்கு நிறைவை கொடுக்கவில்லையென்றாலும், அவர்களை எல்லாம் சந்தித்து வந்ததில் மகிழ்ச்சியடைந்தாள்...
இருந்தாலும் வாழ்வில் மேலே மேலே முன்னேறி செல்ல வேண்டும் என்று மனம் ஒரு பக்கம் நினைத்தாலும்... இன்னொரு பக்கமோ... திரும்ப பள்ளி பருவக் காலத்துக்கே சென்று விடக் கூடாதா.. என்ற ஏக்கம் அவளுக்குள் இருக்கிறது.
இது அவளுக்கு மட்டும் தோன்றும் எண்ணமல்ல... திரும்ப சிறுவர்களாக மாறிவிட மாட்டோமா என்று, வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் அனைவருமே யோசிப்போம்.
அவரவர் வாழ்க்கையில்...
ஆயிரமாயிரம் மாற்றங்கள்...
அந்த நினைவுகள் நெஞ்சினில்...
திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்...
This is entry #98 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - கதை ஆரம்பத்தில் இருந்து தொடர்க...
எழுத்தாளர் - சித்ரா.வெ.
{kunena_discuss:1083}